ஸ்ரீரமண மகரிஷி 'நான்'இல்லை!

ம்பீரம் சேஷய்யர் என்பவர், தெலுங்கு அந்தணர். ஹைதராபாத்துக்கு அருகில் உள்ள முலுக்கி நாடு என்ற இடத்தைச் சேர்ந்தவர். அவருடைய முன்னோர்களான அக்கண்ணா, மாடண்ணா ஆகியோர், சுல்தானிடம் மந்திரிகளாக இருந்தார்கள். அவர்களின் சேவையைப் பாராட்டி, ஹைதராபாத் சுல்தான் அவர்களுக்குக் 'கம்பீரம்’ என்ற பட்டத்தைக் கொடுத்தார்.
அந்தப் பரம்பரையில் வந்தவர் சேஷய்யர். அவர், ராம பக்தர். இடையறாது ராம நாமம் சொல்பவர். விவேகானந்தரின் சொற்பொழிவுகளாலும் நூல்களாலும் கவரப் பட்டவர். விவேகானந்தர் சொன்னபடி ஹடயோகம் பயின்று, அதில் ஈடுபட்டுவந்தார். ஸ்ரீரமணரால் கவரப்பட்டு, அவரிடம் வந்து தனது ஆன்ம வேட்கையையும், தான் செய்து கொண்டிருந்த பிராணாயாமம் போன்ற விஷயங்களையும் அவரிடம் பரிமாறினார்.
ஸ்ரீரமண மகரிஷி என்று பிற்பாடு அழைக்கப்படும் பாலசுவாமிக்கு, கம்பீரம் சேஷய் யருடைய ஆர்வம் புரிந்தது. சேஷய்யர் தமிழரல்ல; அதனால், அவருக்குக் கவிதை நடையில் சொல்லி வைத்தது புரியாது என்பதால், அவருக்குத் தெளிவாகப் புரிவதற்காக உரை நடையில் சில விளக்கங்கள் சொன்னார். அந்த விளக்கங்கள், கம்பீரம் சேஷய்யரால் எழுதப்பட்டு, ஒன்றாகச் சேகரிக்கப்பட்டு, பிறகு புத்தகமாக வெளிவந்தது.
இதனால், பாலசுவாமியின் அற்புதமான பொருள்செறிந்த உரையாடல்கள், உலகத் தோருக்கு எளிதாக, முழுமையாகக் கிடைத்தன. அறிவும் திறனும் கொண்ட ஞானியருக்கு
அருகே உண்மையும் அன்பும் கொண்ட பக்தர்கள் ஒன்று சேர்ந்துவிடுவர். அவர்களால் ஞானியின் புகழ் நன்கு பிரகாசிக்கும். இந்த முயற்சிகள் எந்தத் திட்டமிடலும் இல்லாமல், உலகத்தின் நன்மைக்காகத் தானாக ஏற்படும். பாலசுவாமியின் இந்த உரையாடல்கள், பிற்பாடு வந்த ஸ்ரீரமண பக்தர் களுக்குப் பேருதவியாக இருந்தன.
ஹடயோகத்தில் பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு இடமாகத் தாண்டி முன்னேற வேண்டிய நியதி உண்டு. ஹடயோகத்தின் உதவியால், தான் யார் என்பதைக் கண்டு கொள்ளலாம். கடவுள் என்ற விஷயத்தை மிக நெருக்கமாக நின்று ஆராய்ந்து, முக்தி பெறலாம் என்று சொல்லியிருக்கிறது. ஹடயோகம், பரத கண்டத்தின் பொக்கிஷம். சனாதன தர்மம் தோன்றிய காலத்திலிருந்தே இந்த ஹடயோகம் பேசப்பட்டு வருகிறது. ஹடயோகத்தில் எட்டு பிரிவுகள் இருக்கின்றன. இதை, யோக அஷ்டாங்கம் என்று சொல்வதுண்டு. அவை என்னென்ன?
முதலில் இயமம், நியமம் என்ற இரண்டு விஷயங்கள். நல்ல நடத்தை, நல்ல குணங்கள்...
