ஈஸ்வரா... முனீஸ்வரா!

முனியாண்டி, முனி, முனீஸ்வரர் என்றெல்லாம் அழைக்கப்படும் காவல் தெய்வம் ஏராளமான கிராம ஆலயங்களில் அருள்புரிந்து வருவதைக் காணலாம். இந்தத் திருநாமங்கள் அனைத்தும் ஒரே வடிவத்தைத்தான் குறிக்கின்றன. பெரும்பாலும் ‘முனீஸ்வரர்’ என்ற திருநாமமே பல கிராமங்களில் வழங்கப்பட்டு வரும் பொதுப் பெயராக இருக்கும்.
முனியம்மா, முனுசாமி, முனிரத்தினம், முனீஸ்வரன் என்கிற பெயர்களைக் கொண்டவர்கள் எல்லாம் முனீஸ்வரனைக் காவல் தெய்வமாகவோ, குலதெய்வமாகவோ கொண்டவர்கள் என்பது சொல்லாமலே விளங்கும். அல்லது ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் முனீஸ்வரருக்கு வேண்டிக் கொண்டு பிறந்ததால் இப்படி ஒரு பெயரை வைத்திருக்கலாம்.
உலகையே காத்து ரட்சிக்கும் ஆதிசிவனின் ஒரு வடிவாகவே முனீஸ்வரரை வணங்கி வருகிறோம். எப்படி ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக, ஸ்ரீபைரவராக சர்வேஸ்வரன் அருள்பாலித்து வருகிறாரோ, அதுபோல்தான் முனீஸ்வரராகவும் இன்றைக்கு அருள்பாலித்து வருகிறார்.
எனவேதான் பெரிய பெரிய சிவாலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் மகா சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற விசேஷ தினங்கள், காவல் தெய்வமான முனீஸ்வரர் அருளும் ஆலயத்திலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா மட்டும் அல்லாமல் இன்று உலகம் முழுக்க இந்த முனீஸ்வரருக்கு வழிபாடு உண்டு என்பது தமிழர்களாகிய நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்!
தமிழன் எந்தெந்த காலத்தில் பிழைப்புக்காக இங்கிருந்து அயல்தேசம் சென்றானோ, அப்போதெல்லாம் தான் வசிக்கிற ஊரில் காவல் தெய்வமாக விளங்குகின்ற முனீஸ்வரரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு அவரது திருச்சன்னிதி முகப்பில் இருந்து சிறிது மண் எடுத்துக்கொண்டு போனான்.
தன் கிராமத்தில் அருளும் முனீஸ்வரரே தன்னுடன் பயணப்பட்டு வந்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையிலும், அவரை நித்தமும் கருவறையில் வைத்து வணங்க வேண்டும் என்ற பக்தி சிந்தனையிலும் தான் குடிபுகுந்த தேசத்தில் முனீஸ்வரருக்கு ஒரு கோயில் கட்டினான். தன் ஊர் காவல் தெய்வமே இங்கும் குடி கொள்வதாக எண்ணி ஆனந்தப்பட்டான்.
இப்படித்தான் உலகம் முழுக்க முனீஸ்வரர் வழிபாடு பல ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, மியான்மர் உட்பட பல நாடுகளிலும் முனீஸ்வரருக்குத் திருக் கோயில்கள் உண்டு. முனீஸ்வரருக்கு இன்று ஒரு திருவிழா என்றால், அயல்தேசமே அமர்க்களப்படுகிறது. எந்த உத்தியோகம், எந்தத் தொழிலில் இருந்தாலும் முனீஸ்வரரின் பக்தர்கள் அனைவரும் நம் மூரில் எப்படி சொந்தபந்தம் என ஒன்று திரள்கிறார்களோ, அதுபோல் அயல்தேசங்களிலும் கூடுகிறார்கள்.
உலகின் எந்த மூலையில் இருந்தும் உளமார வழிபட்டால், தன்னை நம்பியவர்களைக் காத்து ரட்சிப்பதில் முனீஸ்வரர் கண்கண்ட தெய்வமாக இருந்து வருகிறார். இது கண்கூடு.
