ஜீவகாருண்யர்

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிச் சிறப்புண்டு. ‘தமிழ் எனும் அமிழ்தம் பக்தி, இசை, இரக்கம் இவற்றின் மொழி’ என்றார் தனிநாயக அடிகளார். அந்தத் தமிழிசை வளர்த்த நல்லோரில் வள்ளலாருக்குத் தனியிடமுண்டு. என்ன யோசிக்கிறீர்கள்? வள்ளலார் வசனநடை கைவந்த வல்லாளர்; மரபுக்கவிதை மாட்சியர்; சமூக, சமய ஆர்வலர்; சீர்திருத்தவாதி; சமரச சன்மார்க்க ஸ்தாபனாசார்யார்; சித்தர் என்பதெல்லாம் பலரும் அறிந்த உண்மை. அவரது இசைத்தொண்டு பலருக்குத் தெரியாமலிருக்கலாம்! தெரிந்து கொள்ளலாமே!
‘அருளார் அமுதே சரணம் சரணம்
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா யெனை ஆள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்

என்ற எளிய நாமாவளி தந்தவர் வள்ளலார்.
ஒருமுறை சிதம்பரம் கிருஷ்ணய்யர் மகாதேவ மாலையில் ஒரு பாடலை இனிமையாகப் பாடினாராம். வள்ளற்பெருமானும் உடனே தன் இனிய குரலால் ‘பெற்ற தாய்தனை மக மறந்தாலும்’ என விருத்தமாகப் பாடி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினாராம்! அவரே பல பாடல்களை மெட்டமைத்துப் பாடியிருக்கிறார்.
ஆன்மாவை இறைவனோடு இசைவிப்பது இசை! தன்னை மறந்து லயிக்க வைப்பது இசை - பகை மறந்து இணைய வைப்பது இசை. இராமலிங்கரின் பாடல்கள் ஆன்மாவைத் தொடுகின்றன" என்றார் டாக்டர் டி.எம்பி. மகாதேவன்.
‘அம்பலத்தரசே, அருமருந்தே
ஆனந்தத் தேனே அருள்விருந்தே
பொது நடத்தரசே புண்ணியனே!
புலவர் எலாம் புகழ் கண்ணியனே!
அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு
சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
அல்லாத பாட்டெல்லாம் தெருப்பாட்டு!

என்றார் வள்ளலார்.
மணிவாசகரின் திருவாசகத்தில் ‘உந்தீபற’ என்று வரும். பெண்கள் ‘உந்தீ’ எனும் காய் அல்லது கருவியை வீசிப்பாடுவர்.
‘அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற -
அயோத்தியர் கோமானைப் பாடிப்பற’

என்று பெரியாழ்வார் அருளியதும் அவ்வாறே! வள்ளலாரும்,
‘இரவு விடிந்தது இணையடி வாய்த்தன
பரவி மகிழ்ந்தேன் என்றுந்தீ பற
பாலமு துண்டேன் என்றுந்தீ பற’

எனப் பாடுகிறார்.
‘வாரும் வாரும் தெய்வ வடிவேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும்!
புள்ளி மயிலேறி வாரும்!
சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று
சண்முகநாதரே வாரும்
உண்மை விநோதரே வாரும்!’

எளிய மெட்டில் அடங்கும் நற்பாடல்கள்
ஆனந்தக்களிப்பு
‘சிவசிவசிவசிவசம்போ’ என்ற மெட்டு ஆனந்தக் களிப்பு.
‘சிற்பரமாம் பரஞ்சோதி - அருட்
சித்தெலாம் வல்ல சிதம்பர ஜோதி
தற்பர தத்துவ ஜோதி - என்னைத்
தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி

இரு பூக்களை மேலும் கீழும் வைத்து நாரால் கட்டுவது கண்ணி! இரண்டிரண்டு அடிகளால் பாடுவதும் கண்ணியே! தாயுமானவரைப்போல வள்ளலாரும் கண்ணிகள் பாடியுள்ளார்.
நிலவைப் பார்த்துக் காதல் பாட்டுப் பாடுவார்கள். ஞானப்பாட்டுப் பாடினார் இராமலிங்கர்.
‘தன்னையறிந் தின்புறவே வெண்ணிலாவே - ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!

சங்குப்பாட்டு:
மருப்பொசித்த மாதவனின் வாய்ச்சுவையும் நாற்றமும் அறிய விருப்புற்றுச் சங்காழ்வானிடம் கேட்டார் ஆண்டாள். ‘சங்கே முழங்கு’ என்று பாடினார் பாவேந்தர். வள்ளலாரோ - நம்பிக்கைப் பாட்டுத் தருகிறார்.
‘கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே
கனக சபையான் என்று ஊதூது சங்கே!
அச்சம் தொலைத்தான் என்று ஊதூது சங்கே
அம்பலவாணன் என்று ஊதூது சங்கே

என்கிறார்.
கீர்த்தனை
‘வருவார் அழைத்து வாடீ -
வடலூர் வடதிசைக்கே!
வந்தால்
பெறலாமே - நல்ல வரமே!