இவைதான் இயமம், நியமம். அதிர்ந்து பேசாதது, கோபமான வார்த்தைகளை இறைக்காதது, பொய் சொல்லாதது, புறம் கூறாதது போன்றவற்றோடு உணவுக்கட்டுப்பாடும், குறைவான உறக்கமும், பிரம்மச்சரியமும், கூட்டங்களில் கலந்து கொள்ளாது தனியாக இருப்பது போன்றவையும் இதில் அடங்கும்.
மூன்றாவதாக, ஆசனம் சொல்லப்பட்டிருக்கிறது. உடம்பில் நோயிருப்பின், அது கடவுள் தேடலுக்கு எதிராக முடியும். அதில் ஈடுபட முடியாமல் போகும் தன்னை அறிதல் என்ற கேள்வி எழாது. எங்கு நோயிருக்கிறதோ அந்த நோயையே மனம் பற்றிக்கொண்டிருக்கும். எனவே, நோய் வராது தடுப்பதற்காகப் பல்வேறுவிதமான ஆசனங்கள் பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன. ஹடயோகம், இந்த ஆசனங்கள் மிக முக்கிய மானவை என்று கருதுகிறது.
வயிறு சுத்தமாக இருப்பதற்கும், கழுத்து, கை- கால்கள் உறுதியாக இருப்பதற்கும், மூளைக்கு வேண்டிய அளவு ரத்தம் பாய்வதற்கும், உடம்பிலுள்ள எல்லா நரம்புகளும் சீராக வேலை செய்வதற்கும் இந்த ஆசனங்கள் உதவுகின்றன. ஆசன வாயிலிருந்து தலையின் உச்சி வரை பல்வேறு விதமான சக்கரங்கள் இருக்கிறதென்றும், அவற்றைத் தூண்டிவிட, உடம்பின் இயக்கம் மிகச் சீராக இருக்கும் என்றும், அந்த சக்கரங்களைத் தூண்டி விடுவதற்கு இந்த ஆசனங்கள் பேருதவி செய்கிறதென்றும் ஹடயோகம் சொல்கிறது. அலைகின்ற மனத்தை அடக்கவும் இந்த ஆசனங்கள் பெரிதும் உதவுகின்றன.
நான்காவதாக, பிராணாயமம் என்கிற ஒரு வித்தையை ஹட யோகம் கற்பிக்கிறது. மூச்சை இடது நாசியின் துவாரத்தின் வழியாக இழுத்து உள்ளுக்குள்ளே தக்க வைத்து, பிறகு வலது வழியாக விட வேண்டும். பிறகு, மறுபடியும் வலது நாசியின் துவாரத்தின் வழியாக இழுத்து, உள்ளே தக்க வைத்து, பிறகு இடது வழியாக விடவேண்டும். தகுந்த ஆசிரியரின் மூலம், சரியான கணக்குகளோடு இதைச் செய்யவேண்டும் என்று ஹடயோகம் வற்புறுத்துகிறது.
இதனால், அலைகின்ற மனம் நிலைப்படும். சுவாசம், மனதோடு சம்பந்தப்பட்டது. மனம் ஆரவாரித்து ஆடுகிறபோது, சுவாசம் தாறுமாறாக இருக்கிறது. சுவாசம் தாறுமாறாக இருந்தால், மனம் ஆரவாரித்து அலையும். எனவே மனதை நிலைப் படுத்த, சுவாசத்தைச் சீராக்குவது முக்கியம் என்று சொல்லி, பல்வேறு விதமான பிராணாயாமங்களைப் பயிற்றுவிக்கிறது ஹடயோகம். தவிர, சரியான சுவாசத்தினால் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது.
ரத்த ஓட்டம் சீராக இருப்பது, படபடப்பைக் குறைத்து, ஒரு பக்குவ நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது.
