மஞ்சளினால் பிள்ளையார் பிடித்து பூஜிப்பது எதனால்?

மற்ற தெய்வ வழிபாட்டுக்கும் பிள்ளையார் வழிபாட்டுக்கும் வேறுபாடு உண்டு. குறிப்பாக, மற்ற தெய்வங்களுக்கான ஆலய அமைப்பு, பூஜா வழிமுறைகள் போன்றவற்றில் உள்ள கடுமையான விதிமுறைகள் பலவும் பிள்ளையாருக்குக் கிடையாது. பிள்ளையாரை எங்கும் பூஜிக்கலாம், எப்படியும் பூஜிக்கலாம், எப்போதும் பூஜிக்கலாம், யாரும் பூஜிக்கலாம், எதனாலும் பூஜிக்கலாம், எதிலும் பூஜிக்கலாம்.
மேலும், குறிப்பாக மற்ற தெய்வங்களை பஞ்ச உலோக விக்ரஹங்கள், தங்கம், வெள்ளி, பித்தளை, தாமிரம் முதலியவைகளால் செய்யப்பட்ட பிரதிமைகள், சிலைகள், வரைபடங்கள், கலசம் போன்றவற்றில் மட்டுமே பூஜை செய்ய முடியும். ஆனால், விநாயகரையோ மேற்கூறிய அனைத்திலும் பூஜிப்பதுடன் மஞ்சள் பொடியில், பசுஞ்சாணியில் மண் பிம்பத்தில் முழுத் தேங்காயில், கொட்டை பாக்கில் என எதிலும் பூஜை செய்யலாம். அதிலும், மஞ்சள் பொடியில் பிள்ளையாரை பூஜை செய்வது அதிக பலனையும் அதிக ஸான்னித்யத்தையும் அளிக்கும்.
விநாயகரின் அவதாரத்தைச் சொல்லும் பல நூல்களில் முத்கல புராணம் என்னும் நூலும் ஒன்று. அதில் கூறப்படும் செய்தி இது. ஒரு சமயம் கைலாசத்தில் பரமசிவனின் மனைவி உமா தேவியார், ஸ்நானம் செய்வதற்காகப் புறப்பட்டாள். எப்போதும், உமாதேவியார் குளிக்கும்போது குளியல் அறையின் வாயிலில் சில பெண்கள் காவல் இருப்பது வழக்கம். ஆனால், அன்று காவல் காக்கும் பணிப்பெண்ணைக் காணவில்லை. எனவே, உடல் முழுவதும் மஞ்சள் பொடியைப் பூசிக்கொண்டு குளிக்கத் தயாராக இருந்த உமாதேவி, தாம் பூசிக் கொண்டிருந்த மஞ்சள் பொடியை தனது கையால் வழித்து எடுத்து, அவற்றை ஓர் உருண்டையாக உருட்டி, அதைக் கண், காது, மூக்கு, வாய், முகம் முதலியவற்றுடன் ஓர் மனித உருவமாகச் செய்தாள். அத்துடன் அந்த பிம்பத்துக்கு உயிரையும் தந்து, அதையே குளியலறை வாயிலில் காவலுக்காக அமர்த்திவிட்டு குளிக்கச் சென்றாள்.
மஞ்சள் பொடியால் செய்யப்பட்ட அந்த உருவமும் அங்கே வாயிலில் காவல் காத்து யாரையும் உள்ளே வரவிடாமல் தடுத்ததுடன், மேலும் பல இன்னல்களையும் விலக்கியது. அதனால் மகிழ்ச்சியடைந்த பார்வதி தேவி அதை தன்னுடனேயே வைத்துக் கொண்டு, தனது பிள்ளையாகவே பாவித்து அன்பு செலுத்தினாள். பெரிய இடத்துப் பிள்ளை என்னும் ஸ்தானத்தைப் பெற்ற பிள்ளையாருக்கு அனைவரின் அன்பும் ஆதரவும் கிடைத்தது. அது முதல் அனைவராலும் பிள்ளையார் என அழைக்கப்பட்டு, முதன் முதலில் பூஜிக்கும் தெய்வமாகவும் வழிபாடு செய்யப்பட்டார்.
அதுமுதல் பூலோகத்திலும் பிள்ளையாரை மஞ்சள் பொடியில் ஆவாஹனம் செய்து பூஜிக்கும் வழக்கம் ஏற்பட்டது. ஆகவே, பஞ்சலோக விக்ரஹம், தங்கத்தாலான விக்ரஹத்தை விட, மஞ்சள் பொடியில் ஆவாஹனம் செய்து பூஜிப்பதே விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது. விரைவில் பலனைத் தரக் கூடியது. விநாயக சதுர்த்தி அன்று மண்ணால் பிள்ளையாரை செய்து பூஜித்தாலும்கூட, அதற்கு முன்பாக மஞ்சள் பொடியில் பிள்ளையாரை பூஜித்து விட்டு, அதன் பின்னரே மண் பிள்ளையாரை பூஜிக்க வேண்டும் என்கிறது கல்ப பிரயோகம்.
     

