நல்வழி காட்டுகிறார்களா மஹான்கள் ?

மஹான்கள் அறம்ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் வழிகாட்டிகளாக, சிறந்த குருமார்களாகத் திகழ்பவர்கள். எனினும், தெய்வத்துக்கு நிகரான ஆராதனைகளும், பணிவிடைகளும் மிகையானவையே! சுயசிந்தனைக்கு இடம் அளிக்காமல், அவர்களைப் பின்தொடர்வது தவறு! 
கடந்த வாரம் எங்கள் சத்சங்க விவாதத்தில் முன்வைக்கப்பட்ட கருத்து இது. தங்கள் பாணியில் இதற்கான தங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.
முதல் கோணம்
உணவுப் பண்டங்களில் கலப்படம் புகுந்து, சுகாதாரத்தை அழிக்கிறது. வெளிச்சந்தையில் வளைய வரும் உணவுப் பொருள்களில் கலப்படம் இருப்பதாக சிந்தனையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். வெளிநாட்டில் தடைசெய்யப்பட்ட மருந்துகள், உள்நாட்டில் வெளிச்சந்தையில் பவனி வருகின்றன. தடை செய்யப்பட்ட தகவல் தெரியாத நிலையில், அவற்றைப் பயன்படுத்துவதால் உடல் சுகாதாரம் அழியும் நிலை ஏற்படுகிறது.
அப்பாவி மக்கள் விழித்திருந்தும், தவறான உணவுகள் மற்றும் மருந்துகளால் அவர்களது சுகாதாரம் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. சுகாதாரத்தை நிலைநிறுத்தப் பயன்படும் அவை இரண்டும் சுகாதாரத்தின் அழிவுக்குக் காரணமாவது தவறு. ஆன்மிகத்திலும் இப்படியே!
பரம்பொருளின் பத்து அவதாரங்கள் நிகழ்த்திய அதிசயத்தையும் மிஞ்சும் அளவுக்கு, இன்றைக்குச் சில புதிய மஹான்களின் அதிசயங்களை வானளாவப் புகழ்ந்து பேசும் பிரபலங்கள் தென்படுகிறார்கள். அவர்கள், தங்களுடைய சொல்வளத்தால், மஹான்களை தெய்வ வடிவமாகச் சித்திரித்து, மக்களை மனதளவில் அந்த மஹான்களின் பக்தர்களாக மாற்றிவிடுகிறார்கள். அந்த பக்தர்கள், வாழ்வில் நிறைவேற்றியாக வேண்டிய கடமைகளையும் மஹான்களின் பரிந்துரையின்பேரில் நிறைவேற்று கிறார்கள். திருமணம், காதுகுத்துதல், பெயரிடுவது, வேலை வாய்ப்பு, படிப்பு போன்றவற்றை இறுதி செய்ய மஹான்களையே நாடுகிறார்கள். சுருங்கச் சொன்னால், தன்னையும் குடும்பத்தையும் மறந்து மஹான்களிடம் அடைக்கலமாகிவிடுவார்கள். அவர்களது ஆறாவது அறிவு செயலற்றுவிடும். ஆராயும் திறனும் படுத்துவிடும்.மஹானின் பரிந்துரையே அவர்களை வழிநடத்தும்!
 குருவருள் இருந்தால் திருவருள் கைகூடும் என்பார்கள். இந்த அடிப்படையில் மஹான்களைப் பின்பற்றினால் தவறா?
குருவை மஹான்களை எதற்காகப் பின்தொடர்கிறோம்? அற்ப ஆசைகளைச் சுவைத்து மகிழ மஹான்களை வேண்டுவோம்; அறியாமையை அகற்றும்படி அவர்களிடம் விண்ணப்பிக்க மாட்டோம். மஹான்களும் மக்களின் லோகாயத விருப்பங்களை நிறைவேற்றி, மறைமுகமாக அவர்களது ஆசைகளை வளர்த்துவிடுகிறார்கள். நாமும் அந்த ஆசைகள் நிறைவேறிய நம்பிக்கையில்,  மஹான்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, லோகாயத வாழ்வில் செழிப்புற்று விளங்குவதையே பிறப்பின் குறிக்கோளாக ஏற்றுக்கொள்வோம். மக்களது உண்மையான முன்னேற்றம் கானல் நீராகிவிடும்.
