உத்ஸவ மூர்த்திகள்!

திருப்பதி திருமலையில் திருவேங்கடவன் மட்டுமின்றி, அவரருகில் உள்ள வேறு சில மூர்த்திகளைக் குறித்தும் நாம் அறிவது அவசியம். அவ்வண்ணம் முதலில், போக ஸ்ரீ நிவாஸரைத் தரிசிப்போம்.
போக ஸ்ரீ நிவாஸர்: இவருக்கு மணவாளப்பெருமாள் என்று பெயர். 18 அங்குல உயரமுள்ள இந்த வெள்ளி ஸ்ரீ நிவாஸ விக்கிரகத்துக்கு தினமும் இரவு ஏகாந்த ஸேவை நடைபெறும். கி.பி.614ல் கடவன் பெருந்தேவி என்கிற பல்லவ ராணி சமர்ப்பித்த விக்கிரஹம் இது. தினமும் காலையில் இந்த போக ஸ்ரீ நிவாஸருக்கு ஆகாஸ கங்கா தீர்த்தத்தால் திருமஞ்சனம் நடைபெறும். மேலும், புதன் கிழமைகளில் இவருக்கு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறும். மார்கழியில் மட்டும் ஏகாந்த ஸேவையில், போக ஸ்ரீ நிவாஸருக்குப் பதிலாக வெண்ணெய் கிருஷ்ணன் இருப்பார்.
கொலு ஸ்ரீ நிவாஸன்: இரண்டடி உயரமுள்ள இவர் பஞ்சலோக மூர்த்தி. பலிபேர மூர்த்தியாக இவர் அழைக்கப்படுகிறார்.
கி.பி.826ல் ப்ரதிஷ்டை ஆனதாக நம்பப்படுகிறது. தினமும் காலையில் தோமால ஸேவைக்குப் பிறகு தங்க சிம்மாசனத்தில் இவரை எழுந்தருளப்பண்ணி கொலு நடைபெறுகிறது. இவர் திருமுன்பு திதி, வாரம், நட்சத்திரத்துடன் கூடிய பஞ்சாங்கத்தைப் படிப்பார்கள். பிறகு முதல் நாள் சாயங்காலம் வரை தேவஸ்தான உண்டியலில் வசூலான தொகை பற்றிய விவரங்களையும், அன்னதானம் செய்வோர் பெயரையும் படிப்பார்கள். பிறகு கொலு ஸ்ரீ நிவாஸப்பெருமாளுக்கு வெல்லம் கலந்த எள்ளை நைவேத்தியம் செய்வார்கள். இந்தக் கொலு ஸேவை ஏகாந்தமாக நடைபெறும்.
உக்ர ஸ்ரீ நிவாஸர்: இவர் ஸ்நபன பேரம் என்றும் அழைக்கப்படு கிறார். 'வேங்கடத் துறைவார்க்கு நமவென்னலாம் கடமை’ (திருவாய்மொழி 3.3.6) என ஸ்வாமி நம்மாழ்வார் பாசுரமிட்டு பாடிய வேங்கடத் துறைவார் இவரே. சூரிய கிரணம் இவர் மேல்  பட்டால், உக்ரத்வம் ஏற்படுமாம்! வெகு காலத்துக்கு முன்பு திருமலையில் மூலவருக்கு உத்ஸவ மூர்த்தியாக எழுந்தருளியிருந்தவர் இவரே! ஏதோ ஒரு முறை, பிரம்மோத்ஸவத்தின்போது இவரை எழுந்தருளச் செய்தபோது, திருமலையில் பயங்கரமான சூழல் ஏற்பட்டு உத்ஸவம் நின்றுவிட்டதாம். வருடத்தில் ஒரு நாள் மட்டும் அதாவது கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசி (கைஸிக த்வாதஸி) அன்று இரவு 2.30 மணிக்குக் கோயிலைவிட்டு வெளியே கிளம்பி, 3.30 மணிக்குள் கோயிலுக்குள் எழுந்தருளப்பண்ணி விடு கிறார்கள். பிரம்மோத்ஸவம் முடிந்து துவாதஸாராதனம் நடக்கும் போதும், மஹா சம்ப்ரோக்ஷணம் நடக்கும்போதும் இவருக்கு ஆலயத்தில் திருமஞ்சனம் ஆராதநம் நடக்கும்.
உத்ஸவ ஸ்ரீ நிவாஸர்: மலையப்ப ஸ்வாமி என்றும் மலை குனிய நின்ற பெருமாள் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். உத்ஸவ பேரம் இவர். கி.பி.1339ம் வருடம் முதல் மலையப்ப ஸ்வாமி பற்றிய குறிப்பு காணப்படுகிறது. திருமலையில் 'மலையப்பகோன’ என்கிற இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மூர்த்திகளைக் கொண்டு வந்து ஆனந்தநிலையத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு அர்ச்சகர்களுக்கு கனவில் மூலவர் கூறியதாகவும், அவர்களும் அவ்வாறே செய்ததாகவும் கூறுகிறார்கள். எல்லா உத்ஸவங்களும் இவருக்கே நடக்கிறது.
சக்ரத்தாழ்வார்: இரண்டடி உயரம் கொண்ட இவருக்கு பிரம்மோத்ஸவத்தின்போதும், ரத சப்தமி, அனந்த பத்மநாப சதுர்த்தசி தினங்களிலும் உத்ஸவம் நடக்கிறது. பிரம்மோத்ஸவத்தின் 9வது நாள் காலை சக்ரஸ்நானம் (தீர்த்தவாரி) இவருக்கு நடக்கிறது.  இந்த வைபவம் வராஹப்பெருமாள் சந்நிதியில் இது நடக்கிறது.
ஸ்ரீ சீதா ராம, லட்சுமணர்: ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் உடையவருக்குக் சமர்ப்பித்த விக்கிரஹங்கள் இவை. உடையவர் திருமலையில் பிரதிஷ்டை செய்வித்தார். பிரதி மாதம் புனர்வஸு வஸந்தோத்ஸவம் (சித்திரை மாதம் நடைபெறுவது), தெப்போத்ஸவம் ஆகியன இவர்களுக்கு நடைபெறுகிறது.
ஸ்ரீ ருக்மிணி  ஸ்ரீ கிருஷ்ணன்: வெள்ளி விக்ரஹம். மாதம்தோறும் ரோகிணி, வஸந்தோத்ஸவம், தெப்போத்ஸவம், கிருஷ்ணாஷ்டமி தநுர் மாதம் பூராவும் ஏகாந்த ஸேவை இவருக்கே.
 ஊ னேறு செல்வத்துடற்பிறவி யான் வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்கமிடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடைய னாவேனே
- குலசேகராழ்வார்

Comments