ஒரே கருவறையில் இரு அம்மன்கள்

ஊட்டி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது சந்தைக் கடை மாரியம்மன் கோயில். இங்கு மகா மாரியம்மன், மகா காளியம்மன் என இரு அம்மன்கள் ஒரே கருவறையில் வீற்றிருக்கின்றனர். இக்கோயிலிலுள்ள நவக்கிரக நாயகர்கள் தம்பதி சமேதர்களாக வீற்றிருப்பது சிறப்பு. அம்மை நோய் கண்டவர்கள், கண் பார்வை இழந்தவர்கள் இங்குள்ள மாரியம்மனிடம் வேண்டிக் கொள்ள, பூரண குணம் கிடைக்கிறது. இவைதவிர, திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்கு கோழிக்குஞ்சு மற்றும் கருப்புப் புடவை காணிக்கையாக செலுத்தப்படுகிறது. மேலும், சிறு அளவில் தேர் செய்தும் தேர்த்திருவிழா அன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
கிரக தோஷம் நீங்க...
குன்னூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ளது சிவசுப்ரமண்ய சுவாமி கோயில். குழந்தைகள் கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் குழந்தையை, படி, உலக்கை, நெல், அரிசியுடன் இக்கோயிலுக்குத் தத்துக் கொடுத்து விடுகின்றனர். சுவாமிக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், ஒரு குறிப்பிட்ட தொகையை கோயிலுக்குக் காணிக்கையாகத் தந்து குழந்தையை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இப்படிச் செய்வதால் தோஷங்கள் விலகி, குழந்தை நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வளரும் என்பது நம்பிக்கை. இது மட்டுமின்றி, இக்கோயிலிலுள்ள விஷ்ணு துர்கை சன்னிதியின் முன் எட்டு அடி நீளமும், எட்டு அடி அகலமும், பத்து அடி ஆழமும் கொண்ட பிரம்மாண்ட ஹோம குண்டம் அமைக்கப்பட்டு, சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது.வியாபாரிகள் இச்சன்னிதியில் புதுக் கணக்குத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால், வியாபாரம் செழிப்பதோடு அதிக லாபமும் கிடைக்கும் என்று நம்புகின்றனர்!

பாணலிங்கத் திருத்தலம்
ஊட்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவில், திருக்காந்தலில் உள்ளது காசி விஸ்வநாதர் கோயில். இயற்கையிலேயே பூணூல் அணிந்தது போன்ற ரேகை அமைப்பு படர்ந்திருப்பது பாணலிங்கம். ஆயிரம் கல் சிவ லிங்கத்துக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமம். 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு ஒரு பாணலிங்கம் சமம் என்பர்.
பாண லிங்கம் வடித்தெடுக்கப்படுவதில்லை. இந்த பாண லிங்கங்கள் நர்மதை நதியிலிருந்துதான் பெருமளவுக்குக் கிடைக்கின்றன. மிக அபூர்வமான இத்தகைய சிறப்பு வாய்ந்த பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்கோயில் காசி விஸ்வநாதர் ஆலயம்.
 

Comments