நாடகங்கள், பெரிய திரை மற்றும் சின்னத்திரை பிரபலங் களின் சொல்வளமானது மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி, பரம்பொருளை மறக்கவைத்துவிட்டது. மஹான்கள் சிலரது அளவு கடந்த அற்புதங்களும், பரம்பொருளை நினைவில் வராமல் செய்து
விட்டன. அத்தனை மஹான்களும் பரம் பொருளை உணர்ந்து மகிழ்ச்சியில் திளைப்பவர்கள். பிரபலங்களோ, மஹான் களிடம் ஊடுருவியுள்ள பரம்பொருளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மஹானின் பெருமையை மட்டுமே உணரவைத்து, தங்களின் பெருமைகளையும் பெருக்கிக் கொள்கிறார்கள். எங்கும் சுயநலம்... எதிலும் சுயநலம். ஆனால், வெளிப்படுத்துவது பொதுநலம் என்று! நாணயத்தில் இரு பக்கங்களில் ஒன்று கண்ணுக்கு இலக்காகாமல் காப்பாற்றப்படுகிறது.
 மஹான்கள் வழியில் செல்வது தவறு எனில், உயரிய தத்துவங்களை அறிந்து உணர்வது எப்படி?
ஸனாதனம் அறிமுகம் செய்யாத எந்தத் தத்துவமும் இல்லை. ஆனால் பிரபலங்கள் சிலர், ஸனாதனத்தைப் பின்னுக்குத் தள்ளி, மஹான்களின் கருத்துக்களை அருளமுதமாக மக்களுக்குப் பகிர்ந்தளிப்பார்கள். அவதாரங் கள் பேசாத தெய்வம்; மஹான்கள் பேசும் தெய்வம் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்துவிடும். இந்த நிலையில், பண்டைய அறங்களும், அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமும் மக்களின் மனதில் இருந்து மறைந்துவிடும். மஹான்கள் தோன்றுவதற்கு முன்பே தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ள பண்புகளும் ஸனாதனத்தின் கோட்பாடுகளும்கூட மக்களின் மனதில் இருந்து மறைந்துவிடும். மஹான்கள் சொல்வதே வேதம்; அவர்களின் பரிந்துரையே அறம். விருப்பங்கள் நிறைவேறுவதற்கு அவரை அணுகுவதே சிறந்தது என்ற நிலை தோன்றிவிடும்.
கோயில் குடமுழுக்கிலும்கூட அவர்களு டைய கையால் நீர் ஊற்றும்போது, தெய்வ சாந்நித்தியம் நிலைத்துவிடும். ஆக, தெய்வமே (மஹான்கள்) தெய்வ சாந்நித்தியத்தை (தனது சாந்நித்தியத்தை) நிலைநிறுத்திவிடுகிறது! மஹான்களுக்கான பணிவிடையில் ஸனாதன தர்மத்தின் அத்தனை சடங்குகளும் தானாகவே இணைந்துவிடும். அதனால், அன்றாடம் செய்யவேண்டிய ஸனாதன கடமைகளில் சிக்கித் தவிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. இப்படி, இந்த கலியுகத்தில் மஹான்களுக்கான ஆராதனை சகல தேவதா ஆராதனையாக மாறிவிடும். வேதம், சாஸ்திரம், புராணம், இதிஹாசம், சம்பிரதாயம் போன்ற சுமைகளை இறக்கிவைத்து விடலாம்; மஹான் நம்மை ஆட்கொண்டருள்வார் என்ற நடைமுறை, நடப்புக்கு வந்ததில் இருந்து மக்கள் தங்களின் பொது அறத்தை மறந்துவிட்டார்கள். குழந்தை களுக்கும் அதை எட்டவிடாமல் செய்து விட்டார்கள். அதன் பக்க விளைவு புதுத் தலைமுறையினருக்கு மனப் போராட்டத்தை ஏற்படுத்தி, வாழ்க்கையில் கசப்பான அனுபவத்தை ஏற்கவைக்கிறது.
