ஒளியேற்றும் பெருமாள்

திருமங்கையாழ்வார், ‘முளைக்கதிரை’ என்று துவங்கும் தனது பாசுரத்தில், குடந்தை ஆரா அமுதனையும், ஸ்ரீரங்கம் ரங்க நாதரையும், திருதண்கா விளக்கொளி பெருமாளையும், திருவெஃகா சொன்ன வண்ணம் செய்த பெருமாளையும், திருமலை திருவேங்கடமுடையானைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பார். அதில் விளக்கொளி பெருமாளைப் பற்றி சொல்லும்போது, ‘விளக்கு ஒளியை, மரகதத்தை திருதண்காவில்’ என்று சொல்லியிருப்பார். இதில் ‘மரகதத்தை’ என்று அவர் சொல்வது விளக்கொளி பெருமாளுடன் உடனுறையும் மரகதவல்லித் தாயாரைத்தான் என்பது வைணவத்தில் ஆழங்கால்பட்ட சிலரது வாதம்.
பல்வேறு திவ்யதேசங்களில் காத்து ரட்சிக்கும் பெருமாளை அற்புதமான தமிழ்ச் சொற்களால் ஆராதிக்கும் திருமங்கை ஆழ்வார், தாயாரைப் பற்றி குறிப்பிட்டு இருப்பது இந்தப் பாசுரத்தில்தான் என்பதும் அவர்களது கருத்து. எது எப்படியோ, காஞ்சிபுரத்தில் இருக்கும் 18 திவ்ய தேசங்களில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது திருதண்கா. ‘தண்’ என்றால் குளிர்ந்த, ‘கா’ என்றால் சோலை. குளிர்ந்த சோலையில் மரகதவல்லி தாயாருடன் உறைகிறார் விளக்கொளி பெருமாள்.
இந்த விளக்கொளி பெருமாள்தான் யதோத்காரியாகவும் (சொன்ன வண்ணம் செய்த பெருமாள்) வரத ராஜராகவும் காஞ்சியில் காட்சியளிக்கிறார் என்கிறார் வைணவ ஆச்சார்யரான வேதாந்த தேசிகர். விளக்கொளி பெருமாளை வடமொழியில் ‘தீபப் பிரகாசர்’ என்று வழிபடுகிறோம்.
விளக்கொளி பெருமாளின் புராண வரலாறும் பாலாறோடு தொடர்பு கொண்டது தான். பிரம்மாவிடம் கோபித்துக் கொண்டு நந்தி மலைக்குச் செல்கிறார் சரஸ்வதி. காஞ்சிபுரத்தில் பெருமாளை ஆராதித்து, தனது மற்றொரு மனைவி காயத்ரியுடன் யாகம் செய்கிறார் பிரம்மா. இதனால், மேலும் கோபம் கொள்ளும் சரஸ்வதி ஆவேசம் கொண்டு பாலாறாகப் பெருகி, வெள்ளமாக வருகிறாள். பள்ளிகொண்டா, திருப்பாற்கடல், திருவெஃகா (காஞ்சிபுரம்) ஆகிய மூன்று இடங்களில் பாலாறாக வரும் சரஸ்வதியை தடுக்கிறார் பெருமாள். இறுதியில் திருவெஃகாவில் முற்றிலும் தடுத்தவுடன் சரஸ்வதி கோபத்தின் உச்சிக்கே சென்று பிரம்மாயாகம் செய்யும் பகுதியை இருட்டாக்குகிறாள். பிரம்மா பெருமாளை வேண்டுகிறார். பெருமாள் ஜோதி ஸ்வரூபமாய் எழுந்தருளி இருளை விரட்டுகிறார். இருட்டை விரட்டியடித்த விளக்கொளியாய் இந்த தலத்தில் அமர்ந்து பக்தர்களின் வாழ்க்கையிலும் ஒளியேற்றி வருகிறார் பெருமாள். இதுவே தலத்தின் புராண வரலாறு.
