தூதர்கள்-சுந்தரச் சொல்லமுதம்

வீசிய காற்றில் தளிர்கள், இலைகள் மட்டுமல்ல; சிம்சுபா மரத்தின் கிளைகளும் ஆடிக் கொண்டிருந்தன; ஆனாலும், புழுக்கம் தீரவில்லை. இந்தப் புழுக்கம் குளிக்காமலும், ஆடை மாற்றாமலும் இருப்பதாலா? இல்லையே! மேனிக்கு ஒன்றும் குறைவில்லை! இது உள்புழுக்கம்!
‘பொன்மானைத் தொடர்ந்து சென்ற பெருமாளைப் பின் தொடர, இளைய பெருமாளை நோக்கி வீசினாளே சுடுசரங்கள்! அச்சூடுதான் தன்னைச் சூழ்ந்து வெப்பத்தை உமிழ்கின்றனவோ? உள்ளம் வெந்து வெந்து... எத்தனை நாட்கள், இப்படியே? இராம ஸ்மரணை கூடத் தன்னைக் குளிர்விக்காமல் தகிக்கிறதே!’
‘ம்...’ பெருமூச்சு புயலானது! அந்தக் குருக்கத்திப் புதர்... அதுதான் முடிவு! மிதிலையின் அரண்மனை... உத்யானம்...! அயோத்தியின் அரண்மனை... நந்தவனம்...! இப்போது இந்த அசோகவனம்! பிரிவில் இப்போது அசோகவனம் சுடுகிறது! இந்தச் சூட்டில்... தகிப்பில் எத்தனை காலம் உயிர் தரிப்பது?
அதுதான் சரி; வில்லை முறித்துத் தன்னை மணந்த பிரானுக்கு, தான் மரணமாவது தெரிய வேண்டும்!
அரக்கியர் விழித்தெழுமுன்... திரிசடை வருமுன்... குருக்கத்தி மலர்களின் மணம் தனது முடிவுக்கு வாழ்த்துக் கூற...
‘இராமஜெயம்! ஸ்ரீ இராமஜெயம்! ஸ்ரீ இராம ஜெயம்!’ அந்தப் புண்ணிய நாமம்... அப்படியே புல்லரித்தது சீதைக்கு. சரஞ்சரமாய்க் கண்களில் வடிந்த கண்ணீரோடு, கூப்பிய கரங்களோடு சீதை, தான் அமர்ந்திருந்த சிம்சுபா மரத்துக்குத் திரும்பினாள்!
கைகூப்பித் தொழும் வானரம்! ‘இதுவும் அரக்க மாயமோ?’ சீதையின் ஐயம் தீரவில்லை.
தாயே, ஐயுற வேண்டாம்! ‘கரதல ஆமலக!’ (உள்ளங்கை நெல்லிக்கனி!) அடையாளம் உள்ளது பிராட்டியே!"
நீ, அரக்கனாக இருந்தாலும் சரி! வேறு அமரனாக இருந்தாலும் சரி! குரங்கினத் தலைவனாக இருந்தாலும் சரி! என் பிராணனைக் காத்தாயே! இதனின் உதவியுண்டோ? நீ சீரஞ்சீவியாவாய்!"
தாயே! நானே பிரானிடம் தங்களைச் சேர்ப்பேன்!"
இல்லை... அது சரியில்லை! உயிர் அனைய பெருமானின் நிலை கூறு..."
நின்னைப் பிரிந்த ஐயன் உண்டு உயிர்த்து இருக்கிறான்! உயிராம் நீ இங்கிருக்கப் பெருமான் எங்ஙனம் உயிர்விடுவான்?..."
தொடர்ந்த உரையாடலில் சீதைக்குத் துன்பம் தீர்க்க... மெய்ப்பேர் தீட்டிய மோதிரத்தை அனுமன் பிராட்டியிடம் அளித்தான்!
ஆழி பெற்ற அன்னையின் உயிர் அவளை வந்தடைந்தது. மறந்த பொருளின் அரியது நினைவில் வந்தடைந்தது; பிறந்த பயன் வந்தது. பிள்ளைப்பேறில்லாத பெண் பெற்ற பிள்ளையாய், மோதிரத்தை தன் நெஞ்சோடு அணைத்து உயிர்த்தாள் சீதை!