பேசும் தெய்வமான மஹானிடம் எத்தகைய வினாவுக்கும் விடை கிடைக்கும். அன்றாட கடமைகளை நிறைவேற்ற நேரம் இல்லாத நெருக்கடியில், மஹான் வழிபாடு எளிதாகவும், சிறப்பாகவும், மனதுக்குப் பிடித்தமாகவும் இருப்பதால், தங்கள் மனதுக்குப் பிடித்தமான மஹான் ஒருவரை வாழ்க்கை வழிகாட்டியாகத் தேர்ந்தெடுக்கும் எண்ணம், மக்களிடம் வந்துவிட்டது. பொது அறிவு அஞ்ஞாத வாசம் செய்கிறது. மஹான்கள் வழிபாடு இன்றைய சிந்தனைக்குப் பொருத்தமாக இருக்கிறது. இந்த மாறுபாடு, ஸனாதனத்தை அலட்சியப்படுத்துகிறது.
இரண்டாவது கோணம்
மஹான்கள் பெருமைக்கு உரியவர்கள். 'தெய்வம் மானுஷ ரூபேண’ என்று சொல்வது உண்டு. மஹான்கள் உலக நன்மைக்காக அவதரித்தவர்கள். அவர்களது உபதேசங்கள் தீயவர்களை நல்வழிப்படுத்தும். குறிப்பாக, இன்றைய நாளில் அவர்களது சேவை நிச்சயமாக வேண்டும். தெய்வ நம்பிக்கையும் பக்தியும் வளர அவர்கள் பாடுபடுகிறார்கள். மக்களிடம் போட்டி பொறாமையை அழித்து, இணைந்து வாழும் பாங்கை ஏற்படுத்துகிறார்கள். அமைதியான வாழ்க்கைக்கு அவர்களது வழிகாட்டுதல் அவசியம் வேண்டும்.
 மஹான்களின் துணை இன்றி நாமே முயற்சித்தால் தெய்வ நம்பிக்கையும், பண்பாடுகளும் வளராதா என்ன?
எல்லோருக்கும் இயலும் என்று சொல்ல முடியாது. பலமுறை முயற்சி செய்தும், வாழ்க்கையில் முன்னேறாமல் தவிக்கும் மக்களுக்கு அருள்புரிந்து, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தங்களின் கடமையாக நினைக்கிறார்கள் மஹான்கள்.
வாழ்வில் சலிப்படைந்தவர்களையும், இளமையில் விரக்தி அடைந்தவர்களையும், முதுமையில் தத்தளிப்பவர்களையும் சாந்தப் படுத்தி, அவர்களுக்குப் பொருத்தமான ஆசைகளை நிறைவேற்றி, வாழ்க்கையில் புதுப் பொலிவை ஏற்படுத்துகிறார்கள். எளிமையான நாம ஸங்கீர்த்தனம் வாயிலாக கயவர்களையும் பக்தர்களாக்கி, சமுதாயத்தில் இணைந்து வாழும் பக்குவத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெற,  பல வழிகளில் தங்களுடைய ஒத்துழைப்பை வெளிப்படுத்தி உதவுபவர்கள் மஹான்கள்.
அவர்கள், அறியாமையில் மூழ்கியவர்களிடம் தங்களின் அருளால் அறிவை வரவழைத்து, சமூக சேவகர்களாக மாற்றி விடுவார்கள். அவர்களுடைய தவ வலிமை முட்டாளையும் கல்விமானாக மாற்றும். ஏழைகளும் செல்வந்தர் ஆவார்கள். படிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றைத் தங்களின் திருவருளால் ஈட்டித்தருவது மஹான்களின் பெருமைக்குச் சான்று. குடமுழுக்கிலும், கோயில் கொண்டாட்டங்களிலும் பக்தர் கூட்டத்துடன் இணைந்து வாழ்ந்து, கடவுள் நம்பிக்கையை ஊட்டி, பக்தர்களை சொந்தக்காலில் நின்று வாழ்வில் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டி அருள்புரிவார்கள். திருமணம், குழந்தைச் செல்வம் முதலான வரங்களைத் தந்து, மகிழவைப்பார்கள்.
