கம்பன் வழிபட்ட காளி

அந்தப் பெரியவர் மெல்ல நடக்க ஆரம்பித்தார். அதிகாலை வேளையின் குளிர்ச்சியும், பறவைகளின் இன்னிசையும் அவர் மனதைக் குளிர்வித்தன. மெல்ல அவர் பார்வைக்குப் பச்சைபசேல் என்ற வயல்கள் தென்பட ஆரம்பித்தன. இனிய தென்றல் காற்றில் அவை அசைந்தது கண்களுக்கு ரம்மியமாக இருந்தது. அவருடைய வயலில் பெண்கள் நாற்று நட்டுக் கொண்டிருந்தனர். கண்களை குறுக்கி உற்று நோக்கினார். அப்பெண்களுக்கு நடுவே அந்த உருவம் அவர் கண்களுக்குப் புலப்பட்டது.
வரப்பின் மேல் நின்ற அவர் திருவெண்ணெய் நல்லூர் வள்ளல் சடையப்பர். மெலிந்த தேகம், நாற்று நடுவதற்கு வசதியாக ஏற்றி கட்டப்பட்ட வேட்டி, குனிந்த தலை நிமிராமல் வேலை செய்து கொண்டிருந்த அந்த இளைஞனை அழைத்தார். அவரின் குரல் கேட்ட இளைஞன் வேகமாகக் கைகளை கழுவிக் கொண்டு அருகில் வந்தான். இருவரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்த வயல்களின் நடுப் பகுதிக்கு வந்தனர். அங்கு திறந்தவெளியில் இருந்தாள் சடையப்பரின் இஷ்ட தெய்வமான காளி.
இளைஞன் அங்கு ஏற்கெனவே பறித்து வைத்திருந்த மலர்களால் காளியை அலங்கரித்தான். பின், மணி ஒலிக்க பூஜை செய்தான். மனமுருக காளியை வேண்டிய சடையப்பர் மெல்ல செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“நாளை முதல் உனக்கு தமிழும் சமஸ்கிருதமும் சொல்லித் தர ஏற்பாடு செய்துள்ளேன். சந்தோஷமா?” என்றார். இளைஞன் சந்தோஷமாக தலை அசைத்தான். சில நாட்களுக்கு முன் அவனிருந்த நிலையை நினைத்துப் பார்த்தான். அன்னையோடு பிழைப்புக்காக தேரழுந்தூரிலிருந்து திருவெண்ணெய் நல்லூர் வந்த அவனை, அன்போடு அரவணைத்து அவனுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு மொழிகள் படிக்கவும் ஏற்பாடு செய்த சடையப்பரின் பேரன்பை எண்ணி அவன் கண்கள் பனித்தன.
உவச்சர் குலத்தில் பிறந்த அவ்விளைஞனுக்கு காளி இருக்குமிடமே உகந்த இருப்பிடமாயிற்று. அவளின் நற்கருணையால் மொழிகள் விரைவில் வசப்பட்டன. தமிழில் கவி பாடவும், சமஸ்கிருத பாடல்களைப் படித்துப் பொருள் சொல்லவும் அவன் கற்றான். ஆசிரியர்கள் சடையப்ப வள்ளலிடம், ‘இவ்விளைஞன் காளியின் அருள் பெற்றவன். அதனால்தான் அவனுக்கு இவ்வளவு விரைவில் மொழிகள் சித்திக் கின்றன. கவி சிறக்கிறது’ என்றனர். சடையப்பர் மனம் மகிழ்ந்தது. வெகு நாட்களாக அவர் மனதில் இருந்த ஒரு எண்ணத்தை அவ்விளைஞனிடம் வெளிப்படுத்த சமயம் வந்து விட்டது என்று உற்சாகம் கொண்டார்.