எனப் பாடுகிறார். ‘வானத்தின்மீது மயிலாடக் கண்டேன்’ என்ற பாடலும் பலர் அறிந்தது.
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ!
இந்தப் பொருத்தம் உலகில் பிறர்க்கு
எய்தும் பொருத்தமோ!-

என்ற பாடலும் பலரும் அறிந்ததே!
பதம்
சுவாமியை நாயகனாகப் பாவித்து ஜீவாத்மா தவிப்பதைப் பாடி, அபிநயம் பிடிக்கும் பாடல் பதம். வள்ளலாராகிய நாயகி, இறைவனை எண்ணிப் பாடிய பதங்கள் உள. தோடி ராகத்தில் அமைந்த பாடல் இதோ:
பல்லவி
தெண்டனிட்டேன் என்று சொல்லடி
சுவாமிக்கு நான் (தெண்டன்)
அனுபல்லவி
தண்டலை விளங்குதில்லைத் தலத்தில் பொன்னம்பலத்தில்
கண்டவர் மயங்க வேடம் கட்டி ஆடுகின்றவர்க்கு நான் தெண்டன்

சரணம்
தாய் வயிற்றில் பிறவாது தானே முளைத்தவர்க்கு
சாதி குலம் அறியாது தாண்டவம் செய்கின்றவர்க்கு
ஏய தொழில் அருளும் என் பிராண நாயகற்கு
ஏமாந்தவரை எல்லாம் ஏமாற்றும் ஈசருக்கு

(தெண்டன்)
ஒன்பது வயதில் கண்ணாடியில் முருகன் காட்சி கண்ட அருளாளர் பாடியதே அருட்பா.
‘தணிகை மலையைச் சாரேனோ - என்
சாமி அழகைப் பாரேனோ?’

என உருகினார். ‘திருமுறைகளுக்கு ஈடாகத் தெய்வத்தன்மை உடையன அல்ல திருவருட்பா’ - என வழக்குத் தொடுத்த ஆறுமுக நாவலரே, வள்ளலார் நீதிமன்றத்தினுள் வந்ததும் எழுந்து நின்றார். அருட் பாடலால் பிசாசை விரட்டினார். விடம் தீர்த்துப் பிழைக்க வைத்தார். கருங்குழியில் பாடல் எழுதிக் கொண்டிருந்தபோது, விளக்குக்கு எண்ணெய் இல்லாதபோது, குவளையிலிருந்த தண்ணீரை ஊற்றி இரவெல்லாம் விளக்கை எரியச் செய்தார். தன் உடம்பைச் சுற்றி வெள்ளை ஆடையால் போர்த்தியிருந்தபோதும், ஒளி வெள்ளம் அவரைச் சுற்றி இருந்தது என்கின்றனர் தொழுவூர் வேலாயுத முதலியார் போன்ற அன்பர்கள்.
விருத்தம், வெண்பா என்று இலக்கண வரம்பில் பாடினால் படித்தவர் மட்டுமே பயன்பெற முடியும். கும்மி, கண்ணி, ஆனந்தக் களிப்பு மெட்டுக்கள் பாமரரிடமும் போய்ச் சேரும் என்றே இசை வடிவங்களைத் தேர்ந்தெடுத்தார் போலும். கிராமத்தில் பெண்கள் இரு கைகளையும் மொட்டுப் போல் குவித்துத் தட்டி வட்டமாக நின்று மேலும் கீழும் அடிப்பதைக் கொம்மி என்றும் கும்மி என்றும் சொல்வர்.
‘குறவர் குடிசை நுழைந்தாண்டி அந்தக்
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி -
துறவோர் வணங்கும் புகழாண்டி - அவன்
தோற்றத்தைப் பாடி அடியுங்கடி!
மாமயில் ஏறி வருவாண்டி அன்பர்,
வாழ்த்த வரங்கள் தருவாண்டி’

தைப்பூச நன்னாளில் ஜோதியில் கலந்தார் - அவர் ஏற்றிய அடுப்பு பசிப்பிணி தீர்க்க தருமச்சாலையில் எரிகின்றது. ‘ பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக’ என உணவிட அமுதசுரபிதான் இல்லை. ஜீவ காருண் யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்ற அருட்பிரகாச வள்ளலார், தீபத்தில் ஒளியாக, பசித்தோர் வயிற்றில் உணவாக, இரக்கம் உள்ளவர் மனமாக என்றும் வாழ்கிறார்!
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை!

Comments