 தெய்வத்துக்கு நிகராக மஹான்களுக்கு ஏற்றம் தருகிறது உங்கள் பதில். நீங்கள் சொல்வது சரியென்றால், இறைவழிபாடுகளே தேவை இல்லை என்றாகிவிடுமே?!
அப்படியல்ல. மஹான்கள் இறைவனின் அணுக்கத்தை அடைவதற்கான பாதையை எளிதாக்கித் தருபவர்கள். சிந்தனை வளம் குன்றிய மக்களை முன்னேற்ற பாடுபடுபவர்கள் அவர்கள்.
கடினமான வேதம், சாஸ்திரம், புராணம் ஆகியவற்றைப் படித்து, அவற்றின் கருத்துக் களைப் புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்து வோருக்கு, நாம ஸங்கீர்த்தனம் வாயிலாக பண்பையும் பக்தியையும் ஊட்டி, ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து முன்னேறச் செய்வதில், அவர்களுக்கு ஈடானவர்கள் இருக்க முடியாது. உண்மையில், அவர்கள் ஏழைப்பங்காளர்கள். முற்றும் துறந்த துறவிகளுக்கும், மஹான் களுக்கும், ஆசையற்றவர்களுக்கும் மக்களிடம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருக்காது மக்கள் அளிக்கும் வெகுமதிகளை மக்களின் மகிழ்ச்சிக்காக ஏற்றுக்கொள்வார்கள். இப்படி, அவர்களிடம் தென்படும் நல்லெண்ணங்களில் பொறாமை கொண்டு தவறான கருத்தை வெளிடுவது அறிவீனம். அவர்களைப் போன்று முன்னேற முடியாமல் தவிக்கும் சிலர், அவர்களை இகழ்ந்து பேசி, தங்களது ஆத்திரத்தைத் தணித்துக் கொள்கிறார்கள்.
பாரதத்தில், மக்களுக்கு பக்தியை ஊட்டி நல்வழிப்படுத்தும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகியன மஹான்களின் வழி காட்டுதலால் தலைதூக்காமல் இருக்கும். சமுதாய அமைதிக்கு மஹான்களின் பங்கு ஈடு இணையற்றது. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றிவைப்பது, வியாபார நோக்கில் எழுந்ததல்ல. கருணை வடிவான மஹான் களது செயல்பாடு போற்றுதலுக்கு உரியது. தன்னை அண்டியவர்கள் அற்ப ஆசைகளை வெளிப்படுத்தினாலும், அதை நிறைவேற்றி முன்னேறும் முயற்சிக்கு உற்சாகம் அளிப் பவர்கள். இப்படி சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொடுப்பதும் தன்னலம் ஆகாது. பொதுநல நோக்கில் அவர்களது செயல்பாடு சிறப்புப்பெறும். மக்கள் எல்லோரும் ஸனாதான தர்மத்தை படித்துப் புரிந்துகொண்டு, அதன் வழியில் செயல்படவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஸனாதனம் ஈட்டிக்கொடுக்கும் பலன்களை எல்லாம் எளிய முறையில் பெறுவதற்கு, பக்தி மற்றும் நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றில் மக்களை இணைத்து முன்னேற வைத்தார்கள். மக்கள் மனதில் கடவுள் பக்தியையும், செயலில் ஈடுபாட்டையும் பதிய வைத்தார்கள்.
கரடுமுரடான பாதையில் நம்பிக்கை இல்லாமல் சோர்வுற்று, பலனை எட்டாத ஏக்கத்தில், வாழ்வில் தோல்வி அடைவதை விட, செப்பனிட்ட வழியில் மஹான்களின் ஒத்துழைப்பில் நம்பிக்கையோடு வீர நடைபோட்டு, இகபர சுகங்களை எளிதில் பெற்று மகிழ்வது சிறந்தது என்பதைச் சிந்தனையாளர்கள் புரிந்துகொள்வார்கள்.
