திருக்காட்கரை திருவோணம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் இடப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 6 கி.மீ. தொலைவிலும், கொச்சியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருக்காட்கரை திவ்யதேசம். இத்தலம் பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மகாபலி சக்கரவர்த்தியை மகா விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் அழுத்தி பாதாள லோகத்திற்கு அனுப்பிய தலம் ஆகும். இக்கோயிலில் மகாவிஷ்ணு வாமன அம்சமாக எழுந்தருளி தெற்கு நோக்கி நின்றகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஓணம் திருவிழா இங்குதான் முதன் முதலில் விமரிசையாக நடந்தது. அதன் பிறகே கேரள மாநிலம் முழுவதும் பரவியதாக ஐதிகம். இன்றும் அஸ்தம் நட்சத்திரத்தன்று கொடியேற்று உற்சவம் தொடங்கி பத்து நாட்கள் கோலாகலமாக திருவிழா நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவர்.
ஓணம் பண்டிகையன்று இங்கு நடைபெறும் ‘நேந்திரம், வாழைக்குலை வழிபாடு’ மிகவும் பிரசித்திபெற்றது. இந்த வழிபாட்டின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால் அதி காலையிலேயே பக்தர்கள் நேந்திரம் வாழை தார்களுடன் நீண்ட வரிசையில் நின்று இடம்பிடித்துக் கொள்கிறார்கள். அதன்பின் தாங்கள் கொண்டு வந்த வாழைத்தார்களை பெருமாளுக்கு காணிக்கையாக்கி வழிபடுகிறார்கள்.
இந்த திருக்காட்கரை தலத்திற்கும், அங்கு விளையும் சுவை மிகுந்த நேந்திரம் பழத்திற்கும் தொடர்பு உண்டு. பக்தர் ஒருவர் தனது விளை நிலத்தில் வாழை மரங்களை பயிரிட்டாராம். அவை வளர்ந்ததும் பலன் தராமல் அழிந்து போயிற்றாம். இது தொடரவே கவலையுற்ற அவர் தங்கத்தால் வாழை குலை ஒன்று செய்து திருக்காட்கரை அப்பனுக்குச் சமர்ப்பித்தாராம். பக்தரின் வேண்டுகோளை ஏற்று, இறைவன் தன்னுடைய பார்வையை வாழை மரங்களின் மீது செலுத்தினார். நடந்ததைச் சொல்லவும் வேண்டுமா? வாழை மரங்களில் மரம் கொள்ளாத அளவுக்கு காய்கள் காத்தன. காரணம் எம்பெருமானின் நேத்திரங்களால் (கண்) பார்க்கப்பட்டதால் அந்தப் பழங்களுக்கு ‘நேத்திரம் பழம்’ என்று பெயர் ஏற்பட்டது. காணிக்கையான வாழைக் குலைகளை இக்கோயிலின் வாசலில் வரிசையாகக் கட்டி தொங்க விடுகிறார்கள்.
கபில முனிவர் இத்தலத்துப் பெருமாளை வழிபட்டதால் இத்தீர்த்தம் ‘கபில தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கபில தீர்த்தத்தில் உள்ள நீரைத்தான் மகாபலி கமண்டலத்தில் எடுத்து வாமனருக்கு மூன்று அடி நிலம் தருவதாகத் தாரை வார்த்துக் கொடுத்தார்

Comments