சந்தனமா பூசிப்பாரு!

கிராமத்துக் கடவுள்களில் முன்னிலை வகிப்பவர் ஐயனார். பல கிராமங்களில் ஐயனார்தான் குலதெய்வம். ஐயனாருக்கு ‘பெரியண்ண சாமி’ என்ற பெயரும் உண்டு. கிராமத்தில் பல பிள்ளைகளுக்கு பெரியண்ணன் என்ற பெயர் உண்டு. அப்படி பெயரோடு கலந்துவிட்ட ஐயனார்தான் இவன் வாழ்வுக்குத் தேவையான ஆதாரம் எல்லாத்தையும் தருகிறார். அதைப் பாடலில்...
‘பட்டி பெருக வேணும் ஐயனாரே
பால்பானை பொங்கணும் ஐயனாரே
மேழி பெருக வேணும் ஐயனாரே
மாரிமழை பெய்யணும் ஐயனாரே
யார மறந்தாலும் ஐயனாரே
உசுற காக்கும் உன்னை மறப்பேனா ஐயனாரே’

என்ற ஏற்றப்பாட்டில் உயிரைக் காக்கும் சாமியாக ஐயனாரை தண்டோரா போட்டு அறிவிக்கிறான்.
‘சுகலேசமெண்ணிய சூழ்வினை தீர்க்க துணிந்து
அயனார் அகலாதவன் புடங்கொண்ட
அயமேதவேதியின் மேற் புகலோங்கு...’

என்றெல்லாம் மெத்தப் படித்த புலவர்களால் பாடப்பட்டு இருந்தாலும் அதில் நம்மால் ஒன்ற முடியவில்லை. பழைய பாடல்களில் இடம்பெறும் ஐயனார் சாத்தன், ஐயனார், சாஸ்தா, ஐயப்பன் இவர்கள் எல்லாம் ஒருவர் தானா? ஐயனார் வழிபாடு எப்போது தோன்றியது என்றெல்லாம் படித்த பண்டிதர்கள், ஆய்வாளர் இணையத்தில் இன்னமும் விவாதித்தபடியேதான் இருக்கிறார்கள். ஆய்வு செய்பவர்களால் இறை உணர்வை அனுபவிக்க முடியாது என்பதற்கு பாமரனின் பக்தியால் விளைந்த தெம்மாங்கு பாடல் பெரும் ஆதார ஆவணம் எனலாம்.
‘துட்டு கட்டி வேண்டிக்கிட்டா ஐயனாரே
துஷ்டனுக்கும் அருக்குண்டு ஐயனாரே
மண்ணாலே ரூபம் செஞ்சி
மாவாலே தூபம் ஏத்தி
காணிக்கை இட்டவர்க்கு ஐயனாரே
கண்ணாக நீயிருந்து
பொன்னான வாழ்வு தந்து
எந்நாளும் காத்திடணும் ஐயனாரே’

என்ற நாட்டுப்புற பாடலில் துஷ்டனுக்கும் அருள் புரிவதுதான் கடவுளின் பண்பு. அதை எங்கள் ஐயனார் செய்வார் என்று தீவிரமாக நம்புகிறான். காணிக்கை கொடுத்தால் கண்ணாக இருந்து காப்பார் என்று அறிவிக்கிறான். இந்த நம்பிக்கைதான் அவனை வாழ வைக்கிறது. அவன் தொழிலைப் பெருக்குகிறது. அவன் சந்ததியை நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ள நகர்த்துகிறது. ‘பொன்னான வாழ்வு தந்து எந்நாளும் ஐயனாரே... நீ காப்பாத்துபா’ என்று அவன் ஐயனாரிடம் கெஞ்சவில்லை. மாறாக, ‘காத்திடணும்’ என்று உத்தரவு போடுகிறான். தன் இனத்துக்காரனை, உறவுக்காரனை, குடும்பக்காரனைத்தான் அன்பால் உத்தரவுபோட முடியும். ஐயனார் இந்த மூன்று உறவுக்குள்ளும் இருக்கிறார் என்று அவன் நம்புகிறான். அதனால்தான் அருளைக்கூட அதிகாரமாகக் கேட்டு வாங்கும் வல்லமையை மண்ணின் மைந்தன் பெற்றுவிடுகிறான்.
இந்த அதிகாரத்தை பக்தியினால் மட்டுமே பெற முடியும். இவன் பக்தி நாகரிகமான, புலமைமிக்க, வரையறைக்குட்பட்ட, விதிமுறைக்குக் கட்டுப்பட்ட, நாசூக்கான பக்தி அல்ல. ரத்தமும் சதையுமான, கச்சா பொருளைப் போன்ற அசலான பக்தி. கடவுள் எப்படிப்பட்டவர் என்ற கேள்விக்கு பதில் அவர் எதற்குள்ளும் அடங்காத முதலும் முடிவும் இல்லாதவன் என்பது ஆன்மிகவாதியின் பதில்.
இப்படி ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனை அந்தாதிக்குள் நம் புலவர்கள் அடக்கி விடுவர். அவர்களையும் மிஞ்சி விடுகிறான் நமது நாட்டுப்புறப் பாடகன். எல்லைத் தெய்வம் எங்கே இருக்கும்? ஊரின் எல்லையில் இருக்கும். எல்லையில் இருப்பதால் அதுதான் அதன் எல்லையா? என்ற கேள்வியைக் கேட்டு ஒரு பாடலில் இப்படி வர்ணிக்கிறான்.
‘வெள்ளைக் குதிரையிலே ஐயனாரே
வேகமாய் வந்தருளும் ஐயனாரே
எல்லையில் கோயில் கொண்ட ஐயனாரே
எல்லையுண்டோ உந்தனுக்கு ஐயனாரே’