ஐந்தாவதாக, பிரத்தியாகாரம் என்ற விஷயத்தைச் சொல்லுகிறது ஹடயோகம். இடையறாது மந்திர ஜபம் செய்தல். அப்படிச் செய்வதன் மூலம் மனது அலையாமல் அழுத்தி நிற்க வைத்தல். ஒரு இடத்திலேயே குவிந்திருக்க முயற்சி செய்தல். யானையின் துதிக்கை அலைந்து கொண்டேயிருக்கும். அதனிடம் ஒரு சங்கிலியைக் கொடுத் தால் யானை, அந்தச் சங்கிலியைப் பற்றிக்கொண்டு தும்பிக்கையை அலையவிடாமல் அமைதியாக நின்றிருக் கும். மந்திர ஜபம் என்பது ஒரு சங்கிலியைப் போல; மனம் என்பது யானையின் துதிக்கைபோல! மனதைக் கட்டுக்குள் வைக்க மந்திர ஜபம் பெரிதும் உதவுகிறது. இந்த மந்திர ஜபமும் குருவின் மூலம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். கோபம், படபடப்பு, ஆத்திரம், பிறர் மீது கொள்கின்ற அசூயை, தனக்குள் தோன்றுகின்ற பேராசை... இவை மட்டுப்படவும், சுத்தமாக நகர்ந்து போகவும் பிரத்தியாகாரம் உதவி செய்யும்.
அடுத்தது, தாரணை. அலைகின்ற மனம் மெள்ள மெள்ளக் கட்டுக்குள் வரும். லேசான அலைச்சல்களோடு, நடுக்கத்தோடு இருக்கும். தொடர்ந்த பயிற்சியின் மூலம், அதுவும் கலைந்து மனம் ஓரிடத்தில் குவிந்து, ஆடாது அசையாது இருக்கும். ஓரிடத்தில் குவிந்து உள்ளே அடங்கி விட்டால், நேரம்போவதே தெரியாது. நேரம் சட்டென்று காணாமல் போய்விடும். மூன்று, நான்கு மணி நேரம் அமைதியாக உட்கார்ந்துகொள்ள முடியும். அலையாத மனதை ஓர் இடத்திலேயே, குறிப்பாக ஹ்ருதயத்திலேயே நிற்க வைத்திருந்தால், மிக மிக அற்புதமான அனுபவங்கள் கிட்டும்.
'நான்’ என்பது வேறு, தன் உடம்பு வேறு என்ற தெளிவு ஏற்படும். தன் உடம்பைத் தானே உற்றுப் பார்க்கின்ற மகோன்னதம் கிடைக்கும். ஆனால், தன்னை மீறி எந்தச் செயலும் இல்லாது, தன்னுடைய ஒவ்வொரு அசைவும் தனது கட்டளையின்கீழ் நடக்கிறது என்ற தெளிவைப் பெறலாம்.
தாரணைக்குப் பிறகு வருவது தியானம். உள்ளே மனம் குவிப்பதல்ல தியானம்; ஒரு புள்ளியில் இருப்பதல்ல. அப்படி ஒரு புள்ளியில் நிற்கும்போது, தாரணை என்ற வழியைப் பின்பற்றும் போது ஏற்படுகிற விகசிப்பே தியானம். இந்த நெடுநாள் பயிற்சியின்போது சட்டென்று மனம் வயப்பட்டு, நான் இன்னது, இப்படித்தான் என்பது தெரிந்துவிடும். மனத்தின் சுமை முற்றிலும் மறந்துபோய், மனம், தான் என்ற இருப்புக்குள் புகுந்து, அங்கேயே கிடக்கும். அப்போது, ஆரம்பத்தில் துவங்கிய மந்திர ஜபத்தின் தேவதையைப் போன்ற வடிவமே தன் வடிவம் என்று உணர்ந்து, அந்த வடிவத்திலேயே லயித்துக் கிடக்கும். அல்லது, வடிவமில்லாத பெரிய வெளிச்சத்தில் மூழ்கிக் கிடக்கும்.
