கரும்புப் பந்தல் வழிபாடு!

காசிக்கு வீசம் அதிகம்’ என்று புகழ் பெற்ற ஸ்ரீவாஞ்சியத்துக்கு வடக்கில் அமைந்துள்ள கிராமம் தாடகாந்தபுரம் என்னும் தட்டாத்தி மூலை. இந்த கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கிவரும் மகா சாஸ்தாவுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடு, கரும்பு பந்தல்!
ஒரு சமயம் காரைக்கால் பகுதியிலிருந்து இவ்வூர் வழியாக, நீடாமங்கலம் சர்க்கரை ஆலையில் சேர்ப்பதற்காக, வண்டி நிறைய கரும்புகளை ஏற்றிக் கொண்டு சென்றான் செங்கோடன் எனும் வணிகன்.
இரவாகிவிட்டது. தூக்கத்தைக் கலைக்க, அந்த ஊரின் வரதராச புஷ்கரணியில் இறங்கி முகம் கைகால்களை அலம்பிக்கொண்டு, வண்டியில் ஏற முயன்றான். அப்போது, வண்டிக்கு எதிரே, சுமார் 7 வயதுள்ள பாலகன் நின்று கொண்டிருந்தான். ஐயா கரும்பு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு கரும்பைக் கொடுத்தால் நான் போய்விடுவேன்" என்றான். ராத்திரி பத்துமணிக்கு வண்டியை மறிச்சு வம்பு செயறியே. இதெல்லாம் கரும்பு இல்லே. வெறும் நாணல் குச்சிகள்" என்றான் வணிகன். அதற்கு, அட... பலனில்லாத நாணல் குச்சியை ஏற்றிட்டு போறியே, நீ என்ன மூடனா?" என்று கேட்டான் சிறுவன்.
அதைக்கேட்ட செங்கோடன், தன் கையிலிருந்த சாட்டையால் சிறுவனை ஓங்கி அடித்தபோது, சாட்டை நுனியை லாவகமாகப் பிடித்த சிறுவன், எனக்கு வலிக்கவா அடிக்கிறே. வண்டில கரும்புகளை வெச்சுக்கிட்டு நாணல்னு பொய்யா சொல்றே! உனக்கு நாளைக்கு வலிக்கும் பார்" என்று பெரிதாகச் சிரித்துவிட்டுச் சென்றான்.
அதைக் கண்டுகொள்ளாத செங்கோடன் பயணத்தைத் தொடர்ந்தான். கரும்பு ஆலையை அடைந்தான். ஆலைச் சிப்பந்தியிடம் கரும்புகளை எடுத்துக் கொள்ளும்படி கூற, ஒரு கரும்பை உருவி சோதித்துப் பார்த்த சிப்பந்தி கடும் கோபம் அடைந்தான். நாணல் குச்சிகளை ஏத்திவந்து கரும்புன்னு சொல்றே. உனக்கென்ன மதிகெட்டுப் போச்சா? முதல்லே பொறப்படு. இல்லே பஞ்சாயத்து வெச்சிருவேன்" என்று சீறினான். அதிர்ந்துபோனான் வணிகன்.
‘கரும்பு எப்படி நாணல் குச்சியாச்சு? பட்டபாடெல்லாம் பயனற்றுப் போச்சே’ என்று நொந்துபோனான் அவன்.
அன்றிரவு கனவு. கனவில் ஒரு சிறுவன் வந்து, கரும்பெல்லாம் வித்துக் காசாக்கிட்டியா?" என்றான் ஏளனமாக. பயந்து போன வணிகன், நீங்கள் யார்? என்னைச் சோதித்தது ஏன்?" என்று கேட்டான். தட்டாத்தி மூலையின் எல்லை தெய்வம் மகாசாஸ்தா நான்தான். உன்னிடம் கரும்பு ஒன்றைக் கேட்டு சோதித்தது நானே. பசி என்று வந்தவனுக்குத் தான மிடாதவன் மகா பாபி. வண்டி முழுவதும் கரும்பை வைத்துக் கொண்டு மனத்தால் உலோபியானா. அதனால்தான் அவற்றை நாணல் குச்சிகளாகும்படி செய்தேன்" என்றார் மகா சாஸ்தா.