எல்லையில்லா இறைவன் அவன் எங்கள் எல்லையில் அமர்ந்து எங்களைக் காக்கிறான் என்பது எவ்வளவு அர்த்தபூர்வமான அழகியல்.
ஐயனாருடன் யார் யார் உடன் இருப்பர்? அவரின் படை பரிவாரம் என்ன? ஒரு ஆகம விதிப்படியான கோயிலில் சோமாஸ்கந்தர் வடிவம் இருக்கும். அம்பாள் சிவன் இவர்களுடன் முருகன். மூன்றுவித சக்திகளின் ரூபங்களாக இம்மூவரையும் முன்னோர்கள் வடிவமைத்து உலாவில் கொண்டு வருவர். அதேபோல் ஐயனாருடன் மூன்றுபேர் இருப்பார் என்று விவரணம் காட்டுகிறான் கிராமப் பாடகன்.
‘ஊருக்குக் காவல் தெய்வம் ஐயனாரே
உன்னை விட்டால் தெய்வமுண்டோ ஐயனாரே
ஏராள் வீரருடன் ஏழு கன்னிமார் சூழ
எங்கள் கருப்பசாமி துணையிருக்க
தாராள எண்ணம் கொண்ட
பாராளும் எங்கள் ஐயன்
வாராரோ கொலுமுகம் ஐயனாரே’

- இந்தப் பாடலில் தாராளமான பரந்த மனப்பான்மைக் கொண்டவனே பாராளும் தகுதி படைத்தவன் என்கிறான். நமக்கும் நம் பாராளுமன்ற உறுப்பினராவதற்கான தகுதி தாராள மனம்தானோ என்று யோசிக்க வைத்துவிடுகிறான். இதை ஐயனார் மூலம் எப்படி நாசூக்காகச் சொல்லி விட்டான் என்றே என்னால் வியக்க முடிகிறது.
ஒரு குலதெய்வத்தின் கோட்பாடு என்ன? ஒரு இனக்கடவுள் செயல்பாடு என்ன? ஒரு சாமியின் சாகித்யம் என்ன? ஒரு ஆண்டவனின் இலட்சணம் என்ன? இப்படி அறிவைப் பூசி அபத்தமாகக் கேட்டாலும் எங்கள் கிராம பக்தன் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கிறான்.
‘எல்லையிலே நின்னாரு ஏலேலோ ஏலே
எஞ்சனத்த காப்பாரு ஏலேலோ ஏலே
பொல்லாப்பு செய்துட்டா ஏலேலோ ஏலே
பொங்கி வந்து பொசுக்கிடுவார் ஏலேலோ ஏலே
சட்டுன்னு காலில் விழு ஏலேலோ ஏலே
சந்தனமா பூசிப்பாரு ஏலேலோ ஏலே
தூங்கும்போது ஐயனை நினை ஏலேலோ ஏலே
துக்க ஆவி நெருங்காது ஏலேலோ ஏலே
வெயில்போல ஒட்டிப்பாரு ஏலேலோ ஏலே
வேப்பங்காத்தா குளிர்வாரு ஏலேலோ ஏலே’

உழைப்பவனையும் வெயிலையும் பிரிக்க முடியாது. அவன் உடலோடு ஒட்டிக்கொண்ட கவசம் வெயில். அதைபோல ஐயனாரும் நம்மிடம் ஒட்டிக் கொள்வார். வெயில் வெம்மையாச்சேன்னு கேட்காதே. அவரே வேப்ப மரக் காற்றாக மாறி குளிர்ச்சியைத் தருவார் என்ற ஐயனாரின் பண்பை பட்டியலிடுகிறான். பகல் கடந்து இரவு வந்தால் தூக்கம் சாந்த மானதாய் அமைய வேண்டும். அதற்கு ஒரே வரி ‘ஐயனாரை மனத்தில் இணைத்துக்கொள்; நினைத்துக் கொள்’ என்கிறான். இதைவிட என்னைக் கவர்ந்த வரி எது தெரியுமா?
மனுஷன்னா தவறு சகஜம்தான். நாம திட்டமிட்டா தவறு செய்றோம். ‘தவறி செய்வது தவறு’ என்பது ‘தெரிந்து செய்வது தப்பு’ என்பது. தவறு செய்தவன் திருந்த பாக்கணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும்’ பழைய பாட்டு வரி ஞாபகத்தில் வருகிறதா? இங்கே கிராமியப் பாடகன் ‘சட்டு’னு காலில் விழு என்று தப்பிக்கும் ஜாமீன் வழியைக் காட்டிவிட்டு அப்படி செய்தால் ஐயனார் உன்னை மன்னித்து புது புத்தியைக் கொடுத்து, பின் சந்தனமாக அவர் மீது உன்னைப் பூசிக்கொள்வார் என்கிறான். ஒரு மனிதனை கடவுள் பூசிக்கொள்ளும் என்பது கடவுளுக்கும் மனிதனுக்குமான இடைவெளி அழிந்த கணத்தில்தானே சாத்தியம்? அந்த இடைவெளியை வழிபாட்டுப் பாடலால் அடைக்கும் வசிய யுக்திதான் பக்தி. அவனின் பக்தியை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் இல்லைதானே!

Comments