மனம் என்பது அதன் வசத்தில் இல்லாது,  இப்போது வேறு ஒரு பெரிய விஷயத்துக்குள் நுழைந்துவிட்டது. ஆன்மா என்ற விஷயத் தைத் தொட்டு உணர்ந்து, அதைக் கட்டிக் கொண்டு கிடக்கிறது. அதிலிருந்து பிரிந்து வந்து உலக விஷயங்களில் ஈடுபடுவதும், பிறகு மறுபடியும் போய் கட்டிக்கொண்டு கிடப்பதும், கணவனோடு அடிக்கடி கூடுவதற்கு ஆசைப்படும் பத்தினிப் பெண்போல, மனம் என்பது அடிக்கடி இந்த ஆத்ம அனுபவத்தை, அதன் அருகில் நிற்பதை மிகவும் விரும்பி அதனோடு இறுக்கமாய்க் கிடப்பதையே முயற்சி செய்யும்.
தியானத்தில் ஆழமாய் ஈடுபட்ட வர்களுக்கு உலக விஷயங்கள் வேறு விதமாகத் தெரியும். அந்த லயிப்பிலிருந்து வெளிவந்து உடுக்கவோ, உண்ணவோ, பிறரோடு பேசவோ செய்து, பிறகு மறுபடியும் உள்ளுக்குள் புகுந்து விட முடியும். அப்படியிருக்க வேறு சில அறிவுகள் விழிக்கத் துவங்கும்.
இயற்கையின் அசைவுகளும், எதிர்ப்பட்ட மனிதர்களுடைய உள்ளும் புறமும் தெளிவாகத் தெரியும். அவஸ்தைப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய, இப்படி ஆழ்ந்த தியானத்தில் இருப்பவர்களால் முடியும். ஆன்ம அனுபவத் தில் ஆழ்ந்து ஈடுபட்டு தியானத்தில் இருக்கின்ற மனிதர், கருணை வடிவாக இருப்பார். அந்தக் கருணை, எதிரே அவஸ்தைப்படுகின்ற மனிதர்களைப் பார்த்து, அவர்களுக்கு மிகுந்த பிரியத்தோடு உதவி செய்யும். இதுவே கருணையைக் கொண்டு கருணையை ஊற வைத்தல். உதவி செய்வதன் மூலம் இன்னும் தியானம் வலுப்பெறுகிறது. அவர்கள் ஆழ்ந்து உள்ளே கிடக்கிறார்கள்.
எட்டாவதாக, 'சமாதி’ என்ற நிலை, ஹட யோகத்தில் பேசப்படுகிறது. 'நான், ஆத்மா’ என்ற இரண்டு பிரிவே உள்ள நிலை, முற்றிலும் மறந்து தானே அதுவாக மாறுவது 'சமாதி’. இதற்கு மேல் விளக்க முடியாது; சொல்லில் அடங்காத ஒரு சூட்சுமமான நிலை அது. 'நான்’ அற்ற நிலை. மறந்த நிலை. ஈடுபட்டோருக்கு, தான் என்ன செய்கிறோம் என்று தெரியாது. எதுவும் ஞாபகத்தில் தங்காது. ஏதோ செய்துகொண்டிருப்பார்கள். ஆனால், எது செய்தாலும், மிகச் சரியாக இருக்கும். இதுவொரு அற்புதமான வித்தை! கடவுளோடு கலந்த நிலை. இந்து மதம் என்கிற சனாதன தர்மம் மிகச் சிறப்பாக, தெளிவாக, மிக நுணுக்கமாக இங்கே சொல்லப்பட்டிருப்பதையும் தாண்டி, மனித குலத்தின் மேம்பாட்டுக்காக வரையறுத்துக் கொடுத்திருக்கிறது. ஹடயோகம் ஓர் அமிர்த கலசம். ஆனால், முற்றிலுமாய் உணர்ந்து ஈடுபட, எல்லோராலும் முடியாது.
நல்ல குருவிடம், கூர்மையான நல்ல சீடர்கள் வந்து சேருவார்கள். இரும்பைக் காந்தம் இழுப்பது போல, அந்தக் காந்தத்தின் அதிர்வுகள் தொலை தூரத்தில் இருக்கும் இரும்பையும் மெள்ள மெள்ளத் தன் பக்கம் இழுப்பதுபோல, நல்ல சீடர்களை குரு தனது அமைதியான ஆற்றலால் ஈர்த்துவிடுவார். நல்ல சீடர்களெனில் குருமார்களுக்குக் கொண்டாட்டம். மிகச் சரியான கேள்வியும், அந்தக் கேள்விக்கு உண்டான பதிலும், அதைச் சிந்திக்கவேண்டிய அவசியமும் ஒரு குருவுக்கு ஏற்பட்டுவிடும். அதை விளக்கும்போது பேருவகை பொங்கும். சரியான பாத்திரத்தில்தான் பிச்சை இடுகிறோம் என்கிற நிறைவு ஏற்படும்.
