குருவே சரணம்!

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஈரோட்டில் வசித்து வந்த ராமாச்சார் என்பவர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவருக்கு, தான் பிறந்த ஊரில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு பிருந்தாவனத்துடன் கூடிய ஓர் ஆலயம் அமைக்கவேண்டும் என்று தணியாத விருப்பம். பக்தர்களின் நல்ல ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் கற்பகவிருட்சம் அல்லவா ஸ்ரீ ராகவேந்திரர்! தம்முடைய பக்தரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவும், அதன் பயனாக அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்புரியவும் திருவுள்ளம் கொண்டுவிட்டார்.
ராகவேந்திரரின் அருளுடன் ராமாச்சார், மந்த்ராலயத் துக்குச் சென்று ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்தில் இருந்து மிருத்திகையை (மண்) பெற்று, அதைத் தலையில் சுமந்தபடியே ஈரோட்டை அடைந்தார். பின்னர், சாஸ்திர முறைப்படி ஸ்ரீ ராகவேந்திரருக்கு பிருந்தாவனத்துடன் கூடிய கோயில் கட்டும் திருப்பணியைத் தொடங்கினார். அவருடைய முயற்சிக்கு, ஈரோடு மகாஜன பள்ளியில் சம்ஸ்கிருத ஆசிரியராக இருந்த கிருஷ்ணாச்சார் என்பவர் நன்கொடைகள் வசூலித்துத் தந்து உதவினார்.
ஸ்ரீ ராகவேந்திரருக்குக் கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து, ஸ்ரீ ராகவேந்திரரின் சாந்நித்தியம் அங்கே பரிபூரணமாக நிலைத்திருக்கும்படி செய்த பின்னர், அந்தக் கோயிலுக்கு எதிரில் அஞ்சலிஹஸ்தராய் அருள்புரியும் ஆஞ்சநேயரின் கோயில், ராமர், சீதைக்குத் தனிச் சந்நிதிகள், பரிமள மண்டபம் போன்றவையும் ஸ்ரீ ராகவேந்திரரின் அருளால் கட்டப்பட்டன. பரிமள மண்டபத்தின் மேலாக, மகாலக்ஷ்மியின் திருவுருவத்துடன், 7 கலசங்களுடன் கூடிய கோபுரம் அமைந்திருக்கிறது.
இந்த ஆலயத்தின் அருகில் ஓடும் காவிரியில் நீராடி, மனதார ராகவேந்திரரை வணங்கி, பிருந்தாவனத்தின் அருகில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தால், உயர்ந்த கல்வியும் நல்ல உத்தியோகமும் கிடைப்பதுடன், திருமணத் தடையும் விலகி, நல்ல வாழ்க்கை அமையும்; பலதரப்பட்ட குடும்பப் பிரச்னைகளும் குழப்பமின்றித் தீரும் என பக்தர்கள் கூறுகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தியானம் செய்வதற்காகவே, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் திருவுருவத்துடன் கூடிய தியான மண்டபம் ஒன்றும் இங்கே உள்ளது.
இந்தக் கோயிலில், ஆவணி மாதம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை வைபவம் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.  மேலும், ஸ்ரீ மத்வாச்சார்யர், ஸ்ரீ ஜெயதீர்த்தர், ஸ்ரீ வியாசராஜர் ஆகியோரின் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. இவை தவிர ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ அனுமத் ஜயந்தி போன்ற வைபவங்களும் நடைபெறுகின்றன.
ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த நாள் வியாழக்கிழமை என்பதால், ஒவ்வொரு வியாழக் கிழமை அன்றும் இந்த ஆலயத்தில் விசேஷ பூஜைகளும், அன்று மாலை கோயில் பிராகாரத்தில் ராகவேந்திரரின் ரதோற்சவமும் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமைகளில் மிக அதிக அளவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட்டு அருள்பெற்றுச் செல்கின்றனர்.
காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும் இந்தக் கோயில், வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணிக்கே நடை திறக்கப் பட்டுவிடும்.
இந்த ஆலயத்துக்கு வந்து காவிரி யில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. காவிரிக்கரையில் அமைந்திருக்கும் துங்காநதி தீரத்து மகானின் திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டு, ஸ்ரீ ராகவேந்திரரின் அருளுடன் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருளையும் சேர்த்துப் பெற்று, சிறப்புடன் வாழலாம்.
மந்த்ராலயம் சென்றால் கிடைக்கும் புண்ணியம் இந்தக் கோயிலுக்கு வந்தாலும் கிடைக்கும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை. எந்த ஒரு பேதமும் இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் வந்து வழிபட்டுச் செல்லும் புண்ணியத் தலமாகத் திகழும் இந்த ராகவேந்திரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு, நாமும் அனைத்து நலன்களையும் பெறலாமே!
            

எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?
ஈரோடுபள்ளிப்பாளையம் சாலையில் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், காவல்துறையின் சோதனைச் சாவடிக்கு அருகில், காவிரிக்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
 

Comments