நெல்லை - களக்காடு கற்பகவல்லி அம்பாள்

பிள்ளை வரம்...

திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தென்றல் வீசும் ரம்மியமான இடத்தில் அமைந்துள்ளது களக்காடு. இங்கே அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீகற்பகவல்லி அம்பாள்.
கோயில் வரலாறு:
வீரமார்த்தாண்ட மகாராஜா எனும் மன்னன் கட்டிய கோயில் இது. ஒருமுறை, கர்ப்பிணி ஒருத்தி இந்தக் கோயிலில் நடைபெறும் வைகாசி தேரோட்ட வைபவத்தைக் காண வந்தாள். வழியில், வயல்வெளியில் வலியால் துடித்து அழுதாள். உடனே ஸ்ரீகற்பகவல்லி அம்பாள், அந்தப் பெண்ணின் தாயாரின் உருவில் அங்கு வந்து, அந்தப் பெண்ணுக்கு அங்கேயே பிரசவம் பார்த்தாள். பின்னர், வந்தவள் அம்பாளே என்று தெரிந்ததும், திகைத்துப் போனார்கள் ஊர்மக்கள்.
அதையடுத்து, அம்பாளின் திருவிக்கிரகத்தை எடுத்து, ஊருக்கு வடக்கில் எல்லைக் காளியாக வைத்து வணங்கத் துவங்கினார்கள். அம்பாளும் அன்று முதல் இன்றளவும் ஊரின் எல்லையில் இருந்தபடி, உலக மக்களைக் காத்தருள்கிறாள். அத்துடன், பிள்ளை இல்லையே என ஏங்கித் தவிப்பவர்களுக்குக் குழந்தைச் செல்வத்தை வழங்கி அருள்கிறாள்.
பிள்ளை வரம் தருவாள்!
திருமணமாகிப் பல வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லையே எனக் கலங்கி அழுபவர்களின் கண்ணீரைப் போக்கும் ஆலயம் இது. இங்கு வரும் தம்பதிகளை சந்நிதிக்கு முன்னே அமர வைத்து, மகா அனுக்ஞை பூஜை, சங்கல்பம், அஷ்டோத்திரம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டு, வலம்புரிக்காய், இடம்புரிக்காய், ஜாதிக்காய், கடுக்காய் என 54 வகை மூலிகைகளைக் கொண்டு ஹோமங்கள் செய்யப்படுகின்றன.
பிறகு, கணவனும் மனைவியும் புது வஸ்திரம் அணிந்துகொண்டு, அம்பாளுக்கும் கோயிலில் உள்ள ஸ்ரீநாகராஜா மற்றும் நாகராணி சிலைகளுக்கும் 21 வகை அபிஷேகங்கள் செய்து, மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், அடுத்த வருடமே வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் எனப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் சொல்கின்றனர் பக்தர்கள்.
சிறப்பு வழிபாடு:
பொதுவாக, அம்பாளுக்கு உகந்த செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளைவிட, இங்கு ஞாயிற்றுக்கிழமைதான் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆயில்ய நட்சத்திர நாளில், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
சுகப்பிரவசம் நிச்சயம்!
கர்ப்பிணிகள் ஒருமுறையேனும் இங்கு வந்து ஸ்ரீகற்பகவல்லி அம்பாளை வணங்கிச் சென்றால், அவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழும் என்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள். அதனால்தான், குழந்தை வரம் பெற்றவர்களும், சுகப்பிரசவம் கண்டவர்களும் பெரும்பாலும் தங்கள் குழந்தைக்குக் கற்பகம், கற்பகவல்லி என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர்.

Comments