பிராட்டிக்கு உயிர் அளித்த அனுமன், அசோக வனத்தை ஹதம் செய்து தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டான். வானரன் ஒருவன் செய்த அட்டூழியங்களாக அறிந்து கொண்ட அசுரன் இராவணன், பலரை அனுப்பி அனுமனைக் கொணர ஏற்பாடு செய்கின்றான்.
கிங்கரர்கள் பெருங்கூட்டமாக வந்தனர்; வதம் செய்தான் அனுமன்! சம்புமாலி வந்தான்; அவனையும் வதம் செய்தான் இராமதூதன்! பஞ்சசேனாதிபதிகள் வந்தனர்; அனுமனால் அழிக்கப்பட்டனர்! இராவணன் மகனான அக்ககுமாரன் வந்தான்; வதமானான். இறுதியில் இந்திரசித்து நான்முகன் படைக்கலமான பிரம் மாஸ்திரத்தைப் பிரயோகித்து அனுமனைக் கட்டினான். இராமனின் தூதனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளத் துணிந்தான் அந்த அற்புதன்!
அவையில் புகுந்த அனுமன் அசுரராஜனின் கம்பீரத்தைக் காண்கின்றான். இந்திரசித்தன் தனது தந்தையிடம், ‘சிவன் போல; திருமால் போல வீரம் மிக்கன் இவன்’ என அறிமுகப்படுத்துகிறான்.
கண்களில் தீப்பொறி பறக்க இராவணன், ‘நீ யார்?’ என அனுமனை வினவுகின்றான்.
‘நேமியோ? குலிசியோ? நெடுங்கணிச்சியோ?
தாமரைக் கிழவனோ? தறுகண் பல்தலை
பூமி தாங்கு ஒருவனோ? - பொருது முற்றுவான்
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்!’

திருமாலா! வச்சிராயுதம் ஏந்திய இந்திரனா? நீண்ட சூலமுடைய சிவனா? பிரம்மனா? பூமியைத் தாங்கும் பல்தலைகளை உடைய ஆதிசேடனா? நீ யார்? பேரும் உருவமும் மாற்றி வந்தாயோ?" எனக் கோபத்துடன் கேட்கிறான் தசமுகன்!
நீ சொன்ன யாரும் இல்லை! நான் வில்லி தன் தூதன்! முதலும் நடுவும் முடிவும் இல்லாத, இறப்பு, எதிர்வு, நிகழ்வு என முக்காலமும் கடந்து, சூலம், சக்கரம், சங்கு, கமண்டலம் ஆகியன துறந்து, ஆலிலை, தாமரை மலர், கயிலை மலை முதலியவற்றைக் கொள்ளாது விட்டு, கையில் வில் ஏந்தி வந்த இராமனின் தூதன் நான்!" என்று அனுமன் பதில் கூறினான்.
ருமையை வாலியிடம் இருந்து மீட்டு சுக்ரீவனுக்கு அளித்த பேரருளாளன், தன் பிராட்டியை மீட்க வருவான்.
எளிது என்று சீதையைக் கவர்ந்தாய். ஆனால், அப்பழி உன்னைவிட்டு எளிதாக நீங்காது.
பொருளும் காமமும் இருள் போன்றவை; அதனில் இருந்து நீங்கி, இராவணா நீ தெளிவு பெற வேண்டும்! வேதம் படித்தும், நீதி அறிந்தும், அறவழி கடக்க முயன்றாயே!
உன்னை, மறுப்புண்ட வாழ்வை விட நாசி (மூக்கு) அறுப்புண்ட உன் சோதரி வாழ்வே, சிறப்புடையது!
ஆயிரம் வரங்கள் பெற்றிருந்தாலும் அவை, இராமன் வில் முன் அழியுமே, இராவணா. கைலாய நாதன் அளித்த வரம் தவறலாம்; இராமபிரான் தொடுக்கும் சரம் தவறாது உன் உயிர் குடிக்கும்.
சீதையாகிய நஞ்சமுதம் அரக்கர் வாழ்வை அழிக்கும்; உன் செல்வம் தொலையும்!" எனப் பலவாறு அனுமன் எடுத்துரைத்தான்.
