வைகையின் மடியில்... தமிழர் நாகரிகம் !

லக நாகரிகங்கள் அனைத்தின் முன்னோடி நாகரிகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் லெமூரியா கண்டத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம்தான். இந்தப் பேருண்மையை பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் உட்பட பல அறிஞர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் தகுந்த ஆதாரங்களுடன் சொல்லி இருக்கின்றனர். அது மட்டுமின்றி தென் தமிழகத்தில் நடைபெற்ற பல அகழ்வாய்வுகளும் அதை உறுதிப்படுத்துகின்றன.
இதோ இப்போதுகூட மதுரைக்கு அருகில் பள்ளிச்சந்தைத் திடல் என்னும் இடத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் மண்ணுக்குள் புதையுண்டு போன சுமார் 2500 வருடங்களுக்கு முந்தைய ஒரு குடியிருப்புப் பகுதி வரிசை வரிசையான வீடுகளுடன் கண்டறியப்பட்டு உள்ளது. அதேபோல் அங்கே கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பலவும் தமிழர்தம் நாகரிக வளர்ச்சியையும் அவர்தம் பொருளாதார வளத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளன.
முன்னோடி நாகரிகமான இந்த நாகரிகம் தோன்றிய இடம் எது தெரியுமா?
தொன்மைச் சிறப்பும் தொல்புகழும் கொண்ட வைகை நதிக் கரையில்தான் !
'வையை என்னும் பொய்யாக் குலக்கொடி, புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி...’ என்றும், 'ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை...’ என்றும் இலக்கியங்கள் போற்றிப் புகழும் வைகை நதியின் தொன்மைச் சிறப்பினை புராண இதிகாசங்களும்கூட சிறப்பித்துச் சொல்கின்றன. இந்த வைகை நதிக்கரையில் அமைந்திருக்கும் மதுரை மாநகரின் சிறப்புக்களை வால்மீகியும் வியாசரும் பலவாறாகப்  போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள்.
புகழ் மிகக் கொண்ட இந்த மதுரையின் மக்கள் அதிகாலையில் வேத மந்திரங்களின் ஒலியைக் கேட்டுத்தான் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்கிறார்களாம். இது பற்றிச் சொல்ல வந்த பரிபாடல் இப்படி விவரிக்கிறது...
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எழுப்ப
ஏம ஆன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியன் எழாது எம் பேர் ஊர் துயிலே.
சேர தேசத்து மக்களும் சோழ தேசத்து மக்களும் அதிகாலையில் சேவல் குரல் கேட்டுத்தான் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்கிறார்களாம். ஆனால், மதுரையில் வசிக்கும் மக்களோ அதிகாலையில் வேதியர் களின் வேத முழக்கம் கேட்டு உறக்கம் நீங்கி எழுகிறார்களாம். அதாவது, இறைவனைப் பற்றிய சிந்தனையுடன்தான் மதுரை மாநகரமே கண்விழிக்கிறது.
உலக நாகரிகங்கள் அனைத்துக்கும் முன்னோடி நாகரிகமாகத் திகழ்வது தென்னிந்திய நாகரிகம்தான். அன்றைய தென்னிந்தியா என்பது கடல்கோளால் கவரப்பட்ட லெமூரியா கண்டம்தான். அங்கேதான் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்த பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். இந்தப் பாண்டியர் மரபில் மிக்க புகழுடன் விளங்கியவன் நெடியோன் என்பவன். இந்த மன்னனின் ஆட்சிக் காலத்தில்தான் தொல்காப்பியம் அரங்கேற்றம் கண்டது. இந்த நெடியோன்தான், 'நிலந்தரு திருவிற்பாண்டியன்’ என்றும், 'சமயகீர்த்தி’ என்றும் போற்றப்பெற்றவன். கடல்கடந்து சென்று சாவகத்தை வென்று, கடல் நீர் வந்து அலம்பும் ஒரு பாறையில் தன் அடிகளைப் பதித்து, முந்நீர் விழா கண்ட காரணத்தால் 'வடிவலம்ப நின்ற பாண்டியன்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றான்.
