அண்ணாமலையானுக்கு அரோகரா...

நின்ற இடத்தினின்று நினைத்தாலே முக்தி அளிக்கவல்ல திருத்தலம் திருஅண்ணாமலை.
‘பிரம்மனும், மாலும் பிரானே நான் என்னப்
பிரமன்மால் தங்கள் தம் பேதைமையாலே
பரமன் அனலாப்பரந்து முன்நிற்க
அரன் அடித்தேடி அரற்றுகின்றாரே’

என திருமந்திரம் அண்ணாமலை ஐதீகம் பற்றி அருள்வதைக் காணலாம். சமயக்குரவர்களால் பாடல் பெற்ற திருத்தலம். நடுநாட்டுத் திருத்தலங்களில் ஒன்றாக தேவாரத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவையும் இத்திருத்தலத்தில் உதித்ததே என்பது நினைவுகூரத் தக்கது.
பிரம்ம சோரூபத்தின் அளவிட முடியாத அண்ட சராசரங்களையும் காத்து ரட்சிக்கும் லிங்கமாக அமைந்துள்ளது இந்த மலை. கர்ம, பாவங்களை நீக்கி, முக்தி தரக்கூடிய ஒரே இடம் அருணாச்சலம். அன்னை பார்வதிக்கு மட்டுமின்றி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோருடைய ஐக்கிய சோரூபம் இம்மலை" என்றார் பிரம்மரிஷி ஞானத்தா அன்னை உமாதேவி.
கயிலாயம், கேதாரம், காளஹஸ்தி, குற்றாலம், திருக்கழுக்குன்றம் போன்ற மலைகளில் சிவபெருமான் கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றார். ஆனால், திருவண்ணாமலையில் சிவபெருமானே மலை(கிரி)யாக இருக்கிறார். ஆதாரத் தலம் ஆறில் இது மணிபூரகத் தலம். பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலம். லட்சக்கணக்கான யோகிகளும், சித்தர்களும், ஞானிகளும், சூட்சும சரீரங்களுடன் உலாவரும் தலம். அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வணங்கினாலே ஊழ்வினைகள் தீரும்.
கிரி பிரதட்சிணம் என்பதே ஒரு புனிதச் செயல்தான். இதனால் நல்ஞானம் கிடைக்கும், சான்றோரின் ஆசி கிட்டும். கிரிவலம் செய்யும் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் கூறப்பட்டுள்ளது.
ஞாயிறு : உடல் பிணி நீங்கும். சிவகதி பெறலாம்.
திங்கள்: ஆற்றல் பெருகும். இந்திர வாழ்வு கிட்டும்.
செவ்வாய்: வறுமை, பிறவிப் பிணி, கடன் சுமை நீங்கும்.
புதன்: வித்தைகள் சிறக்கும். தேவராகும் தகுதி வாக்கும்.
வியாழன்: ஞானம் அதிகரிக்கும். குரு பதவி அடையலாம்.
வெள்ளி: விஷ்ணு பதம் கிடைக்கும்.
சனி: நவக்கிரக தோஷம் நீங்கும் என அருணாசல புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கார்த்திகை மாத கிருத்திகை நாளில்தான் பார்வதி தேவி அபிதகுசாம்பாள் என்ற திருநாமம் கொண்டு ஈசனுடன் ஐக்கியமாகி ஜோதியாகக் காட்சி தந்தாள்.
பத்து நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழா சிறப்பு வாந்தது. முதல் நாள் நடைபெறும் கொடியேற்றம் சிவஞானம் பெற்று சரண் அடைவதைக் காட்டுகிறது. இந்த வருடம், நவம்பர் 16 அன்று, முதல் நாள் திருவிழா தொடங்கி, நவம்பர் 25 அன்று பத்தாம் நாள் திருவிழாவன்று தீபம் ஏற்றப்படுகிறது. இந்த பத்து தினங்களிலும் சுவாமி கீழ்க்காணும் வாகனங்களில் வீதியுலா வருவார்.
முதல் நாள் - பஞ்சமூர்த்திகள் மூஷிக வாகனம்,
இரண்டாம் நாள் - இந்திர விமானம்,
மூன்றாம் நாள்- சிம்ம வாகனம்,
நான்காம் நாள் - கற்பக விருட்சம்,
ஐந்தாம் நாள் - ரிஷப வாகனம்,
ஆறாம் நாள் - வெள்ளி ரதம்,
ஏழாம் நாள்- மஹா ரதம்,
எட்டாம் நாள் - குதிரை வாகனம்,
ஒன்பதாம் நாள் - கைலாச வாகனம்,
பத்தாம் நாள் - காலை பரணி தீபம், மாலை மஹாதீபம், இரவு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருள்வார்.
முதன்முறையாக கிரிவலம் செய்வோர் மார்கழியில் தொடங்குவது நல்லது. மார்கழியில் கிரிவலம் செய்வதால் விரும்பியதை அனுபவித்து, இறுதியில் சிவலோகம் சேர்வர். தை மாத கிரிவலம் கோடி பாபங்களை அகற்றும். சிவசாயுஜ்யம் (சிவனுடன் இரண்டறக் கலத்தல்) கிட்டும். அதிகாலை கிரிவலம் வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும். மாலை நேர கிரிவலத்தால் தனம், தானியம் தழைக்கும். நள்ளிரவில் வலம் வந்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும்.
சித்திரை மாத அமரபட்ச சதுர்த்தசி அன்று காலை நீராடி வலம் வந்தால் சிவரூபமுற்று வாழ்வர். ஐப்பசி, கார்த்திகை மாத கிரிவலம் சிறந்தவை. சித்திரை முதல் நாளிலும், மாசி மாத மகாசிவராத்திரியிலும் வலம் வருதல் விசேஷம். ஒவ்வொரு மாத கிருத்திகை மற்றும் பௌர்ணமி தினத்திலும் வலம் வருவது சிறப்பு.
திருவண்ணாமலையை மூன்றுமுறை வலம் வருதல் விசேஷம். இதனால், ஆயிரம் ஆலயங்களை வலம் வந்த பலன் கிட்டும். கிரிவலத்தின்போது உள்ளன்புடன் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும். வண்டி, வாகன கிரிவலம் சிறப்பன்று. கிரிவலம் வரும்போது செருப்பு அணிவதோ, குடை பிடிப்பதோ கூடாது. நடைப் பயணமே சிறந்தது.
திருவிழா என்பதே அனைவருக்கும் இறைவன் தன் கருணைக் கடாட்சத்தால் அருள்பாலிக்கும் காலம் என்பதுதானே. ஆகவே, திருவிழாக்களுக்குச் சென்று இறைவனைக் கண்ணார தரிசித்து, வழிபட்டு அருள் கடாட்சம் பெறுவோம்.

Comments