தன் பிழைக்கு பிராயச்சித்தம் என்ன என்று கதறினான் வணிகன். எனக்கு ஒரு கரும்பு இல்லை என்று தர மறுத்தாயல்லவா? ஆயிரம் கரும்புகளை என்சன்னிதானத்தில் நிறைத்துப் பந்தலிட்டு வழிபடு. அவ்வாறு வழிபடுவோரின் வாழ்வும் கரும்புபோல் இனிக்கும்" என்று கூறி மறைந்தார் சாஸ்தா.
அதன்படியே தாடகாந்தபுரம் சென்று, ஆயிரம் கரும்புகளை பந்தலிட்டு, அபிஷேக ஆராதனைகள் செய்து, இறையருள் பெற்றான் அவன். அதுமுதல், அனைவரும், ‘ஸ்ரீகரும்பாயிரம் கொண்டவர்" என்று இவரை வழிபடுகின்றனர்.
கரும்புச் சாறு அபிஷேகம் சுவாமிக்கு மிகவும் சிரேஷ்டமானது. ஸ்ரீபால கணபதி, பாரம்பரிய சாஸ்தா, சுதைவடிவில் மதுரை வீரன், திருச்சுற்றில் சப்த மாதர்கள், ஸ்ரீமுனீஸ்வரர், முன்னடியான் என பல சன்னிதிகள். மூலஸ்தானத்தில் பூரணை புஷ்கலையுடன் ஸ்ரீகரும்பாயிர ஐயனார் காட்சியளிக்கிறார். தல விருட்சம் மகா வில்வம்; தலபுஷ்க ரணியாக பால சாஸ்தா தீர்த்தம்.
இங்குள்ள கிராமவாசிகள், தங்களுக்குத் திடீரென ஒரு துன்பமோ அடியோ விழுந்தால் தாயை அழைப்பதுபோல, ‘நடுக் காட்டையா என்னைக் காப்பாது’ என்று இந்த சுவாமியைத்தான் அழைப்பார்கள்.
உள்ளூரிலும், சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் ஏதேனும் விழாவுக்கு பத்திரிகை கொடுக்க வருவோரிடம் மக்கள் கேட்பது, இந்த ஊர் ஐயனுக்கு பத்திரிகை வெச்சாச்சா?" என்பதுதான். ஸ்ரீகரும்பாயிர சுவாமிக்கு வெள்ளி, ஞாயிறு, புதன் கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு. குழந்தைவரம் கொடுப்பதில் நிகரற்றவர் என்பதால், ‘ஆசைக்கொரு பிள்ளை கொடு - உன் ஆலயத்தில் ஓசைக் கொரு மணியை கட்டுகிறேன்’ என்று வேண்டிக்கொண்டு செல்வார்கள்.
திருட்டுப்போன பொருட்கள் கிடைக்க வேண்டி, சீட்டு எழுதிக்கட்டுவது; நிலத்தகராறுகள், கோர்ட் வழக்குகளில் வெற்றி அடைய பிரச்னையை எழுதி, இங்குள்ள ஐயன் குதிரை கழுத்தில் கட்டிவிட்டு, கரும்பாயிர ஐயனாருக்குத் தயிரன்னம் படைத்து அர்ச்சனை செய்து வந்தால், பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
சித்திரை மாதத்தில் ஸ்ரீசாஸ்தாவுக்கு 10 நாட்கள் கோலாகல விழா நடைபெறுகிறது. அப்போது, நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், விசேஷமாக நடைபெறும்.
இருப்பிடம்: திருவாரூரில் இருந்து, நன்னிலம் செல்லும் வழியில் ஆனைக் குப்பம் பஸ் நிறுத்தம். அங்கிருந்து மேற்கே 1 கி.மீ. நன்னிலத்திலிருந்து ஆட்டோ வசதி உண்டு.

Comments