மூன்றாவது கோணம்
மஹான்கள் மக்களுக்கு வழிகாட்டும் தெய்வங்கள். அவர்களை அடிபணிவது நமது முன்னேற்றத்துக்கு அவசியம். பண்டைய நாளில், மஹான்கள் அறியாமையை அகற்றி அறிவைப் புகட்டுவார்கள். வாழ்க்கையில் தோன்றும் அற்ப ஆசைகளை நிறைவேற்றும் பணியில் இறங்கமாட்டார்கள்.
 பாமரர்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றுவது, சமுதாயப் பணிதானே? அது எப்படித் தவறாகும்?
புராண காலத்தில் தென்படும் பக்தர்கள், அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மஹான்களை அணுகமாட்டார்கள். தங்களின் பிறப்பு கடைத்தேற வேண்டிக்கொள்வார்கள். ராம பக்தர்கள், கிருஷ்ண பக்தர்கள், சிவ பக்தர்கள், சக்தி பக்தர்கள் புராணங்களில் உண்டு. அவர்களில் ஒருவர்கூட அன்றாட தேவைகளுக்காக வேண்டிக்கொள்ளவில்லை. தங்களால் இயலாத விஷயங்களில் அருள்புரிய வேண்டினார்கள்; ஆறாவது அறிவுக்கு எட்டாத பரம்பொருளை அடைய வழியை வேண்டினார்கள். அந்த மஹான்களும் எதையும் எதிர்ப்பார்க்காமல் அறிவைப் புகட்டினார்கள். அவர்களிடம் அறிவைப் பெற்றவர்கள், சுய முயற்சியில் கடவுளை உணர்ந்து பிறவிப்பயனை அடைந்தனர். 
அதை விட்டுவிட்டு அன்பர்களின் அற்ப ஆசைகளை நிறைவேற்றி வைத்து, அவர்களின் மனதில் மேலும் ஆசைகளை கொழுந்துவிட்டு எரியச்செய்து, அவர்களின் அறியாமையை நிரந்தரமாகக் காப்பாற்ற உதவுவது மஹானுக்கு அழகல்ல!
ஸனாதனத்தின் மூலமான வேதம், சிறந்த தகவல்களையும் கடமைகளையும் எடுத்துரைக்கும். ஆனால், அவற்றைத் தனது தகவல்களாகச் சொல்லாது. உண்மையை உணர்ந்த சிந்தனையாளர்களின் கருத்தாக அறிமுகம் செய்யும் (ப்ரம்மவா தினோவதந்தி). முன்னோர்களின் அருளமுதம் என்று, தான் அளித்த தகவலுக்குச் சான்றளிக்கும் (பூர்வே பூர்வேப்யோவச ஏததூபும்).
தற்போது, வேதங்களின் கருத்துக்கள் மஹான்களின் கருத்துக்களாக பெருமைப்படுத் தப்படுகின்றன. மஹானின் நன்மொழிகள் என்ற அட்டவணையில், பண்டைய வேதக் கருத்துக்கள் இடம்பெற்றுவிடும். ஸனாதன சிந்தனைகள் இரும்புத்திரையால் மறைக்கப்
பட்டு, மக்களின் கண்களுக்கு இலக்காகாமல் இருக்கின்றன. இப்படி, எல்லாமும் இருந்தும் வாழ்க்கையைச் சுவைத்து மகிழ இயலாமல், தவறான வழிகாட்டுதலில் தத்தளிப்பவர்களும் இருக்கிறார்கள். நல்ல எண்ணங்கள் மக்கள் மனதில் உதயமாக வேண்டும். பிறப்பின் இலக்கு, அதை அடையும் சிறந்த மார்க்கம் அவர்களுக்கு எட்டவேண்டும். துறவிகள் அறியாமையை அகற்ற முற்பட வேண்டும்; அற்ப ஆசைகளை நிறைவேற்ற அருள்புரிந்து அவர்களின் அறியாமையை சிரஞ்ஜீவியாக்க முற்படக்கூடாது!
 மக்களின் மனதில் நல்ல எண்ணங்கள் உதயமாகவேண்டும் என்கிறீர்கள். அதற்கு, மஹான்களின் அனுக்கிரஹமும், அருளுரைகளும் வேண்டாமா?
