ஹிமவத் கோபாலன்

இந்தியாவில் உள்ள மிகப் பிரபலமான வனவிலங்குப் பூங்காக்களில் ஒன்று கர்நாடகா மாநிலம், மைசூரு - ஊட்டி நெடுஞ்சாலையில் உள்ள பண்டிப்பூர் தேசிய புலிகள் சரணாலயம். இந்த அடர்ந்த காட்டுப் பகுதியின் நடுநாயகமாக விளங்குவது ‘கோபால்சாமி பெட்டா’ என்ற மலைச்சிகரம். சுமார் 4000 அடிகளுக்கு மேல் உயரம் கொண்டது இம்மலைச் சிகரம்.
இந்த கோபால்சாமி மலையின் மீது அமைந்துள்ள புராதனமான ஆலயத்தில் ஸ்ரீ ருக்மினி சத்யபாமா சமேதராக ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இப்பகுதியை 1941ல் பண்டிப்பூர் வனவிலங்குப் பூங்காவாக அரசு அறிவித்தபோது, இதற்கு ‘வேணுகோபாலா வன-விலங்குப் பூங்கா’ என்றே பெயரிடப்பட்டது. 1973ல் பண்டிப்பூர் ஒரு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
ஆண்டு முழுவதும் இந்த மலைக்குன்றின் மீது பனி படர்ந்த மேகங்கள் சூழ்ந்துள்ளதால், இந்த மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேணுகோபாலர் பக்தர்களால் ஸ்ரீ ஹிமவத் கோபாலஸ்வாமி (ஹிமம் என்றால் பனி) என்றே அழைக்கப்படுகிறார். இந்த மலைக்கும் ஸ்வாமியின் பெயரைக் கொண்டே ‘கோபால்சாமி பெட்டா’ (பெட்டா என்றால் கன்னட மொழியில் மலைக்குன்றைக் குறிக்கும்) என்ற பெயரே அமைந்துள்ளது. ஒரு காலத்தில் பண்டிப்பூர் வனப்பகுதி மைசூர் மன்னர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய காடாக இருந்தது.
ஸ்ரீ ஹிமவத் கோபால ஸ்வாமி ஆலயத்தை 1315 ஆம் ஆண்டு ஹொய்சாள வம்சத்தின் கடைசி மன்னனான வீர பல்லாலன் கட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மைசூரு சாம்ராஜ்ய மன்னர்களான வொடையார்கள் இந்த ஆலயத்தை நன்கு பராமரித்து வந்துள்ளனர்.
ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ள சிறிய ஏரியான ஹம்ச தீர்த்தக் கரையில்தான் அகத்திய மகா முனிவர் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார், முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ மஹா-விஷ்ணு இத்தலத்தில் ஸ்ரீ வேணுகோபாலராக கோயில் கொண்டுள்ளார் என்பது தலபுராணம். ஆலயத்தைச் சுற்றிலும் ஒரு காலத்தில் 77 புண்ய தீர்த்தங்கள் இருந்தனவாம். ஹம்ச தீர்த்தம் தவிர, மற்றவை ஏதும் தற்போது இல்லை என்று கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்த ஏரியில் ஏராளமான அன்னங்கள் இருந்ததாலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கக் கூடும். இந்தப் புனித தீர்த்தத்தில் ஒரு முறை காகம் ஒன்று நீராடி அன்னமாக மாறியது என்றும், அதனால் இந்தத் தீர்த்தத்துக்கு ஹம்ச தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர். எனவே, இப்பகுதியில் காகங்கள் காணப்படுவதில்லை என்றும் கூறுகின்றனர்.
ஆலய நுழைவாயிலின் மேற்புறம் கோபுரம் இல்லாவிட்டாலும், சிறிய ஒரு நிலை கோபுரம் போன்ற அமைப்பில் நடு நாயகமாக பத்மாவதி- ஸ்ரீநிவாச திருமணக் கோலம் சுதைச் சிற்பாக அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இதன் வலப்புறம் ஸ்ரீசுதர்ஸனர் மற்றும் இடப்புறம் ருக்மினி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலர் சுதை வடிவில் காட்சி தருகின்றனர். அடுத்து, துளசி மாடம், கொடிமரம், பலிபீடம் உள்ளன. முக மண்டபத்தை அடுத்து மஹா மண்டபம், கருவறை என்று ஆலயம் அமைந்துள்ளது. முன்மண்டபச் சுவற்றில் நடுநாயகமாக கிருஷ்ணாவதாரத்துடன் தசாவதார புடைப்புச் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.
மூன்று நிலைகள் கொண்ட விமானத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கருவறையில் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி நின்ற திருக்கோலத்தில் கரங்களில் புல்லாங்குழலை ஏந்தி வேணுகானம் இசைக்கும் பாவனையில் காட்சி தருகிறார். மூலமூர்த்தியுடன் நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்த பிரபாவளியும் வடிக்கப்பட்டுள்ளது. பிரபாவளியின் மேற்புறம் அடர்ந்த இலைகளுடன் கூடிய மரம் காட்டப்பட்டுள்ளது. பிரபாவளியின் கீழ்ப்புறம் ருக்மினி சத்யபாமா தேவியர், அடுத்து பசுக்கள், பசு மேய்ப்பவர்கள், சுற்றிலும் நண்பர்கள் என்ற பல நுண்ணிய புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறை நுழைவாயிலின் மேலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுந்து கொண்டேயிருக்கிறது. இதைப் புனித நீராக அர்ச்சகர் பக்தர்களின் மீது தெளிக்கிறார்.
பண்டிப்பூர் ஸ்ரீ ஹிமவத் கோபாலஸ்வாமி ஆலயத்தில் ஜன்மாஷ்டமி மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ரதோற்சவத்தில் பிற ஆலயங்களைப் போன்று வடக்கயிறு கொண்டு தேரை இழுக்காமல், இப்பகுதியில் மரத்தில் படரும் கொடிகளைக் கொண்டே தேரை இழுப்பது குறிப்பிடத் தக்கது. பண்டிப்பூர் வனவிலங்குச் சரணாலயத்தைப் பார்க்க வருகின்ற ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த ஆலயத்துக்கும் வந்து வழிபடுகின்றனர். இந்த மலைச் சிகரத்திலிருந்து சூர்யோதயம் மற்றும் அஸ்தமனத்தை கண்டுகளிப்பது ஓர் இனிய அனுபவமாகும்.
செல்லும்வழி:
பண்டிப்பூரிலிருந்து 21 கி.மீ., ஊட்டியிலிருந்து 69 கி.மீ., மைசூருவிலிருந்து 75 கி.மீ. பேருந்து வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் மாலை 4 வரை.

Comments