ஆண்டாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம்

'எல்லா நாளும் காலையில் எழுந்து, கோயில் கைங்கர்யத் துக்கு அவர் போயிடுவார். குறிப்பா, மார்கழி மாசத்துல அதிகாலைல அவர் கிளம்பிப் போறதைப் பார்க்கும்போதே அவ்வளவு நிறைவா இருக்கும். அதேபோல, பனி பெய்யற அதிகாலை ரெண்டு மணிக்கு எழுந்து, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தெருவையே அடைக்கற அளவுக்குக் கோலம் போடுற கூட்டத்தைப் பார்க்கறதும், அதுல நாமளும் ஒருத்தியா இருக்கறதும் மிகப் பெரிய சந்தோஷம்!'' என்கிற ஸ்ரீவித்யாவின் பேச்சு, மார்கழிக் குளிரைப் போலவே சில்லிடுகிறது.
மதுரை, கூடலழகர் பெருமாள் கோயிலில் கைங்கர்யம் செய்யும் சுரேஷ் பட்டாச்சார்யரின் மனைவி ஸ்ரீவித்யா, மார்கழியின் மகத்துவங் களைப் பட்டியலிட்டார்...
''பெருமாளுக்கும், திருப்பாவையைத் தந்த ஸ்ரீஆண்டாளுக்கும் உகந்த அற்புத மாதம் மார்கழி. வைஷ்ணவ சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக் கறவங்க, தவறாம மார்கழியை விமரிசையா கொண்டாடுவாங்க. 

மார்கழியின் 27-ஆம் நாள், ரொம்ப விசேஷம். அன்னிக்கு ஸ்ரீஆண்டாளின் திருப்பாவையை மனதாரப் பாடறது ரொம்பவே விசேஷம். திருச்சி உத்தமர் கோவில்ல இருக்கிற மும்மூர்த்திகளையும் (ஸ்ரீசிவனார், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா) அந்த நாள்ல தரிசனம் பண்ணி வேண்டிண்டா, நினைச்ச காரியம் நிறைவேறும்னு அப்பா சொன்னார். அப்படியே தரிசனம் பண்ணி, பிரார்த்தனை பண்ணினேன். அதன்படியே வரன் அமைஞ்சுது; அந்த அளவுக்கு மார்கழியில ஸ்ரீஆண்டாளுக்கு பூஜை பண்றது, மகத்தானது'' என்றவருக்கு, கிருஷ்ணன் என்ற மகனும், பார்ஷிணிகா என்ற மகளும் உள்ளனர். ''வருஷா வருஷம், மார்கழி மாசம் வந்துட்டா வீடே கோலம், பூஜை, திருப்பாவைப் பாடல்கள், நைவேத்தியம்னு கோலாகலமாயிடும். தினமும் திருப்பாவை பாடினாத்தான் மனசுக்கு நிம்மதி. அதேபோல, கூடலழகர் பெருமாளை தினமும் தரிசனம் பண்ணிரு வேன். பேருக்கேத்தது போலவே அப்படியரு அழகு, கூடலழகர்!
பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் என்ன பிடிக்குமோ அதை நைவேத்தியமா செஞ்சு பூஜை பண்ணினா, குடும்பத்துல சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்கறது நிச்சயம். மார்கழியில பெருமாளுக்கு வெண்பொங்கலும், ஸ்ரீஆண்டாளுக்கு நெல்லிக்காயும் நைவேத்தியம் பண்றது ரொம்பவே விசேஷம். அப்படி நைவேத்தியம் பண்ணி  வேண்டிக்கிட்டா, தேக பலமும் கூடும்; ஆயுள் பலமும் அதிகரிக்கும்! தடைப்பட்ட திருமணத்தை அம்சமா நடத்திக் கொடுத்துருவா, ஆண்டாள்!
மங்கலங்கள் அனைத்தையும் அருளும் மார்கழி மாதத்தைச் சீரும் சிறப்புமாக் கொண்டாடணும். பெருமாளின் பெருங்கருணை, நம்மையும் நம்ம குடும்பத்தையும் நிச்சயம் உயர்த்தும்!'' என நெக்குருகிச் சொல்கிறார் ஸ்ரீவித்யா.

Comments