பல்லவர் காலத்து கோயில். பின்னர் சோழர்கள், சம்புவரையர்கள் காலத்திலும் பல திருப்பணிகள் நடந்துள்ளன. கோயில் புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும் துவஜஸ்தம்ப மரம் கால ஓட்டத்தில் இற்றுப்போய் எப்போது விழுமோ என்றிருக்கிறது. தனி சன்னிதியாக இருக்கும் பெரிய திருவடி கருடரை வணங்கி, மூலவர் சன்னிதிக்குள் நுழைகிறோம். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை சாதிக்கிறார் விளக்கொளி பெருமாள். பெருமாள் குறித்து திருமங்கையாழ்வார் மூன்று பாசுரங் களிலும், நம்மாழ்வார் ஒரு பாசுரத்திலும் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.
பெருமாளின் அழகை உள்வாங்கியபடி அர்த்த மண்டபத்தை கடக்கிறோம். ஓரமாக அனந்தாழ்வான், சேனை முதலியார், நம்மாழ்வார், பொய்கையாழ்வார், திருமங்கையாழ்வார், ஆளவந்தார், ராமானுஜர் ஆகியோரும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். மரகதவல்லி தாயாரும் ஆண்டாளும் தனி சன்னிதி களில் அருளாட்சி செய்கிறார்கள். கோயில் புஷ் கரணிக்கு சரஸ்வதி என்று பெயர். மூலவருக்கு மேலே ஸ்ரீகர விமானம். வரதராஜர், வருடத்தில் பலமுறை விளக்கொளி பெருமாள் சன்னிதிக்கு எழுந்தருள்கிறார். வைகுண்ட ஏகாதசி அன்று சுவாமிக்கு கருட சேவை.
இந்த தலத்தின் கூடுதல் சிறப்பு; இது வேதாந்த தேசிகரின் அவதார தலமாகும். பெருமாள் கோயிலை ஒட்டி தெற்கு முகமாக அமைந்திருக்கிறது வேதாந்த தேசிகர் திருக்கோயில். தேசிகரின் புதல்வர் நயினாரா சார்யாரால் ஸ்தாபிக்கப்பட்ட கோயில். தேசிகர் அவதரித்த பகுதி தூப்புல் என்று அழைக்கப்பட்டது. தூப்புல் என்றால் தூய்மையான புல் - அதாவது, தர்ப்பை என்பது பொருள். இந்தப் பகுதியில் தர்ப்பை புல் காடாய் வளர்ந்திருந்ததாம். ஸ்ரீ ராமானுஜரின் வசிஷ்டாத்வைத தத்துவத்தை மக்களுக்கு தெள்ளத் தெளிவாக உபதேசித்து, சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு வைணவத்தை நிலை நிறுத்தியவர் வேதாந்த தேசிகர்.
கோயில்களில் திருச்சின்னம் என்ற ஊதுகுழல் போன்ற காற்று வாத்யம் வைத்திருப்பார்கள். சுவாமி புறப்பாடு ஆகும்போது திருச்சின்னத்தை ஊதுவார்கள். இந்த திருச்சின்னம் எழுப்பும் ஒலியின் சிறப்புடன் வரதராஜப் பெருமாளின் மேன்மையை குறித்து தேசிகர் பாடியதுதான் திருச்சின்ன மாலை. இதனால் பெரிதும் மகிழ்ந்து போன வரதராஜர், தனது கோயிலில் இருந்த இரண்டு திருச்சின்னத்தில் ஒன்றை தேசிகருக்குக் கொடுத்து விட்டார்.தேசிகர் சன்னிதியில் அவர் ஆராதனை செய்த லட்சுமி ஹயக்ரீவரும் இருக்கிறார். கல்விக்கு அதிபதியான இவரை வணங்கி வருவது மாணவர்களுக்கு நன்மை பயக்கும்.
தரிசன நேரம்: காலை 8.30 மணி முதல் 11.30 வரை. மாலை 5.30 மணி முதல் 7.30 வரை.
தொடர்புக்கு : முருகேசன் - 9496659798
பஞ்சமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம் மற்றும் அகோரம் எனும் ஐந்து முகங்கள் சிவபிரானுக்கு உண்டு.

Comments