கடல்கோளால் லெமூரியா கண்டம் நீரில் மூழ்கிய பின்னர், கபாடபுரத்தைத் தங்களின் தலைநகராகக் கொண்டு பாண்டியப் பேரரசு நிர்மாணிக்கப்பட்டது. இங்குதான் இடைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இங்கே ஆட்சி செய்த பாண்டியர்களில் ஐந்து பேர் பாடும் புலமையும் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த இடைச் சங்கக் காலத்தில் புகழ்பெற்ற மன்னனாகத் திகழ்ந்தவன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவன். ஆனால், கடலரசனுக்குப் பசி தீரவில்லைபோலும்! கபாட புரத்தையும் இடைச் சங்கக் காலத்தில் தோன்றிய பல இலக்கியங்களையும் கடல் தன்னுள் கவர்ந்துகொண்டது. தமிழன்னை செய்த தவப்பயனாய் தொல்காப்பியம் மட்டும் தப்பிப் பிழைத்துவிட்டது. அந்தக் கால கட்டத்தில் அரசுப் பொறுப்பில் இருந்த முடத்திருமாறன், கடல்கோளுக்குத் தப்பிப் பிழைத்த குடிமக்களையும் சில புலவர்களையும் அழைத்துக் கொண்டு, மணலூர் என்னும் ஒரு சிறு நகரத்தை நிர்மாணித்து, ஆட்சி செய்து வந்தான். அந்தச் சிறு நகரத்தையும் அவ்வப்போது கடல் அச்சுறுத்திக்கொண்டிருக்கவே, வைகை நதிக்கரையில் அழகிய பெரிய நகரை நிர்மாணித்தான். அதுதான், மகத்தான பெருமைகள் கொண்ட மதுரை மாநகரம்.
இங்குதான் மூன்றாம் தமிழ்ச்சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் தமிழ்ச்சங்கக் காலத்தில்தான் நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு போன்ற இலக்கியங்கள் தோன்றி, தமிழன்னையின் திருமேனியை அலங்கரித் தன. அனைத்துக்கும் மேலாக, உலகப் பொது மறையெனப் போற்றப்படும் திருக்குறள் இந்தக் காலத்தில்தான் அரங்கேற்றம் கண்டது. அப்போது பாண்டிய மன்னனாக இருந்த உக்கிரப்பெருவழுதி என்னும் திருவழுதி, உலகப் பொதுமறையான திருக்குறளை அரங்கேற்றம் செய்த திருத்தலம், நாம் ஏற்கெனவே தாமிரபரணி மகாத்மியத்தில் தரிசித்த பெருங்குளம் திருவழுதீஸ்வரர் கோயில் என்பது செவிவழிச் செய்தியாக நமக்குத் தெரிய வருகிறது. இந்தக் கோயில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அதன் அமைப்பினைக் கொண்டு நம்மால் யூகித்து அறியமுடிகிறது.
இந்த இடைச் சங்க காலத்தைச் சேர்ந்த மன்னன் மாறன் என்பவன், தன்னுடைய ஆட்சியை உலகத்தின் பல பகுதிகளிலும் நிறுவினான் என்பது சரித்திர உண்மையாகும். அதற்குச் சாட்சியாக, வியட்நாம் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு சான்று கூறுகிறது. அந்தக் கல்வெட்டில், அவன் தன்னுடைய தங்கம், வெள்ளி, மற்றுமுள்ள சொத்துக்கள் அனைத்தையும் அந்த நாட்டு மக்களுக்கே உரிமையாக்குவதாகப் பொறித்து வைத்திருக்கிறான். தான் வெற்றி கொண்ட நாட்டின் மக்களிடம்தான் அவனுக்கு எத்தனை கருணை?! இந்த மன்னனின் காலம் கி.பி. 20ல் இருந்து 30க்குள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இப்படியாக, உலகமெங்கும் அன்பும் கருணையும் பின்னிப் பிணைந்த நம்முடைய நாகரிகத்தை முன்னெடுத்துச் சென் றவர்கள் பாண்டியர்கள்தான் என்பது வரலாற்று ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், மதுரைக்கு அருகில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியும் இதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.
தொன்மை வாய்ந்த தமிழர் நாகரிகம் வைகை அன்னையின் மடியில் செழித்துச் சிறந்திருந்தது என்பதும் நமக்கெல்லாம் பெருமை தரும் செய்திகள்!
ஆன்மிகம் தழைத்துச் செழித்த இந்த வைகை மண்ணின் மடியில் எத்தனை எத்தனை ஆலயங்கள் இறைவனின் அருளொளி பரப்பித் திகழ்கின்றன?!
அத்தனை தலங்களிலும் இறைவன் நிகழ்த்திய அருளாடல்கள்தான் எத்தனை எத்தனை?! பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதும், கல் யானையைக் கரும்பு தின்ன வைத்ததும், ரசவாதம் புரிந்ததும் என இந்த வைகை மண்ணில் ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல்கள்தான் திருவிளையாடற் புராணமாக நமக்குக் கிடைத்திருக்கிறது.
