நாம ஜபம்

நாம எல்லாருமே பலவிதமான பாவங்களை தினமும் செய்துகொண்டேதான் இருக்கோம். சரி; அதைப் போக்கிக்க என்ன பண்ணணும்? பாவங்களை போக்கிக்கணும்னா, அதுக்கு பாகவதம் தெரிய வேண்டாம்; சிவபுராணத்தைப் படிக்க வேண்டாம்; இந்த ஸ்லோகம், அந்த ஸ்லோகம்னு ஸ்லோகங்களை எல்லாம் சொல்லிண்டு இருக்க வேண்டாம். ஹரி நாமத்தை பக்தி சிரத்தையா ஜபம் பண்ண வேண்டும். ஹரி ஹரினு அப்பப்போ கூப்பிடலாமே, அது ஈஸிதானே" என்றார் ‘திருமால் மகிமை’ என்ற தம் சொற்பொழிவில் கோபாலசுந்தர பாகவதர்.
இந்த ஸ்லோகம்
சொல்லலாமா? இந்த நாமத்தை சொல்லலாமா? இந்த புராணத்தைப் படிக்கலாமா?னு நமக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வருது. குறிப்பா, கருட புராணம் பத்தி எல்லாருக்குமே சந்தேகம்தான். மஹாளய பட்சம் சமயத்தில் கருட புராணத்தைப் படிக்கலாம்; தப்பில்லை. எவ்வளவோ ஜபம் பண்ணி, தவம் பண்ணியும் நினைச்ச பலன் எதுவுமே கிடைக்கலியா? மனசுல நிம்மதி வரலியா? கிருஷ்ணான்னு சொல்லுங்கோ போதும். வெளிநாட்டுக்காரர்களால் இந்த கிருஷ்ணாங்கற வார்த்தையை சரியா உச்சரிக்கவே முடியாது. ராமாங்கற நாமத்தை உச்சரிக்க முடியாது. எவ்வளவோ கஷ்டப்படுவா இந்த ரெண்டு நாமத்தையும் சொல்ல. நமக்கு அப்படி இல்லையே? ராமா, கிருஷ்ணான்னு நம்மால நல்லா சொல்ல முடியும். ஆனா, நாம சொல்றதில்ல.
நாராயணாங்கற நாமத்துலேர்ந்து ராவையும், நம சிவாய என்கிற நாமத்துலேர்ந்து மாவையும் சேர்த்து வந்ததுதான் ‘ராமா’ங்கற நாமம். இந்த ரெண்டு நாமாவுலேயும் இருக்குற மத்யமம் உருவாக்கியதுதான் ராம நாமம். மத்யமம் போச்சுன்னா எல்லாமே போச்சு. மத்யமம் என்பது ரொம்ப விசேஷமான ஒரு விஷயம்.
ஸ்ருதில கூட அதுக்கு ஒரு தனி இடம் உண்டு. நாம பல விஷயங்களை அர்த்தம் சரியா தெரியாமலேயே பேசிண்டு இருக்கோம். Catch பிடிச்சிட்டான் பாரேன், salt உப்பு போட்டுக்கோங்கோ, நடு centreக்கு போங்கோன்னு பேசறோம். அந்தக் கால பெரியவா நமக்கு வெச்சிருக்குற பழக்க வழக்கத்தோட அருமை, பெருமைகளைப் பத்தியும் சரியா தெரிஞ்சுக்காமதான் போட்டு குழப்பிக்கறோம். மாசத்துல ரெண்டு நாளாவது குறைஞ்சது விரதம் இருக்கறது நல்லது. நம்மால வருஷத்துல ரெண்டு நாள் விரதம் இருக்கறதே இப்பவெல்லாம் முடியாத காரியமா மாறிடுத்தே...
சிராத்தத்தைக் கூட சிரத்தையா பண்ண மாட்டேங்கறா நிறைய பேரு. சூரியன் உச்சத்துல வர்றதுக்கு முன்னாடி சிராத்த காரியங்களை நாம் முடிக்கக் கூடாது. காலைல ஒன்பது மணிக்கெல்லாம் சிராத்தத்தை முடிச்சுட்டு ஆஃபீஸ் போறவா எத்தனை பேரு தெரியுமா? ‘என்னது 12 மணி வரைக்கும் சாப்பிடாம இருக்கணுமா, நோ வே’ங்கறா பலர். அவசர அவசரமா சிராத்தத்தை முடிச்சுட்டு நெத்தில இட்டுண்டு இருக்கறத அழிச்சுட்டு, பேண்ட் ஷர்ட் எல்லாம் போட்டுண்டு ஆஃபிஸ்க்கு கிளம்பறா. ‘நெத்திக்கு இட்டுண்டு போனா கூட வேலை பாக்கறவா என்னைப் பத்தி என்ன நினைச்சுப்பா’ன்னு அதுக்கு ஒரு explanation வேற.
