பிரளய கால வீரபத்திரர்

பெங்களூரு, மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில், குட்டஹள்ளி என்ற இடத்தில் குன்றின் மேல் பிரளய கால வீரபத்திரர் திருக்கோயில் அமைந்துள்ளது.கோயிலை அடைய சீரான படிக்கட்டுகள் உள்ளன. சிறிய கோபுர வாசலின் உள்ளே நுழைந்ததும், பரந்த, திறந்த வெளி மண்டபம். வெளி மண்டபத்தின் நடுவில், ஸ்வாமியை நோக்கி நந்தி தேவர். உள் மண்டபத்தின் கோடியில், நந்திக்கு எதிரில், மூலவர் பிரளயகால வீரபத்திரர் சன்னிதி. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில் என்கிறார்கள்.
வீரபத்திரர் 32 கரங்களுடன், சிவனுக்குரிய, மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம், விஷ்ணுவுக்குரிய சங்கு, சக்ரம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கி, கிழக்கு நோக்கி அருள்பாலிக் கிறார். அருகில், தட்சன் தன் மனைவி பிரசுத்தா தேவியுடன் உள்ளார். ஸ்வாமியின் இடப்புறம், ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. வலது புறம், வரிசையாக ரேணுகாச்சாரியார், பார்வதியுடன் உமாமஹேஸ்வரர், வள்ளி தெய்வயானையுடன் சுப்ரமண்யர், கணபதி ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. உமாமகேஸ்வரர் சன்னிதியில், நந்தி ஸ்வாமியின் கால்களைப் பிடித்துக் கொண்டும், அருகில், விநாயகர், முருகனும் உள்ளனர். நவக்கிரக சன்னிதியில், சூரியன், ஏழு குதிரைகளைப் பூட்டிய ரதத்தில் காட்சி அளிக்கிறார்.
தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்கிறான். அதற்கான காரணத்தைக் கேட்க, தாட்சாயினி யாகம் நடக்கும் இடம் செல்ல, தட்சன் தேவியையும் அவமதிக்கிறான். கோபம் கொண்ட சிவபெருமான், தனது அம்சமான வீரபத்திரரை அனுப்புகிறார். வீரபத்திரரும், சென்று, யாகத்தை அழித்துவிட்டு, ஹவிர்பாகம் பெற வந்த தேவர்களையும் விரட்டிவிடுகிறார். பின்பு, 32 கரங்களுடன், விஸ்வரூபம் எடுக்கிறார். அனைவரும் அறிந்த இந்த புராணக்கதையின் அடிப்படையிலேயே 32 கரங்களை உடைய பிரளயகால வீரபத்திரர் சிலை அமைத்து, கோயிலும் எழுப்பப்பட்டது என்றும், காலப்போக்கில் அழிந்துவிட்ட இக்கோயிலை, ராஜராஜ சோழன் இவ்விடத்துக்கு விஜயம் செய்தபோது, புதரின் நடுவே ஒளி மின்னுவதுபோல் தோன்ற, அருகில் சென்று தோண்டி எடுத்தான். 32 கைகளை உடைய இச்சிலையை கண்டெடுத்து, பிரதிஷ்டை செய்து கோயிலும் கட்டினான் என்பது வரலாறு. உற்சவரும் 32 கைகளுடன் காட்சி அளிக்கிறார்.
புத்ர தோஷம், நாக தோஷம் உள்ளவர்கள், வீரபத்திரரிடம் வேண்டிக் கொண்டு, தோஷ நிவர்த்தி அடைகிறார்கள்.
வீரபத்திரருக்கு, ஆவணி மாத திங்கள் கிழமைகளில் விழா எடுக்கப்படுகிறது. கடைசி ஆவணி ஞாயிறன்று இரவு, ஸ்வாமி முத்துப் பல்லக்கில் புறப்பாடாகிறார். தை மாதம் ரத சப்தமி நாளில், ஸ்வாமிக்கு ருத்ராபி ஷேகம் செய்யப்படுகிறது. அச்சமயம், அர்ச்சகர்கள் இருவர், வீரபத்திரர் போல் வேடம் அணிந்த பக்தர் ஒருவர் என மூவரும், அக்னி குண்டத்திலிருந்து அக்னியை கைகளால் அள்ளி எடுத்து, தட்டில் வைத்து, அதில் தூபம் போட்டு வீரபத்திரருக்குக் காட்டி, பூஜை செய்கிறார்கள். பின்பு பூக்குழியில் இறங்கி நடக்கிறார்கள்.
வீரபத்திரர் உக்கிரமாக இருப்பதால், உக்ரத்தைத் தணிக்க, செவ்வாய்க் கிழமைகளில் ருத்ராபிஷேகமும், கார்த்திகை கடைசி செவ்வாய் அன்று ஸ்வாமிக்கு தேங்காய்த் துருவல் சாத்தி அலங்காரமும் செய்கிறார்கள்.
வெற்றிலைப்படல் வழிபாடு
பொதுவாகவே, வீரபத்திரர் உக்கிரமானவர். எனவே, அவரை வழிபடக் கூடாது என்கிற தவறான தகவல் நிலவுகிறது. கடமை தவறிய, தர்மம் தவறிய தட்சனைத் தண்டித்து தர்மத்தை நிலைநாட்டிய தர்ம தேவன் இவர். இந்தப் பெருமான், திருவானைக்கோயில் மேல் விபூதி பிராகாரத்தில் சாந்த வீரபத்திரராக பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்.
நான்கு திருக்கரங்கள். வலது கரங்களில் கத்தி - அம்பு, இடது கரங்களில் வில் - தட்சனின் தலை. ஏழடி உயரத்தில் நின்றிருக்கும் திருக்கோலத்தில், சற்றே வித்தியாசமாக சாந்த சொரூபியாகக் காட்சியளிக்கிறார்.
வீரபத்திரருக்கு உரிய அலங்காரங்களில் ஒன்று, ‘வெற்றிலைப்படல்’ சாத்துவது. வெற்றிலையை அடுக்கடுக்காகத் தைத்து மாலை போல சூட்டுவதுடன் பிரபையிலும் அடுக்கடுக்காக அமைப்பர். இதற்கு ‘வெற்றிலைப் படல்’ எனப்பெயர். இக்கோயிலில் மகாசிவராத்திரி பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். புரட்டாசி மாதம் இரண்டாவது சனி - ஞாயிற்றுக்கிழமைகளில் வருட பூஜை அத்தனைச் சிறப்பு. வரும் 2016-ல் கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது!" எனத் தெரிவிக்கிறார் திருச்சி, திருவானைக்கோயில் அருள்மிகு வீரபத்திரர் கோயிலின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான எம்.மாணிக்கவாசகம்.

Comments