மயிலோன் வருக

பூரண அலங்காரத்தில் பொலிவுடன் காட்சியளிக்கிறான் முருகப்பெருமான். வலது திருக்கரத்தில் தண்டத்தைப் பற்றியிருக்கிறான். இடது கரத்தை இடுப்பில் ஊன்றியவனாக நின்ற திருக்கோல தரிசனம். ஆம்; கௌபீனம் தரித்த ஆண்டித் திருக்கோலம்.
பார்க்கும்போதே, மனசு ஒரு கணம் சலனப்படுகிறது. எப்பேர்ப்பட்டவன் இவன்?!
‘பனித்தலை முடித்த விரிசடைக் கடவுளான முக்கண்ணனின் மைந்தன். பிரபஞ்சம் அனைத்துக்கும் ஆற்றல் கொடுக்கின்ற பராசக்தியின் பிள்ளையான இவன், இப்படி ஆண்டிக்கோலம் கொண்டிருக்கிறானே. தம் குழந்தை அழுக்காக இருந்தாலே தாங்க முடியாத பெற்றோரின் மனம், இந்த ஆண்டிக் கோலத்தைப் பார்த்ததும் எப்படித் தவித்திருக்கும்? என்ன பாடுபட்டிருக்கும்?’ என்று நினைத்த மாத்திரத்தில், கலக்கம் பீறிட்டது.
‘உரிய பருவம் வந்தும் ஆசைகளையும், பந்தங்களையும் துறக்க முடியாமல் பல கோடி மக்கள் தடுமாறிக்கொண்டிருக்கையில், பாலகனான இவனால் எப்படி பந்த பாசங்களைத் துறக்க முடிந்தது?’ என்ற கேள்வி எழுந்தது. ‘உடை கூட சுமையென்று துறந்த இந்த ஆண்டியைத் தேடித்தான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். அனைத்தையும் துறந்து வந்தவனுக்குத்தான், இத்தனை சொந்தங்கள் சேர்ந்துவிட்டன’ என்றெல்லாம் எண்ணங்கள் நீண்டன.
நெருப்பாக வெளிப்பட்டு, வானில் மிதந்து, காற்றில் பயணித்து, கங்கையால் தாங்கப்பட்டு, நிலத்திண்கண் சிறிய சரவணப் பொய்கையில் தாமரையில் உருக்கொண்ட குழந்தையான - பஞ்சபூதத் தத்துவமான, முருகன், திருமுகத்தில் புன்னகை பொலிய தரிசனம் தந்து கொண்டிருக்கிறான்.
‘உன்னுடைய சஞ்சலமான எண்ணங்களை கண்டறிந்து விட்டேன்’ என்பது போலவே தென்படுகிறது அந்தப் புன்னகை. உமைய வளையும், பரமனையும் குதூகலப்படுத்திய புன்னகை; வள்ளி நாயகியையும், தெய்வானை பிராட்டியையும் வசீகரித்த புன்னகை. ஔவையார், அருணகிரிநாதர், குமரகுருபாரர், பாம்பன் சுவாமிகள்... என்று மகான்கள் பலரையும் கரைத்த புன்னகை. இந்தப் புன்னகை, மருட்சியால் நடுங்கும் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது.
வேலினும் கூர்மையன அவனுடைய விழிகள், மனத்தின் அடியாழம் வரை ஊடுருவிச் சென்று, நம்மை வருத்துகின்ற கவலைகளைத் துளைக்கின்றன. அச்சத்தை வதைக்கின்றன. மனத் தடாகத்தில் சலன வெம்மையால் வறட்சி வராமல், அருளூற்றைத் தோற்றுவிக்கின்றன.
‘சரவணபவ’ என்கிற ஆறெழுத்து மந்திரத்தை சதா ஓதுவார் முன், வினையாவும் வெந்து நீறாகும் என்று அருளாளர்கள் பலரும் சொன்னதெல்லாம் செவிக்குள் எதிரொலிக்கின்றன. அதேசமயம், அருளாளர்கள் பலரும், முருகனைப் பாடும்போது, அவனுடைய வாகனமான மயிலைக் குறித்தும் பாடியிருக்கிறார்கள். மயிலின் சிறப்பைப் போற்றும் விதமாக, ‘மயில் விருத்தம்’ என்ற தனித் தொகுப்பே இருக்கிறது. ‘வருவாய் மயில் மீதினிலே’ என்று தான் பக்தர்களும் குமரனை அழைக்கிறார்கள்.
அருணகிரிநாதருக்கு எப்போதும் வள்ளி நாயகியோடு, மயில் வாகனத்தில் தான் காட்சி தந்திருக்கிறான் முருகப் பிரான். கந்தர் அனுபூதியில், அப்படித் தான் அவரும் பதிவு செய்கிறார்;
‘நீலச் சிகண்டியில் ஏறும்பிரான்
எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான்’

ஆக, வள்ளியுடன் வரும்போதும், மயில் மீதுதான் வருகிறான் முருகன். தேவராய சுவாமிகள் ‘சஷ்டி கவசம்’ பாடும்போது, முருகனுக்குரிய திருநாமமாக ‘மயிலோன்’ என்றே குறிப்பிடுகிறார். திருமாலுக்கு கருடன் வாகனமாக இருந்த போதும், ‘கருடோன்’ என்று பெயரில்லை. சிவபிரானுக்கு ‘எருதோன்’ என்றும் பெயரில்லை. மாறாக, முருகனுக்கு மட்டும் இந்தப் பெயர் ஏன்?
தன்னைப் பகைத்து அழிக்க முற்பட்ட அசுரனையும் ஆட்கொண்டு ஞானமளித்து மயில் வாகனமாக ஏற்றுக்கொண்ட காருண்ய மூர்த்தி முருகன். அவனுடைய கருணையின் அடையாளமாகவே தென்படுகிறது மயில் வாகனம். அதனா லேயே ‘மயிலோன்’ என்று அடையாளப்படுத்துகிறார் தேவராய ஸ்வாமிகள். இந்தப் புரிதலோடு, ஆடிக் கிருத்திகை நாளில் நாமும் ‘மயிலோன் வருக’ என்று மனமொன்றிக் கூப்பிடுவோம். நம் குரல் கேட்டும் அவன் வருவான்; நம் மனத்தைக் குளிர வைப்பான்.

 

Comments