‘கலியுகத்துல பக்தியே பண்ண முடியலியே. உடம்பு வேற அதுக்கு ஒத்துழைக்க மாட்டேங்கறதே’னு சொல்றவா நிறைய பேரு. மனசு ஒன்றி பண்றதுதானே பக்தி? ஒன்பது விதமான பக்திகள்ல ஸ்ரவணத்தை பண்ணலாமே. காதால் பகவத் நாமாவை கேட்கலாமே. பார்க்ல போயி நடந்தா உடம்பு சௌகரியம், மனசு சௌகரியம் எல்லாம் வருமா? வராது. கோயில்களுக்கு போய் உட்காரணும். அங்க இருக்கற அதிர்வுகளை உள்வாங்கிக்கணும். பகவான் விடற மூச்சுக் காற்றை நாமும் உள்வாங்கிக்கணும். அப்போதான் மன நிம்மதி கிடைக்கும். கிரக கோளாறா? உங்க கிரகத்துல (வீட்டுல) கோளாறா? இந்தக் கோயிலுக்கு போயிட்டு வாங்கோ, அந்தக் கோயிலுக்கு போயிட்டு வாங்கோன்னு ஏன் சொல்றா? அங்க இருக்கக்கூடிய பகவான் முன்னாடி போய் அமைதியா உட்காரும்போது, பகவான் விடும் மூச்சுக் காற்றை நாமும் சுவாசித்தால் நமக்கு எல்லா நன்மையும் கிடைக்கும் அப்படீங்கறதுக்காக அதை சொல்றா.
அவர்தான் எல்லாருமே. அவருக்குள்தான் எல்லாமே. கடவுளே இல்லைன்னு சொன்னோம்னா அந்த இல்லைங்கற சொல் சொல்றதுக்கு நாக்கை உண்டு பண்ணியது யார்? நாக்கு இல்லைன்னா நம்மால இப்படி பேசியிருக்க முடியுமா?
‘...பஞ்சவர்க்கு தூது நடந்தானை
நாராயணா என்ன நாஎன்ன நாவே’ன்னு பாடுவார் இளங்கோவடிகள். ‘பகவான் நாமாவைச் சொல்லாத நாக்கு எதுக்கு? அது நாக்கா?’னு கேட்கிறார் அவர்.
கோவிந்தா கோவிந்தான்னு அப்பப்போ கோவிந் தனை கூப்பிடலாமே? அதுவே ஒரு மகா புண்ணியம் தானே? இந்த உலகத்துல இருக்குற கோயில்கள்ல இருக்குற அத்தனை மூர்த்தங்களுக்கும் சக்தியை அந்த திருப்பதி பெருமாள்தான் கொடுத்துண்டு இருக்கார். பேசும் தெய்வம் அவர். அவர்கிட்ட ஏதாவது ஒண்ணை நேர்ந்துண்டு அதை பண்ணாம விட்டுட்டா அதை வாங்காம அவர் விடமாட்டார். ‘நீ இதைக் கொடுப்பா; நான் உனக்கு இதை பண்றேன், நீ எனக்கு இதை செஞ்சு கொடுத்தேன்னா நான் உனக்கு இதை செஞ்சு போடுவேன்’னு பகவான் கிட்டேயே வியாபாரம் பேசிட்டு, காரியம் ஆனதுக்கப்புறம் அதை நாம மறந்துடுவோம். ஆனால், திருப்பதி பெருமாள் எதை யுமே மறக்க மாட்டார். நிச்சயமா நம்மக்கிட்டேயிருந்து நாம என்ன தர்றோம்னு சொன்னோமோ அதை வாங்கிப்பார். ஏன்? அதுவும் காருண்யம்தான். பக்தனுக்கு, வார்த்தை மீறின தோஷம் வந்துடக்கூடாது என்பதற்காக தாமே நினைவூட்டி வாங்கிக் கொள்பவர் அவர். ஏன்! ‘வேங்கடம்’னாலே பாவங்களைப் போக்குவதுன்னு ஒரு அர்த்தம் உண்டில்லியா?
ஆதியும் அந்தமும் இல்லாத பகவானுக்கு ஆயிரமாயிரம் திருநாமங்கள். எதுக்காக இவ்வளவு பேர் இருக்கணும்? வேங்கடேசா, நாராயணா, கிருஷ்ணா, பரந்தாமா இப்படி சொல்றது கஷ்டமா இருக்குன்னு நம்மை மாதிரி சிலர் நினைக்கலாம். அதுக்காகத்தான் ஹரி, ராமான்னு ரெண்டு எழுத்துப் பேரும். இப்படி எந்த நாமத்தைச் சொன்னாலும் அதுக்கான பலனை பகவான் தருவார்; நம்மையும் நம்ம வம்சத்தையும் காப்பாத்துவார். ஹரி நாராயண... ஹரி நாராயணா.

 

Comments