நெல்லி தீர்த்தம்

கர்நாடக மாநிலம், ‘கட்டீல்’ தலத்தில், நந்தினி நதியின் மடியில் கோயில் கொண்டிருக்கும் துர்கா பரமேஸ்வரியைப் பற்றி பலரும் அறிவோம். நதியில் ஆலயம் கொண்டிருப்பதால் ‘ஜலதுர்கா’ என்றும் குறிப்பிடப்படும் அந்த அம்பிகை, வண்டின் உருவெடுத்து அருணாசுரனை சம்ஹரித்தாள் என்று தலவரலாறு குறிப்பிடும். அம்பிகை வண்டின் உருவில் அசுர வதம் புரிந்ததற்கும், அசுரன் வரபலம் மிக்கவனாகத் திகழ்ந்ததற்கும் ஒரு முனிவரே காரணம். அவர் ‘ஜாபாலி.’ அவர் வேள்வி செய்ததும், அவருக்கு அம்பிகை வரமளித்ததுமான தலம்தான் இந்த நெல்லி தீர்த்தம். இங்கே அமைந்துள்ள குகையில்தான் ஜாபாலி வேள்வி செய்தார். கர்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். இங்குதான் அமைந்துள்ளது சோமநாதேஸ்வரர் ஆலயம்.
சாளக்ராமத்தால் அமைந்த லிங்கம் மிக அபூர்வம். ஆனால், அர்த்தநாரீசர் அமைப்பில் உருவாகியுள்ள சோமநாதரின் லிங்கத் திருமேனி முழுக்க முழுக்க சாளக்ராமத்தினால் ஆனது. இக்கோயிலில் கணபதிக்கு சன்னிதி உள்ளது. ‘ஜாபாலி’ முனிவரின் சிலையும் உள்ளது. மலை நாட்டின் துளு பாரம்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலின் சிவகணங்களில் முக்கியமாகக் கருதப்படும் பிலி சாமுண்டியும், கே்ஷத்ர பாலகர்களாக ரக்தேஸ்வரியும், தூமாவதியும் உள்ளார்கள்.
கோயிலின் உள்ளே செல்லும் நிலைப்படியின் இடது புறம் ஒரு குகை உள்ளது. இந்தக் குகை இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. குகையின் வாசல் பெரியதாக இருந்தாலும் போகப்போக வழி குறுகி, ஒரு மனிதன் படுத்து, தவழ்ந்து செல்லும் அளவுக்கு சிறியதாகவும் ஆகிவிடுகிறது. அதைக் கடந்து சென்றால் மறுபடியும் குகை வழி பெரியதாகிறது. இங்கு ஒரு பெரிய குளமும் அதன் முன்புறத்தில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இங்குள்ள சேறு போன்ற மண் மிகவும் புனிதமானது என்றும், அதை உடலில் பூசிக் கொண்டால் நோய்கள் குணமாகிறது என்றும் சொல்கிறார்கள்.
குகையின் மேற்பகுதியிலிருந்து சொட்டும் நீர் ஒரு நெல்லிக்காய் அளவு பருமனாக உள்ளது. அதனால்தான் இந்த இடத்துக்கு ‘நெல்லி தீர்த்தம்’ என்று பெயர்.
சித்திரையிலிருந்து புரட்டாசி மாதம் வரை மூடியும், ஐப்பசி முதல் பங்குனி மாதம் வரை திறந்தும் இருக்கிறது இந்தக் குகை. இந்த சமயத்தில் யாத்ரீகர்கள் தரிசிக்கலாம். மூடப்பட் டிருக்கும் ஆறு மாதங்களிலும், தேவர்களும் முனிவர்களும் இங்கு தவமியற்றுவதாகச் சொல்லப்படுகிறது.
‘ஜாபாலி’ முனிவர் இந்த இடத்தில் உலக கே்ஷமத்துக்காகவும், தர்மத்தைக் காக்கவும் ஒரு யாகம் செய்தார். அப்போது அங்கு வந்த நாரதர் முனிவரிடம், எதற்காக இந்த யாகம் செய்கிறீர்கள்?" என்று கேட்க, தர்மத்தைக் காக்கவும், உலக மக்களின் கே்ஷமத்துக்காகவும் செய்கிறேன்" என்றார் முனிவர்.
இதைக் கேட்ட நாரதர், ஒரு பக்கம் உலக நன் மைக்காக யாகம் செய்கிறீர்கள். மறுபக்கம் அசுரனான அருணாசுரனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்துள்ளீர்கள். அதை பலகோடி முறை உச்சரித்து அவன் ஆதிபராசக்தியின் தரிசனம் பெற்றதோடு, தான் மும் மூர்த்திகளாலும், மனிதர்கள், ரிஷிகள் யாராலும் கொல்லப்படக் கூடாது எனும் வரத்தையும் வேண்டி பெற்றுக் கொண்டான். அந்த வர பலத்தால் தேவர்களையும் அடிமையாக்கி யாகங்களையும் கெடுத்து, உலகத்தில் தர்மத்தை அழிக்கிறான்" என்றார்.
முனிவர், ஆதிபராசக்தியை வேண்டி ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்தின் முடிவில் தோன்றிய அன்னை சக்தியிடம், அருணாசுரனின் தகாத செயல்களைச் சொல்லி அவனை அழிக்கும் வழியை வேண்டினார். (அதையடுத்து ஆதிபராசக்தி தானே ஒரு வண்டின் உருவத்தில் அந்த அருணாசுரனை வதைத்தாள் - இது கட்டீல் தலபுராணச் செய்தி.)
அப்படி ஆதிசக்தி தரிசனமளித்த இடம்தான் இந்த குகை. அப்போது தேவி சிவபிரானிடம், இந்த இடத்திலேயே நீங்கள் லிங்க உருவில் இருந்து பக்தர்களைக் காப்பாற்றுங்கள். திருமாலும் இங்கு கோயில் கொள்ளட்டும். ஜாபாலி முனிவரும் பிற ரிஷிகளும் உலக நன்மைக்காக தவமிருக்கட்டும்" என்று பணித்து மறைந்தாள். ஆகையால், இந்தக் குகையில் முனிவர்களும் தேவர்களும் ஆதிபராசக்தியை வழிபடும் நாட்களாக ஆறு மாதங்கள் மூடப்பட்டும், ஆறு மாதங்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்தும் இருக்குமாம்.
மகா சிவராத்திரி, விநாயக சதுர்த்தி, தீபாவளி, துலா சங்கிரமணம் ஆகிய நாட்கள் இங்கு விசேஷம். சோம நாதருக்கு ஏகாதசி ருத்ராபிஷேகம், சத்ய நாராயண பூஜை, துர்கா நமஸ்கார பூஜை போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஐந்து நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவம் மிகவும் விசேஷம்.
பஞ்சாயுதங்கள்:
பாஞ்சஜன்யம் - சங்கு, சுதர்சனம் - சக்கரம், கௌமோதகீ - கதாயுதம்,நந்தகம் - கத்தி, சார்ங்கம் - வில்.

செல்லும்வழி:
பெங்களூரிலிருந்து மங்களூருக்குச் சென்று அங்கிருந்து ‘முடபித்ரி’ செல்லும் பேருந்தில் ‘வட படவு’ என்னுமிடத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். மங்களூரிலுள்ள ஹம்பன் கட்டா பேருந்து நிலையத்திலிருந்து முச்சூர் செல்லும் பேருந்தில் சென்று நெல்லி தீர்த்தத்தில் இறங்கிக் கொள்ளலாம்.

 

Comments