மஞ்சள் கௌரி

இயற்கை நமக்களித்த மாபெரும் கொடை மஞ்சள். மஞ்சள் என்றாலே பெருகுதல் என்று அர்த்தம். தமிழ்நாட்டில் ஈரோடு - மஞ்சள் நகரம் என்றே அழைக்கப்படுகிறது. மஞ்சளின் மருத்துவ குணங்கள் ஏராளம். எனவேதான், உணவில் மஞ்சள் சேர்க்கிறோம். பெண்கள் தினசரி மஞ்சள் பூசிக் குளிக்கின்றனர். வீட்டுக்குள் கிருமிகள் வராமலிருக்க நிலைப்படிக்கு மஞ்சள் பூசுகிறோம்.
திருமணச் சடங்குகள் மஞ்சள் இடித்தலில் ஆரம்பித்து, மஞ்சள் நீராடலிலேயே முடியும். மஞ்சள் பிள்ளையாரே முதல்தெய்வம், மஞ்சள் கயிறே கையில் கங்கண காப்பாகிறது. மஞ்சள் தோய்த்த சரடே மாங்கல்யம் தாங்கும் மங்கல நாணாகிறது. மஞ்சள் நீரில் தோய்த்த வஸ்திரமே முகூர்த்த வஸ்திரமாகிறது. மஞ்சள் அரிசியே அட்சதையாகி மணமக்களை ஆசீர்வதிக்கப் பயன்படுகிறது.
மஞ்சள் கலந்த நீரே மஞ்சள் நீராடலில் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆடிப்பெருக்கு (ஆடி 18) அன்று புது நீரில் மஞ்சள், குங்குமம், பூ இட்டு வழிபடுவதால் மங்கலம் நிறைகிறது.
ஆடி, ஆவணி மாதங்களில் வரும் பண்டிகைகளில் மஞ்சளில் கௌரி செய்வதே முக்கியமானது. மெட்டல், தங்கம், வெள்ளி போன்ற கௌரிகளை வைத்து பண்டிகை செய்வதால் எந்தப் பலனும் இல்லை. முதல் நாளே மஞ்சளில் கௌரி செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பின் பூஜிப்பதால் நல்ல பலன் கிடைக்கிறது.
பண்டிகை அன்று காலையில் நீராடி, மஞ்சளை தொட்டு பயபக்தியோடு, இறையாற்றல் உணர்வோடு மஞ்சள் கௌரி செய்ய வேண்டும்.
புத்திர பாக்கியத்துக்கான வலிமை, உடல் செல் சிதையா தன்மை, நோய் எதிர்ப்பு ஆற்றல், மன சீரமைப்பு, ஆரோக்கியம், செல்வ வளம், நல்ல அலைகளை ஈர்த்தல் இவை அனைத்தும் மஞ்சள் கௌரியினால் மட்டுமே முழுமையாகக் கிடைக்கும். பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷிக்க சுத்தமான மஞ்சள் கௌரியே உன்னதமானது. பூஜை முடிந்தபின் நீர் நிலைகளிலேயே கௌரியை கரைக்க வேண்டும்.
அறிவியல் விளக்கம்: ஆடி, ஆவணி மாதங்கள், அமாவாசை, கிரகண நேரங்களில் பூமியின் பல பகுதிகள் தீய கதிர்வீச்சுகளால் பாதிப்படையும். இவை நம் வீட்டையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்காதிருக்க மஞ்சள் மட்டுமே மிகச்சிறந்த தடுப்பு கவசம் என்பதாலேயே மஞ்சளில் கௌரி செய்து வழிபடுவது மகோன்னதமாகிறது. பிரபஞ்சத்தின் நல்ல சக்தியை ஈர்த்து, தீய அலைகளைத் தடுக்கிறது மஞ்சள் கௌரி. பூஜை செய்தபின் கௌரியை நீர்நிலைகளில் கரைக்கும் பொழுதுதான் தீய அலைகள் கரையும்.
இனி, அனைவரும் மஞ்சளில் மட்டுமே கௌரி வைத்து பூஜை செய்யலாமே!

Comments