மஹான்கள் தோன்றுவதற்கு முன்பே வேதம் மக்களுக்குச் சிறந்த வாழ்க்கையை போதித்திருக்கிறது. அதை அறிந்து அறியாமையை அகற்றி உண்மையை உணர்ந்து மகிழ்ச்சியை எட்டவேண்டும். வேதம் மறைந்தால் அறம் மறைந்துவிடும். வேதத்தைக் கவர்ந்து பாதாளம் சென்றவனை தேடிப்பிடித்து வேதத்தை மீட்டு உலகுக்கு அளித்தார் மந் நாராயணன். வேதம், சாஸ்திரம், புராணம் ஆகியவற்றின் வழிகாட்டுதலை அப்படியே ஒதுக்கிவிட்டு மஹான்களின் ஆராதனையை சிறந்த அறமாகச் சுட்டிக்காட்டுவது பிரபலங்களுக்கும் அழகல்ல!
மஹான்களின் நல்லுரைகள், வேதம் முதலான பொக்கிஷங்களை மறக்கடித்து, தர்மத்தின் ஆணிவேரான வேதத்தை மக்களின் நினைவில் இருந்து அகற்றுவது சிறப்பல்ல. லோகாயத வாழ்க்கையில் தேவைப்பட்ட சுகபோகங்களை அள்ளி அளிப்பது மஹானின் பணி அல்ல. உலகப் பற்றை உதறித்தள்ளிய மஹான், மக்களிடம் உலகப்பற்றை உருவாக்கும் பணியில் இறங்குவது தகாது. ஆசையை அறுப்பதும், பண்பை வளர்ப்பதும், அறத்தை வளர்ப்பதுமாக அவர்களது பணி இருக்கவேண்டும்.
கோலாகலமான இன்றைய நாளில் மஹான்கள் வேண்டும்; ஆனால், அவர்கள் மக்களை ஆதரிப்பவர்களாக இருக்கவேண்டும். திருமணம், வேலை வாய்ப்பு போன்ற லோகாயத பலன்களை அருளி மக்களின் சிந்தனையை முடக்கிவிடக் கூடாது. குழந்தைச் செல்வம் வேண்டி வசிஷ்டரை நாடினான் திலீபன். அவர், அவனுக்குக் குழந்தையை அருளவில்லை. அதற்கான இடையூறை விலக்கி, குழந்தையைப் பெற்றுக்கொள்ளப் பரிந்துரைத்தார். அவனும் அறவழியில் செயல்பட்டுக் குழந்தையைப் பெற்றான். கல்வியும், கல்யாணமும், படிப்பும் வேலை வாய்ப்பும் அவரவர் சுயமுயற்சியில் சம்பாதிக்க வேண்டியவை.
உலக மக்கள் அத்தனைபேருக்கும் மஹான் களால் வாரிவழங்க இயலாமல் அரசாங்கமே திணறிக்கொண்டிருக்கிறது. மஹான்களின் கருணை நன்மை செய்யவேண்டும். ஆனால், அது எத்தகைய நன்மையைச் செய்யவேண்டும்? அறியாமையை அகற்றவேண்டும். மற்ற விஷயங்களில் மக்களே சுயமுயற்சியில் நிறைவை எட்ட வேண்டும். தன்னை அண்டியவர்களின் அற்ப ஆசைகளை நிறைவேற்றும் பணியில் மஹான்கள் இறங்கும்போது, அவர்கள் ஸனாதன அறத்தை முழுமையாக மறந்துவிடுகிறார்கள். இப்படியான நிலை உருவாகியிருப்பது நமது துரதிர்ஷ்டம்!
தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...
சுய முயற்சியில் முன்னேற வேண்டும் என்று வேதம் நம்மை அறிவுறுத்துகிறது. பிறரது ஒத்துழைப்பில் முன்னேறுவதை வேதம் ஏற்காது. 'சூரிய ஒளியில் ஒளிந்துள்ள பரம்பொருளே! எனது புத்தியை சரியான தருணத்தில் நல்வழியில் திருப்பிவிடு’ என்று காயத்ரீ மந்திரம் சொல்லும். எனவே, மஹான்களிடம் நல்லறிவைக் கேட்கவேண்டும். ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அவர்களை அணுகி, அறியாமையை தக்கவைக்கக் கூடாது!

Comments