கோயில் சிற்பங்களில் சிலவற்றை ஆபாசமாக வடித்திருப்பதேன்?



 
ஆலயங்களில் குறிப்பாக, கோபுரங்களில் பலவிதமான சிற்பங்கள் சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. நமது பாரத தேசத்தின் கலாசாரத்தையும், சிற்ப சாஸ்திர வளர்ச்சியையும், தெய்வ பக்தியையும் வெளிப்படுத்துவதாக இந்த சிற்பங்கள் அமைந்துள்ளன. ஆலய கோபுரத்தில் அமைந்துள்ள சிற்பங்களுக்கும் தனிப்பெரும் சக்தியுண்டு. கும்பாபிஷேக சமயம் பூஜைகளும் உண்டு. இவற்றைத் தரிசித்தால், ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பதாக புண்ணியமும் உண்டு. இவற்றுக்கு பின்னம்(உடைதல்) ஏற்பட்டால் தோஷமும் உண்டு. ஆகவே, ஆலய கருவறையில் உள்ள சிலைகளை எவ்வாறு சாதாரண (கற்) சிலைகளாகப் பார்க்காமல், சக்தியுடைய தெய்வமாகவே பார்க்கிறோமோ, அவ்வாறே ஆலய கோபுரங்களிலுள்ள சிற்பங்களையும் சாதாரணமான கலைச் சிற்பங்களாகப் பார்க்காமல், சிற்பங்களிலுள்ள (அந்தந்த) தெய்வங்களின் சன்னித்யங்கள் நிறைந்ததாகவே காண வேண்டும்.
ஆகவே, ஆலய சிற்பங்களை தெய்வமாகப் பார்த்தால் ஆபாசமாகத் தெரியாது. ஆபாசமாகப் பார்த்தால் சிற்பமோ சிலையோ தெய்வமாகத் தெரியாது. நாம் பார்க்கும் பார்வையில்தான் வேறுபாடு உள்ளது.
ஒருசமயம் குரு துரோணாச்சார்யார், சீடர்கள் துரியோதனன், தர்மபுத்ரர் ஆகிய இருவரையும் அழைத்து, “நீங்கள் இருவரும் இவ்வுலகம் முழுவதும் சுற்றி வாருங்கள். உலகில் நல்லவர் யார்? தீயவர் யார்? என அறிந்து வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினாராம். உற்சாகமாகப் புறப்பட்ட அவ்விருவரும், பலகாலம் ஊரைச் சுற்றிவிட்டு, குருவிடம் வந்து சேர்ந்தார்களாம்.
குருவிடம் துரியோதனன், “இவ்வுலகம் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டேன். நல்லவர் என்பவரே யாரும், எங்கும் இல்லை. அனைவரிடமும் ஏதோ ஒரு குற்றம் இருக்கத்தான் செய்கிறது” என்றாராம்.
தர்மபுத்ரரோ, “குருவே! இவ்வுலகம் முழுவதும் சுற்றி வந்தேன். ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஏதோ ஒரு நல்ல குணம் (பண்பு) இருக்கத்தான் செய்கிறது. ஆகவே, எங்கும் நல்லவர்களே இருக்கிறார்களே தவிர, ஒரு தீயவரைக் கூடப் பார்க்க முடியவில்லை” என்றாராம்.
அவ்விருவர்களிடமும் குரு துரோணர் சொன்னாராம், “நாம் பார்க்கும் பார்வைக்கு ஒப்ப இவ்வுலகம் நல்லவையாகவும், தீயவையாகவும் காட்சியளிக்கும். ஆகவே, நல்லதாகவே பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள்” என்றாராம்.
துரியோதனனின் பார்வையில் தீயவை மட்டுமே தென்பட்டது. தர்மபுத்ரர் பார்வையில் நல்லவை மட் டுமே தென்பட்டது. ஆகவே, பார்வைக்கேற்ப பொருட்படும் இவ்வுலகத்தில் பார்ப்பவர்களின் பார்வையைப் பொறுத்தே இவ்வுலகம் இருக்கிறது. ஆலய சிற்பங்களும் இவ்வகையில் சேர்ந்தவையே.

 

Comments