கம்பீரம் சேஷய்யருடைய ஹடயோக விஷயங்கள், அதைப் பற்றி அவர் கொண்டிருந்த ஆழ்ந்த திடமான அபிப்ராயங்கள், பாலசுவாமிக்கு நல்ல விஷயமாய் அமைந்தது. தன்னுடைய 'நானார்’ (நான் யார்?) என்ற தத்துவத்தை விவரிக்க, இந்த ஹடயோகத்தின்பால் ஈடுபாடு கொண்டிருந்த ஒரு சீடர் தேவையாக இருந்தது.
''ஹடயோகம் தேவை இல்லை. ஆன்ம விசாரமே போதும். 'நானார்’ என்ற விசாரிப்பே மிக முக்கியம்'' என்று பாலசுவாமி, கம்பீரம் சேஷய்யரிடம் சொன்னார்.
''ஹடயோகம் என்னுடைய விஷயமில்லையே சுவாமி! அது விவேகானந்தர் கூறியதாக இருப்பினும், அது அவருடைய விஷயமும் அல்ல. சனாதன தர்மத்தின் ஆரம்ப
காலம் தொட்டு இந்த நெறிமுறைகள் மிகத் திறமையாக, தெளிவாக கடைப்பிடிக்கப்பட்டு, வரையறுக்கப்பட்டு, இதற்குள்ளாக பல்வேறு சூட்சுமங்கள் ஏற்படுத்தப்பட்டு, வழிவழியாக நல்ல குருமார்களின் உதவியால் தேசமெங்கும் பரப்பப் பட்டிருக்கிறது.
பிராணாயாமம் என்பது மூச்சை இழுத்து, கும்பகம் செய்து வெளிப்படுத்துவது மட்டுமல்ல. அதில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. இயமம், நியமம் என்று ஆரம்பித்தால், எதை உண்ணலாம் எதை உண்ணக் கூடாது, எப்போது உண்ணலாம், எப்போது உண்ணக்கூடாது என்ற நியதிகளெல் லாம் நிச்சயம் உண்டு.
எவ்வளவு சாப்பிடலாம் என்கிற கட்டுப்பாடுகள் அதிகம். இவையும் குருமார்களால் மிகத் தெளிவாக சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, ஹடயோகம் வேண்டாம் என்று நீங்கள் சொன் னால், அதைச் சரியான விதத்திலே மறுக்க வேண்டுமே?'' - கம்பீரம் சேஷய்யர் கவலையோடு தெரிவித்தார்.
ஸ்ரீரமண மகரிஷி என்று அழைக்கப்பட்ட பாலசுவாமி, கம்பீரம் சேஷய்யருக்கு உரைநடையாக விளக்கம் அளித்தார். கவிதை எழுதும் ஆற்றல் அவருக்கு இருப்பினும், கவிதையில் பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்தியிருப்பினும், உரைநடையாக... தெலுங்கு பேசுகின்ற மனிதனுக்குத் தெளிவாகப் புரியவேண்டுமே என்ற அக்கறையோடு சொல்லப்பட்டது. அந்த உரைநடை, இன்றளவும் பல்வேறு சாதகர்களுக்கு, பல்வேறு மொழிகளில் மாற்றப்பட்டு, பலருக்குப் பேருதவியாக இருக்கிறது.
ஆரம்ப கட்டங்களில் இருப்பவர்களுக்கு ஹட யோகம் நல்லதுதான். ஆனால், ஹடயோகத்தின் மூலம் 'நானார்’ என்ற விசாரம் முற்றுப் பெறாது; தெளிவு வராது என்று பகவான் ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்ட பாலசுவாமி தெளிவாகச் சொன்னார்.

Comments