ஞான ரூபிணி

கண்களைக் கவர்கிறது அம்பிகையின் அமர்ந்த திருக்கோலம். பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். நான்கு திருக்கரங்கள். சின்முத்திரை, ஜபமாலை, கெண்டி, ஏடு ஆகியவை தேவியின் திருக்கரங்களை அலங்கரிக்கின்றன. திருமேனியில் பல்வேறு ஆபரணங்களைத் தரித்திருக்கிறாள். மலர் மாலைகள் அன்னையை அடைந்த நிறைவை வெளிப்படுத்துகின்றன. அம்பிகையின் நயன நதிகளிலிருந்து அருள் வெள்ளம் பிரவாகித்து வழிகிறது. சிரசில் சந்திரகலை ஒளிர்கிறது.
இந்தத் திருக்கோலமே அன்னை சகல வித்யா ஸ்வரூபிணி, ஞானஸ்வரூபிணி என்பதை புலப்படுத்துகிறது. இவள்தான் சாரதை. கரத்தில் பச்சைக் கிளி ஒன்றையும் காண்கிறோம். ஆசார்ய சங்கரர், மண்டன மிச்ரர் இல்லம் செல்ல அடையாளம் கேட்டபோது, அங்கிருந்த பெண்கள் ‘பெண் கிளிகள் எந்த வீட்டில் தர்க்க சாஸ்திரம் பேசுகின்றனவோ அந்த வீடுதான் மண்டனரின் இல்லம்’ என்று சொன்னதாக, சங்கர சரிதத்தில் படித்ததை நினைவு கூர்கிறோம்.
அதன் தொடர்ச்சியாக, மண்டனனரை ஆசார்யர் வாதப்போரில் வென்றதும், அதையடுத்து அவர் தேவியான சரசவாணி வாதம் புரிந்து தோற்றதும் இன்னொரு சுவாரஸ்யம். பிறகு, கலைமகளின் அவதாரமான அம்பிகை ஆசார்யரைத் தொடர்ந்து நடந்ததும், அவர் வேண்டிக்கொண்டபடியே சிருங்கேரியில் கோயில் கொண்டு எழுந்தருளியதும் அபூர்வ வரலாறு.
இப்படி ஞானமே வடிவான அம்பிகையை நவராத்திரியில் வழிபடுவது மிகச் சிறப்பானது. நவராத்திரியின் தத்துவமே தீமைகளில் இருந்து விடுபட்டு, ஆனந்தத்தில் திளைத்து, ஞானத்தில் சேர்வது தானே?!
ஞானம் என்பதுதான் எல்லாவற்றுக்கும் எல்லை நிலம். அதை அடைந்த பிறகு, அடைய வேண்டியது என்று எதுவுமே இல்லை. ஆனால், அதை அடைவதற்கு முன், மனித வாழ்வின் ஆசாபாசங்கள், போராட்டங்கள், கவலைகள், எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் என்று எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள்தான் எத்தனை? கவலையினால் இளைத்தும், களைத்தும், தளர்ந்தும் போன மனத்துக்கு ஆறுதலும், தேறுதலும் தர அன்னையைத் தவிர வேறு யாரால் முடியும்?
அப்படி பக்தர்கள் பிரார்த்திக்கின்ற அனைத்தையும், அவர்கள் வேண்டியவண்ணம் அனுக்கிரகிப்பவள் ஸ்ரீ சாரதாம்பாள் என்கிறது இந்த ஸ்லோகம்.
‘யா சாரதாம்பேத்யபிதாம் வஹந்தீ
க்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி |
அத்யாபி ச்ருங்கேரிபுரே வஸந்தி
வித்யோத்தேண்பீஷ்டவரான் திசந்தி ||’

சாரதாம்பாள் என்கிற திருநாமத்தைக் கொண்டு துலங்குபவள்; தாம் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி வருபவள்; இன்றும் சிருங்கேரியில் வாசம் செய்பவள்; அவள் பக்தர்கள் பிரார்த்திக்கும் அனைத்தையும் அருள்பவளாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள் என்பது இதன் பொருள்.
கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள அழகான மலைத்தலம் சிருங்கேரி. பளிங்குபோல தெள்ளிய தண்புனலைக் கொண்டு இந்தப் பகுதியின் அழகை மேலும் வசீகரமாக்குகிறது துங்கா நதி. அதன் அடியாழத்தில் கிடக்கும் கற்களும் தெரியும்படியாக சலசலக்கிறது. இங்குதான், கருவுற்ற தவளைக்கு, தன் படத்தை உயர்த்தி நிழல் கொடுத்தது ஒரு நாகம். அதை, படித்துறையில் கற்சிலை வடிவில் இன்றும் காண்கிறோம். தெய்வீகம் எங்கே ஓங்கியிருக்கிறதோ, அங்கே உயிரினங்கள் அனைத்துக்குள்ளும் பரம காருண்யம் பெருகியிருக்கும்.
அப்படியான ஒரு அடையாளமாகவே துலங்குகிறது சிருங்கேரி. இங்கேதான், அருள்விளக்கமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறாள் ஸ்ரீ சாரதாம்பாள். இந்த நவராத்திரி காலம், அன்னை சாரதையை ஆராதிக்கும் ஞானத்தை நமக்கு வழங்கட்டும்; அன்னையின் திருவிழி நம் அனைவருக்கும் பேதங்கடந்த ஞானத்தை அருளட்டும்.

 

Comments