வகுத்துக்கூறல், கூறியது கூறல், ஓலை கொடுத்து நிற்றல் எனத் தூதரின் மூவகை இலக்கண முறைமை யில், அனுமன் முதல் நிலைத் தூதனாகப் பலவாறு இராவணனுக்கு எடுத்துரைக்கின்றான்.
‘விநாச காலே விபரீத புத்தி!’ என்ற நிலையில் இருந்த பத்துத் தலையன், எதனையும் கேட்கும் நிலையில் இல்லை. இவையெல்லாம் ஒரு குரங்கா எனக்கு உபதேசிப்பது?" என்றான். பலவாறு இகழ்ந்தான்!
எல்லாவற்றுக்கும் தக்க மறுமொழி கொடுத்த தூதனை, பின்னும் வாலில் தீயிட்டு, தன் நகரைத் தானே தீக்கு உணவாக்கினான் அசுர ராஜன்!
தமிழ் இலக்கிய மரபிலும், பண்பாட்டு மரபிலும் ‘அகம்’ அல்லது ‘புறம்’ என ஏதேனும் ஒன்றுக்குத் தூது விடுப்பர்! சொல்லின் சுந்தரனான அனுமன், சீதையிடம் அகத்தூதும், இராவணனிடம் புறத்தூதும் சென்ற வீரன்; பெருமையன்!
தூது உரைப்பவர்கள், தூதுச் சேதியை மட்டும் உரைப்பார்கள்! அனுமனோ, தூதின் பயனை - பதிலை, இராமனிடம் கொண்டு சேர்க்கும் உயரியன்!
அன்புறு சிந்தையன், அனுமன் இராமபிரானை அமைய நோக்குகின்றான். ‘கண்டேன் சீதையை!’ எனக் கனியக் கூறினான்.
‘கற்போடு விளங்கும் பொற்புடைத் தெய்வம், பிராட்டி!’ எனப் போற்றுகின்றான்.
‘இராமன் மனைவி; அயோத்தி மருமகள்; மிதிலை நாயகி என்ற தகைமைக்குக் குறைவிலாதவள்!
உன் குலத்தை வாழச் செய்பவள்; அரக்கர் குலத்தை அழிக்க வந்தவள்; வானவர் குலம் தழைக்கச் செய்பவள்!
தவமாம் தையல்! உயர் குடிப் பிறப்பின் வடிவம்! பொறுமையின் மெய்யுரு! கற்பின் வடிவம்! அவளது கண்ணிலும், கருத்திலும் நீயே குடிகொண்டுள்ளாய்!
கடல் நடுவே உள்ள இலங்கை மாநகரில் அசோக மரம் சூழ்ந்த வனத்தில் உள்ளாள். அரக்கியர் சூழ அமர்ந்துள்ள தேவியின் திருக்கரத்தில் நீ கொடுத்த மோதிரம் தந்தேன்! வேந்தனே! இராமனே!
ஒரு கணத்து இரண்டு கண்டேன்! தேவி தன் தாபத்தால் உருகிய மோதிரம், அவளது உள்ளக் குளிர்ச்சியால் கெட்டித்தது!’
இப்படி, அனுமன் தூதுரைக்க, அன்னை தந்த சூளாமணியை அய்யனிடம் சேர்ப்பித்தான்!
இராமதூதனாகச் சென்று சேர்ந்த சுந்தரன், பிராட்டி யிடமிருந்து உத்தரமும் உரிய பொருளும் பெற்று வந்தான்.
பிரிவின் பெருங்காட்டில் வெந்த இரு உள்ளங்களை ஆற்றுவித்த அருஞ்செயல் செய்கிறான்; அதேபோழ்து சிறை இருந்தாளை மீட்கும் வழியும், வாய்ப்பும் கண்டு வருகிறான்.
மானிடத் துன்பத்தில் தோய்ந்த பரம்பொருளுக்கு ஆறுதல் தரும் அரிய செயல் அனுமன் செயல்!
ஆகவேதான், அவன் சொல் அமுதமானது! அந்த அமுதனின் நாமம் கூறி, நாமும் நற்பயன் பெறுவோம்.

Comments