குழந்தைகள் நன்றாகப் படிக்க...

பள்ளிகள் திறந்துவிட்டன. ஆசிரியர்கள் பாடங்களை நடத்த தொடங்கி இருப்பார்கள். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்கவேண்டும் என்று நினைப்பது இயற்கைதான்.
சில குழந்தைகள் ஆர்வக்குறைவினால் படிப்பில் ஈடுபாடு இல்லாமலும், சிலர் மணிக்கணக்காக படித்தாலும் பாடங்கள் புரியாமலும் சிரமப் படுவார்கள். சிலர் விளையாட்டுப் புத்தியால் படிப்பில் கவனமில்லாமல் இருப்பார்கள். இன்னும் சிலர், வீட்டில் நன்றாகப் படிப்பார்கள். ஆனால், தேர்வு அறைக்குப் போனதும் பதட்டத்தில் படித்ததை மறந்துவிடுவார்கள். இப்படி எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதை நீக்கி, படிப்பில் முன்னேற்றத்தை அருள, லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உதவி செய்யும். குதிரை முகத்தோடு இருக்கும் இப்பெருமானை வழிபட்டே, சரஸ்வதியே அனைத்து வித்தைகளையும் கற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
காலை, மாலை நேரத்தில் வீட்டில் பாடங்களை படிக்கத் தொடங்கும் முன்,
ஞானானந்தம் மயம் தேவம்
நிர்மல ஸ்படிகா க்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே!"

என்ற ஸ்லோகத்தை சொல்லிய பிறகு படிக்கத் தொடங்கச் சொல்லுங்கள்.
அதோடு கூட, புதன்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் ஹயக்ரீவர் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள். பிள்ளைகளுக்கு நிச்சயம் படிப்பில் ஆர்வம் ஏற்படத் தொடங்கும்.

ஆஸ்துமா நோய் குணமாக வழிபட வேண்டிய கோயில்கள்...

திருநாகேஸ்வரத்திலிருந்து ½ கி.மீ. தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் கோயில். பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.
ஒப்பிலியப்பன் என்னும் பெயரில் தனது தேவியான பூமா தேவியுடன் மகாவிஷ்ணு இங்கு காட்சியளிக்கிறார்.
இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். மகாவிஷ்ணுவை சனிக்கிழமைதோறும் தீபம் ஏற்றி வழிபட்டு, கோயிலில் வழங்கப்படும் துளசி தீர்த்தத்தை அருந்திவர, படிப்படியாக ஆஸ்துமா நோய் மட்டுப்படும் என்று நம்பப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்னும் ஊர் உள்ளது. பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் உள்ளது சிங்கீஸ்வரர் கோயில். கோயிலின் வடகிழக்கு மூலையில் மிக மிகப் பழமையான ஸ்ரீ வீரபாலீஸ்வரர் சன்னிதி உள்ளது. இவரை ஒன்பது வாரம் நெய் விளக்கேற்றி வணங்கி வர, ஆஸ்துமா நோயின் தாக்கம் குறையுமாம்.
சென்னை பீச்-செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கச்சூர் சிவஸ்தலம். இந்த ஆலயத்தின் மூலவர் கச்சபேஸ்வரர். இவ்வாலயம் தியாகராஜசுவாமி திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில், தியாகராஜர் சன்னிதி உள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை. கோயிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால், நுரையீரல் தொடர்பான நோய்கள் விலகும் என்பது ஐதிகம்.

Comments