அரங்கன் சூடிய அழகு மாலை!

பாவை தந்த பாவை, பட்டர்பிரான் கோதை, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, நாச்சியார், மாலை தந்த கோதை, ஆண்டாள் என்றெல்லாம் பக்தர் உலகமும், இலக்கிய உலகமும் போற்றும் ஆண்டாள் பெற்ற இறையருள் மகத்துவம் மிக்கது. இசை பாடி, இறைவனிடம் சிவலோகம், வைகுந்தம் அடைய வேண்டியவர் பலர். ஆனால், இறைவனை இங்கேயே வரவழைத்து, மணமாலை சூட்டியவர் ஆண்டாள்! அவர் பெற்ற பேறு யார் பெறுவார்?
துளசியில் மலர்ந்த மலர்
இறைவனுக்குப் பூமாலை, பாமாலை தொடுத்து வழிபட்ட விஷ்ணு சித்தர் மாலாகாரர் எனப்பட்டார். ஒரே குடும்பத்தில் தந்தை, மகளார் இருவரும் ஆழ்வார்களானது அதிசயமே! அதிலும் அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய், ஆழ்வார் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய், பிஞ்சாய்ப் பழுத்த சுரும்பார் குழல் கோதை, ஆண்டாளைப் பெரியாழ்வார் திருத்துழாய்ப் பாத்தியில் கண்டெடுத்து வளர்த்த வரலாறு அற்புதம். கையிணையும், திருவடி மலர்களும், முகமும், எல்லாமும் சேர்ந்து மலர்மாலை போலிருந்த தெய்வக் குழந்தையைக் ‘கோதை’ என்றார் பட்டர்பிரான்.
கோதை என்ற தமிழ்ச்சொல் - மாலை எனப் பொருள் தரும். கோதா என்ற வடமொழிச் சொல் பூமாலை, பாமாலை இரண்டையும் பொருளாகத் தரும். ஆம்; ‘இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நல்பாமாலை. பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு’ என்றது தனியன். ‘பெரியாழ்வார்’ ஆக விஷ்ணு சித்தர் எப்படி மாறினார்? இறைவனுக்கே ‘பல்லாண்டு’ பாடிப் பெருமைக்குரிய ஆழ்வார் (பெரியாழ்வார்) ஆனார்.
வண்டல் விளையாட்டில் கூட கண்ணன் பெயரே! ‘கூடல் இழைத் தாலும் கோவிந்தனைக் கூடச் செய் என்ற வேண்டுதலே’ என வளர்ந்தார் நாச்சியார்.
‘இறைவனுக்கு நான் ஏற்றவள் என்றால், அவரது மாலை எனக்கு ஏற்றதாக இருக்குமே! பார்ப்போம்!’ என்று, அப்பா குடலையில் வைத்த மாலையைத் தன் தோளிலும், கண்ணியைத் தன் கொண்டையிலும் சூட்டிக் கொண்டு, கண்ணாடிக் கிணற்றில் அழகு பார்த்துவிட்டு வைத்து விடுவாளாம்! அந்தக் காலத்தில் கண்ணாடி கிடையாதல்லவா? கிணற்று நீர் தெளிவாகக் கண்ணாடி போல் பிம்பம் காட்டுமே! அதில்தான் பார்த்தாளாம்.
ஒரு நாள் தகப்பனார் பார்த்து மகளைச் சற்று கடிந்து பேசிவிட்டு, வேறு மாலை தொடுத்துக் கொண்டு தர, இறைவன், ‘கோதை சூடித் தந்த மாலையே யாம் உவப்பது’ என்று அருளினாராம். இன்றும் ஆண்டாள் மாலை திருவேங்கடவனுக்கு எடுத்துச் சென்று சாத்தப்படுகிறதே!
மார்கழி நோன்பு
‘மார்கழித் திங்களில் வையத்து வாழ்வீர்காள்’ என அனைவரையும் சேர வரவழைத்து ஓங்கி உலகளந்த உத்தமன் புகழ்பாடும் படி செய்தாள். ‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம்’ என விரதமிருந்து தலையில் பனி வெள்ளம், தரையில் பால் வெள்ளம், மனதில் கிருஷ்ணபக்தி வெள்ளம் என அலைமோத, தோரண வாயிற்காப்பானை எழுப்பி, நந்தகோபாலர், யசோதை, பலராமர் இவர்களைத் துயிலுணர்த்தி நப்பின்னையை வேண்டி, கண்ணனையும் எழப் பண்ணினார்கள்.
அன்றிவ்வுலகம் அளந்த அடி போற்றி, சீரிய சிங்கா தனத்துக்கு வந்தமரச்செய்து, கூடாரை வெல்லும் சீர்கோவிந்தனிடம் ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உமக்கே நாம் ஆட்செய்யக் கூடிய (கைங்கரிய) வரம் தா’ என வேண்டி, மற்றை நம் காமங்கள் மாற்று எனவும் நோன்பைத் தலைக்கட்டினாள்.
மாலையை ஏற்ற மணிவண்ணன் மங்கை கோதையை ஏற்க வரவில்லையே! பாவை நோன்பு நோற்றும் பரந்தாமன் பரிவு காட்டவில்லையே! நாச்சியார் திருமொழி (143) பிறந்தது.
‘கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ!
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன்; சொல்லாழி வெண்சங்கே!