சோமசுந்தரருக்கும் மீனாட்சி அம்மைக் கும் திருமணம் நடைபெற்ற வேளையில், திருமணத்துக்குச் சமைக்கப்பட்ட உணவை எல்லாம் விழுங்கிய குண்டோதரன் தாகத்தால் தவிக்க, சிவபெருமான் 'கை வை’ என்று சொல்லித் தன் தலையில் இருந்த கங்கையின் சிறு துளியை பூமியில் விட்டார் என்றும், அதுவே வைகை நதியானது என்றும் திருவிளையாடற்புராணம் சொல்கின்றது.
பிரம்மாண்ட புராணத்தில், மகாவிஷ்ணு திரிவிக்கிரமனாக விஸ்வரூபம் எடுத்தபோது, அவருடைய திருவடிகள் சத்தியலோகம் வரை நீண்டதாகவும், அந்தத் திருவடிகளை தரிசித்த பிரம்மன் தன் கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தபோது, அந்த நீர்த்துளிகள் வையகத்தில் விழுந்து அதுவே வையை என்னும் வைகை நதியானது என்று போற்றுகிறது. காவிரி எப்படி காவிரி என்றும், கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிந்து ரங்கத்தை அரவணைத்துச் செல்கிறதோ அப்படி அந்த அரங்கனின் சகோதரியான மீனாட்சி அருளாட்சி புரியும் இந்த மாமதுரை நகரத்தை, வைகை நதி இரண்டாகப் பிரிந்து வைகை, கிருதமால் என்ற பெயர்களுடன் அரவணைத்துச் செல்கிறது.
இந்த வைகை நதியின் கரையில்தான் புறச் சமயத்தின் பிடியில் சிக்கித் தவித்த பாண்டிய நாட்டில் மீண்டும் சைவ சமயம் தழைக்கச் செய்யும்விதமாக திருஞானசம்பந்தருக்கும் புறச் சமயத்தவருக்கும் அனல் வாதம் மற்றும் புனல் வாதம் நிகழ்ந்தது. அனல் வாதத்தில் புறச் சமயத்தவரின் ஏடுகள் அக்கினிக்கு இரையாக, சம்பந்தப் பெருமானின் திருநள்ளாற்றுப் பதிகம் பசுமை மாறாமல் இருந்தது. தொடர்ந்த புனல் வாதத்தில், புறச் சமயத்தவரின் ஏடுகள் வைகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட, சம்பந்தப் பெருமானின் 'வாழ்க அந்தணர்’ என்ற பதிகமோ நீரினை எதிர்த்துச் சென்றது. அந்தப் பதிக ஏடு கரை ஒதுங்கிய இடமே திருவேடகம் ஆகும். இப்படி, சைவ சமயம் மீண்டும் தழைத்துச் செழித்ததும் இந்த வைகைக் கரையில்தான்.
ஆதிகாலத்தில் இருந்தே தொன்மைச் சிறப்புடன் திகழ்ந்த இந்த வைகை நதியின் பயணம் எந்த இலக்கை நோக்கித் தொடங்கியது? இதோ, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இப்படிப் பாடுகிறார்...
அல்லும் பகலும் அலைந்து வந்தேன்  எங்கள்
   ஆழி இறைவனைக் காண வந்தேன்
நில்லும் எனக்கினி நேரமில்லை  இன்னும்
   நீண்ட வழி போக வேண்டுமம்மா!
மனித குலத்தின் வளமான வாழ்வுக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட வைகை நதி, தன்னைத் தோற்றுவித்த இறைவனையே தரிசிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தன் பயணத்தைத் தொடங்கியதாம். ஆனால், வைகை நதியின் அந்த லட்சியப் பயணம் நல்லபடி தொடர விட்டோமா நாம்? கிருதமால் நதியைத்தான் அதன் புனிதத்துவத்துடன் தவழவிட்டோமா நாம்? இல்லையே!
அகழ்வாராய்ச்சிகளின் மூலம் நம்முடைய பழம்பெருமையை நாம் உணர்ந்து கொண்டால் மட்டும் போதுமா?
அந்தப் பழம்பெருமைகளுக்கு அடிப்படையாக இருந்த வைகை நதியையும், அதன் கிளையான கிருதமால் நதியையும் புனிதம் கெடாமல் பாதுகாப்பதுதானே நம்முடைய கடமை!
 
 
 

Comments