கண்டிப்பு, கறார், நேர்மை, நீதி - இவைதான் முனீஸ்வரர்!
தப்புத்தண்டா நடக்காமல் ஊரைக் காப்பது, விளைந்த பயிர்கள் களவு போகாமல் வயல்வெளிகளைக் காப்பது, திருட்டு நடக்காமல் தன் குடி மக்களைக் காப்பது போன்ற பல பணிகளை முனீஸ்வரர்தான் செய்து வருகிறார் என்பது கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
முனீஸ்வரர் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வரும் பல கிராமத்து வயல்வெளிகளுக்கு இரவு நேரக் காவலுக்கு ஆட்கள் நியமிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தில் ஒரு குழப்பம் என்றாலும், வீடுகளில் கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் தடைபடுகின்றன என்றாலும், உத்தியோகம் அமையாமல் தள்ளிப் போகிறது என்றாலும், காவல் தெய்வமான முனீஸ்வரர் ஆலயத்தில் போய் ஒரு பாட்டம் புலம்புவார்கள் சம்பந்தப்பட்டவர்கள். ‘ஒன்னை விட்டா எனக்கு யார் கதி’ என்று உரிமையுடன் கேட்பார்கள்.
முனீஸ்வரரைத் திருப்திப்படுத்தும் விதமாக அங்கே பொங்கல் வைத்து, அபிஷேகம் செய்து, புது துணிகள் சார்த்தி முனீஸ்வரரை வழிபட்ட பின்தான் அடுத்த வேலையே!
கோயில்களுக்கே காவல்காரர்களை - அதாவது செக்யூரிட்டிகளை நியமிக்கும் இந்தக் கலிகாலத்தில் முனீஸ்வரர் ஆலயத்துக்கு அவரேதான் காவல். அவரது அனுமதியோ, கண்ணசைவோ இல்லாமல் அங்கிருந்து ஒரு துரும்பும் அசையாது.
பர்மா என்று அழைக்கப்பட்ட நாடு இப்போது மியான்மர். சுதந்திரத்துக்கு முன் இங்கே இடம் பெயர்ந்த தமிழர்கள் லட்சக்கணக்கில் வசித்து வருகிறார்கள். ரங்கூன் என்று அப்போது அழைக்கப்பட்டது இப்போது யாங்கூன் என்று அழைக்கப்படுகிறது.
யாங்கூனில் இருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் வருகிற ஊர்-பீலிக்கான். இங்கே முனீஸ்வரருக்கு அற்புதமான ஓர் ஆலயம் அமைந்துள்ளது. உலகில் உள்ள முனீஸ்வரன் ஆலயங்களுள் இந்த ஆலயம், மிகச் சிறப்பான நிலையில் இருந்து வருவது பாராட்ட வேண்டிய விஷயம்.
தற்போது ஒரு சூலமே இங்கு முனீஸ்வரராக வணங்கப்பட்டு வருகிறது. 2011 ஏப்ரலில் இந்த ஆலயத்துக்கு நடந்த கும்பாபிஷேகத்தில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள் என்பது பிரமிக்கக் கூடிய தகவல் (கும்பாபிஷேகத்தின் போதுதான் இந்த ஆலயத்தில் முனீஸ்வரருக்கு விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது).
இங்கு அரச மரத்தடியில் பிரதிஷ்டை ஆகி இருக்கும் ஒரு சூலத்தையே முனீஸ்வரராக நினைத்து மக்கள் வணங்கி வருகிறார்கள். நீதி, நியாயம் இவற்றை மக்களுக்கு வழங்கி வருவதால் இவரை ‘ஜட்ஜ் ஐயா’ என்று அந்தத் தேசத்து மக்கள் அழைக்கிறார்கள்.
எத்தகைய வழக்குகள் இழுபறியில் இருந்தாலும், அதற்குரிய தஸ்தாவேஜுகளை இவரது காலடியில் வைத்து வணங்கினால், ஒரு வார காலத்துக்குள் தீர்வு கிடைத்து விடுவது அவரது அருளில்தான் என்று சொல்லவேண்டும்.

Comments