மகான்கள் கால்பட்ட மகோன்னத பூமி

துறவிகளும், முனிவர்களும், ஏன் இறைவனிடம் ஆழ்ந்த பற்று வைத்துள்ள சாதாரணமானவர்கள்கூட, ஆண்டவனிடம் வேண்டுவது, ‘மீண்டும் மனிதப் பிறவியைக் கொடுக்காமல் உன் திருவடி நிழலில் நிரந்தரமாக இளைப்பாற கருணை காட்டு’ என்பது தான். ‘பிறவா வரம் தாரும் பெம்மானே’ என்று பாடினார் பாபநாசம் சிவன். பிறவா வரம் பெறுவதற்காக பாரத தேசத்தில் உள்ள பல கே்ஷத்திரங்களுக்குச் சென்று வழிபடுபவர்கள் கணிசமாக உண்டு. அதுபோன்று வேண்டுதலை இறைவனிடம் வைக்க, நாம் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம்.
காஞ்சிபுரத்திலிருந்து ஆற்காடு செல்லும் சாலையில் 16வது கி.மீ.யில் உள்ள வட இலுப்பைக்கு சென்றால் போதும். ‘கருப்பையில் பிறவாதிருக்க இலுப்பையூரை நினை மனதே’ என்று பாடினார் ‘திருப்புகழ்’ அருணகிரிநாதர். இலுப்பையூருக்கு சென்று தடம் பதித்த மகான்கள் அநேகம். வடலூர் ராமலிங்க சுவாமி அவர்களுக்கு அன்னபூரணி ஜோதி வடிவில் காட்சியளித்த ஸ்தலம் இலுப்பையூர்தான்.
இதன் அருகே உள்ள தாமலில் பிறந்த சேஷாத்திரி ஸ்வாமிகள் திருவண்ணாமலைக்குப் போகும் முன் இலுப்பையூரில் பல நாட்கள் தங்கியிருந்தாராம். தபோவனம் ‘ஞானானந்த ஸ்வாமிகள் கால்பட்ட பூமி.’ காஞ்சி மகாபெரியவர் காஞ்சியிலிருந்து வெளியே கிளம்பும் முன் இந்த ஊரில் தங்கி பின்னர்தான் செல்வாராம். அதேபோல திரும்ப காஞ்சிக்குள் நுழையும் முன் மறுபடியும் சில நாட்கள் இங்கு தங்கி செல்வாராம். காமாட்சி அம்பாளின் சாந்நித்யம் இங்கு அபரிமிதமாக உள்ளது என்று தமது அருளுரையில் கூறியிருக்கிறார் மகாபெரியவர். ரமணர், பூண்டி மகானும் இங்கு வந்திருக்கிறார்கள்.
பாலாற்றங்கரையிலேயே உள்ள இந்த ஊர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை கூட வேத கோஷங்களால் எப்போதும் நிறைந்திருக்குமாம். நான்கு வேதங்களையும் சொல்லித்தர நிறைய வேத வித்துக்கள் இந்த ஊரில் வசித்து வந்தனர். இந்த ஊருக்கு பிரம்ம வித்யாபுரம், மதூககே்ஷத்திரம் என்றெல்லாம் திருப்பெயர்கள் உண்டு. அகத்திய மகாமுனிகள் இங்கு வந்து சென்றதாக ‘ஷடாரண்ய மகாத்மியம்’ சொல்கிறது. இங்குள்ள அகத்தீஸ்வரர் கோயில் லிங்கத்தில் மதூகர் என்ற முனிவர் ஐக்கியமானதால் மதூக கே்ஷத்திரம் ஆயிற்று.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஊரில் 21 தலைமுறையாக வேதம் சொல்லித்தரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் சுதாகர் தீட்சிதர். இவரது தகப்பனார் குமாரசாமி தீட்சிதர் வேத விற்பன்னர். நமது நாட்டில் பல தலங்களில் வேத வித்தியாலயங்கள் நடத்தி ஆயிரக் கணக்கான வேத பண்டிதர்களை உருவாக்கியவர். வட இலுப்பையில் உள்ள இவரது பூர்வீக வீட்டு பூஜை அறையில் பலமுறை மகா பெரியவரே அமர்ந்து பூஜை செய்திருக்கிறார். இந்த வீட்டுக்கு எதிரில் இருந்த மருந்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோயில், கால