இளைஞனை தேடி வந்தார். அவன் வழக்கம் போல் காளி சிலை இருந்த மேடையின் மேல் அமர்ந்து கொண்டு, அவளிடம் தான் எழுதிய கவிதையைப் படித்து சொல்லிக்கொண்டு இருந்தான். ‘எப்படி இருக்கிறது? உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று அவன் கேட்க, காளியின் மேல் இருந்த மலர்கள் சட சடவென்று உதிர்ந்தன. “அதுதானே பார்த்தேன். நீ சொல்லிக் கொடுத்தது. உனக்கு விடுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் அவ்விளைஞன்.
சடையப்பர் மெல்ல முறுவலித்தார். அருகில் சென்றார். இளைஞன் அவரைக் கண்டதும் எழுந்து நின்றான். “உட்கார். உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்” என்றார். இளைஞன் குழப்பத்துடன் நின்றான்.
சடையப்பர், “என் நீண்ட நாள் ஆசை, வால்மீகி சமஸ்கிருதத்தில் செய்த ராம காதையை தமிழில் இயற்றிப் பாட வேண்டும் என்பது” என்றார்.
“நல்ல விஷயம் அய்யா. 24,000 பாடல்களில் ராமனின் கதையை அவர் விவரிப்பது கேட்டு உள்ளம் உருகுகின்றதே” என்றான் இளைஞன்.
“நீதான் இந்தக் காரியத்தை செய்ய வேண்டும்” என்றார் சடையப்பர். “நானா?” அதிர்ச்சியுடன் கேட்டான் இளைஞன். “ஆம். உன்னால் முடியும். நாம் வணங்கும் காளி துணை புரிவாள்” என்றார் சடையப்பர்.
இளைஞன் நெடுஞ்சாண்கிடையாக சடையப்பரை விழுந்து வணங்கினான். அன்போடு அவனைத் தூக்கி நிறுத்தி ஆசிர்வதித்தார் அவர். இருவரும் காளியை நோக்கிக் கரம் குவிக்க, அவள் புன்முறுவல் பூப்பது போல் இருந்தது.
அன்று ஆரம்பமானது தமிழில் மிக உன்னதமான ராம காதை. அதை இயற்றிய இளைஞன் கவி சக்கரவர்த்தி என்று பின்னாளில் அழைக்கப்பட்ட கம்பன். கம்பராமாயணத்தின் பெரும் பகுதி திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள சடையப்ப வள்ளலின் வயலின் நடுவே காளி தேவியின் சன்னிதியில் இயற்றப்பட்டது. அப்படி, ராமாயணம் எழுதும் புலமை பெறச் செய்த காளி, இன்றும் அதே இடத்தில் வீற்றிருக்கிறாள். திறந்தவெளியில், வேப்ப மர நிழலில், வயல்களின் நடுவே கம்பன் காலத்தில் எப்படி இருந்தாளோ, அப்படியே காட்சி தருகிறாள். அருகில் விநாயகருக்கும் முருகனுக்கும் சமீபத்தில் எழுப்பப்பட்ட புது சன்னிதிகள்.
கம்பனுக்கு கல்வியை வழங்கியது போல் தங்களுக்கும் வழங்க பிரார்த்தனை செய்ய பல குழந்தைகள் இங்கு வருகிறார்கள். காளியின் முன்னே உள்ள மேடையில் அமர்ந்து தங்கள் பாடங்களை வாய்விட்டுப் படிக்கின்றனர். காளியை வணங்கி, அவள் ஆசியைப் பெற்று கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.
செல்லும்வழி:
விழுப்புரத்தில் இருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக திருக்கோவிலூர் செல்லும் பேருந்துகள் ‘சின்ன செவலை’ நிறுத்தத்தில் நிற்கும். அங்கிருந்து சுமார் 200 மீட்டர் நடந்து சென்றால் காளி இருக்கும் இடத்தை அடையலாம். பகலில் எந்த நேரமும் காளியை வழிபடலாம்.

Comments