என்றுருகினாள். மேகத்தைத் தூதுவிட்டாள்
‘வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர்சிதையப் பாய்ந்தேறிப் பொழிவீர்காள்!
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே

எனத் தவித்தாள். ‘மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன்’ என்றுறுதி பூண்டாள்.
மாலாய்ப் பிறந்த நம்பி, மாலே செய்யும் மணாளன், ஏலாப் பொய்கள் உரைப்பான் கோவிந்தனை மணக்க மாசி முன்னாள், ஐயநுண்மணல் கொண்டு, அழகிய வீதி விளக்கி, காமனையும் சாமனையும் வேண்டினாள். பயன் ஏதும் வரவில்லை. பரமனுக்கு இவளை உருக வைத்துப் பைந்தமிழ்ப் பாடல் பருக ஆசை! நாறு நறும்பொழில் மாலிரும் சோலைமலை நம்பிக்கு நூறுதடா வெண்ணெயும், நூறு தடா அக்கார அடிசிலும் நிவேதனம் செய்வதாய் வேண்டுதல் வைத்தாள்.
அதிசயக் கனவு
உலகில் யாருக்கும் இப்படி அதிசயக் கனவு வருமா? நடக்கப்போகும் திருமணத்தைக் கனவில் கண்டாள்.
‘வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்!

‘நாளை வதுவை மணம் என்று நாளிட்டுப்
பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ்க்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன், தோழீ! நான்!

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்தார்கள். அந்தரி, நீலி, சிவசக்தி, நாத்தனாராக மந்திரக்கோடி உடுத்திவிட்டாள். மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத, மைத்துனன் நம்பி மதுசூதனன் கோதையைக் கைப்பிடித்தான். பின் காலையும் பற்றினான்! வேறொன்றுமில்லை! சப்தபதி சொல்லி, காலில் மிஞ்சி என்ற மெட்டி போடத்தான்! பொரியிட்டனர், மஞ்சள் நீராடினர். அத்தனையும் கனவா? கலங்கி மீண்டும் விரதம் இருந்தாள்.
பங்குனி உத்தரம்
மாலையை ஏற்ற மலையப்பன், மங்கையை ஏற்கப் பங்குனி உத்தர நாளை நிச்சயித்தான். திருவரங்கத்தில் மணம் நடந்து, கோதை செங்கோலுடைய தென்னரங்கர் தோளில் சேர்ந்தாள் என்று ஒரு புராணம் சொல்கிறது. வடிவழகிய நம்பிதாசர் ‘ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் திருமுன்பு திருமணம் நடந்தது’ என்கிறார். பெண் வீட்டில் திருமணம் நடப்பது முறை என்று வில்லிபுத்தூர் பக்தர்கள், அங்கேயே மணம் நடந்ததென்கிறார்கள். அரங்கன் தோளில் கோதை மாலையானாள்!
அவள் இசையால் இசை பெற்ற வரலாறு இது.
பெரும்புதூர் மாமுனியின் தங்கை
‘திருப்பாவை ஜீயர்’ என்னுமளவு பாவையில் நெஞ்சை ஈடுபடுத்தியவர் உடையவர். ஆண்டாளின் வேண்டுதலைப் பாடல்வழி அறிந்து, தானே நூறு தடா வெண்ணெயும், அக்கார அடிசிலும் சோலை மலை அழகருக்கு நிவேதனம் செய்தார்.
வில்லிபுத்தூர் வந்த யதிராஜராம் ராமானுஜரை, ஸ்ரீ ஆண்டாள் குழந்தை போல எழுந்தருளி வந்து, ‘வாரும் அண்ணரே!’ என்றாளாம். ஒரு பெண் பிரார்த்தனை செய்துவிட்டுத் திருமணமாகிப் புக்ககம் சென்றுவிட்டால், அவளது திருத்தகப்பனோ, அண்ணனோ நிறைவேற்றலாம். காலத்தால் பின் வந்தாலும் உடையவரை ‘அண்ணா’ என்றழைத்த ஆண்டாளை அவரது தங்கை என்றது சம்பிரதாயம்.
‘திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!

என வாழ்த்தி, வணங்கிப் பாவை பாடி பரமன் அருளை நாமும் பெறலாமே!

Comments