ஓட்டத்தில் சிதிலமடைந்து கவனிப்பார் இன்றி இருந்தது. பூஜை செய்யக்கூட ஆளில்லை. இந்த நிலையில் கோயிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்தக் கோயிலின் விசேஷம் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர்தான். பைரவர் என்பவர் ஈசனின் ருத்ர அம்சம் என்பது நமக்குத் தெரியும். இவர் காக்கும் கடவுள். இங்குள்ள பைரவரின் சிறப்பு அவர் தன் பத்தினி பைரவியுடன் இருப்பதுதான். இந்தியாவில் ஏழு இடங்களில்தான் பைரவர், பைரவியுடன் இருக்கும் கோயில்கள் இருக்கின்றன. மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் சேரும். ஈசான்யத்தில் தெற்கு நோக்கி இருக்கும் பைரவி சமேத ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரை வணங்கினால், உங்கள் கடன் பிரச்னைகள் தீரும் என்பது மட்டுமல்ல; உங்கள் நிதி ஆதாரம் எந்த சங்கடத்தையும் சந்திக்காது. ஞாயிறு மாலை ராகு காலத்தில் புதிய அகல் கொண்டு விளக்கேற்றி பைரவரை வணங்க வேண்டும். வேண்டுதல் நிறை வேறியவுடன் அன்னதானம் செய்யவேண்டும்.
இந்தக் கோயிலில் மற்றொரு அரிதான காட்சி, ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தியை நோக்கி நின்று கொண்டிருப்பது. மருந்தீஸ்வரர் மேற்கு நோக்கி இருக்கிறார். வித்யா மந்த்ர சாஸ்த்திரப்படி ஸ்ரீசக்ரம் தயாரிக்கப்பட்டு, காமாட்சி அம்பாளின் பீடத்தில் ஸ்தாபிக்கப் போகிறார்கள். கும்பாபிஷேகத்துடன் தடங்கப் பிரதிஷ்டையும் நடைபெறப் போகிறது.
கோயிலில் உள்ளே நுழைந்தவுடன் வலது பக்கத்தில் குமாரசாமி தீட்சிதரின் அதிஷ்டானம் உள்ளது. சக்தி வாய்ந்த முறையில், சாஸ்திரோத்தமாக கட்டமைக்கப்பட்ட இந்த அதிஷ்டானத்துக்கு அருகில் தியானம் செய்தால் ஆன்மிக அதிர்வலைகளை உணர முடியுமாம்.
1984ம் வருடம் வசந்த பஞ்சமிக்கு முன்பாக மகா பெரியவர் இங்கு சில நாட்கள் தங்கி, எங்கள் பூஜை அறையில் தியானத்தில் ஆழ்ந்தது மறக்கவே முடியாது" என்கிறார் சுதாகர் தீட்சிதர். கோயிலின் கிழக்கு பக்கம் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்பது நீண்டகால திட்டம். அதுவரை தற்காலிகமாக உள்ள நுழை வாயிலில் மேல் முகப்பு மண்டபம் அழகாக எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த முகப்பு மண்டபத்தின் முன்புறம், இந்த கே்ஷத்திரத்துக்கு எழுந்தருளிய மகாபெரியவர் உள்ளிட்ட மகான்களின் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் பின் பகுதியில் பாம்பன் சுவாமிகள், ராகவேந்திரர், சுரைக்காய் சுவாமிகள், குழந்தையானந்த சுவாமிகள் ஆகியோர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகான்களும் இத்தலத்தில் காலடி பதித்துள்ளனர்.
மகான்கள் கால் பதித்த இந்த புண்ணிய பூமிக்கு சென்று வந்தால் நமது பாபங்கள் கரைந்து போகும்.
தொடர்புக்கு: சுதாகர் தீட்சிதர் - 98401 13169

Comments