ஸ்ரீநரசிம்ம மூர்த்தி.

து, தெய்வ சங்கல்பம்!
 அரியாய் அவதரித்து அசுரனின் கதை முடித்து, பக்த பிரகலாதனை ரட்சித்த நரசிம்மப் பரம்பொருள், கால காலமாய் பூவுலகிலேயே வீற்றிருந்து உலக மாந்தர்களையும் ரட்சிக்கத் திருவுளம் கொண்டது.
 ஒரு கணம் தரிசிக்க, உன்னத பலன்களை அள்ளித் தரும் அற்புதமாம் தமது ஸ்ரீநரசிம்மத் திருமேனியை பூவுலகமெங்கும் நிலைநிறுத்த முடிவுசெய்தது.
 பில்லி சூனியம் அகற்ற, பிறவிக்கடனும் பொன் பொருள் கடனும் இன்றி தம் அன்பர்கள் யாவரும் வாழ்வில் சுபிட்சம் பெற, பூதலத்தில் பல்வேறு தலங்களில் கோயில்கொண்டு அருள்மாரிப் பொழிவது எனத் தனக்குள் சங்கல்பித்துக்கொண்டது.
 அதற்காக, 'அகோபிலம்' முதற்கொண்டு... இந்தப் புண்ணிய பூமியில் பரம்பொருள் தேர்ந்தெடுத்த திருத்தலங்களும் கோயில்களும் ஏராளம். தனித்தனியே காரணக் கதைகளும், ஸ்ரீநரசிம்மத்தின் அருளாடல்களால் மகத்துவமும் பெற்ற அந்தத் திருத்தலங்களில் குறிப்பிடத்தக்கது  கீழப்பாவூர்!
 மெய்ம்மறந்து தேன் பருகும் ஈக்களையும், தேன் தரும் பூக்களையும் ஒருகணம் சீண்டி சலனப்படுத்திய தென்பொதிகைத் தென்றல், மெள்ள மெள்ளப் பெருங் காற்றாய் உருவெடுத்தது. அதன் வேகத்திலும், அடுத்தடுத்து நிகழப்போகும் அற்புதத்தைக் காணும் ஆர்வத்திலும் கிளையசைத்து ஆடின காட்டு மரங்கள்!
 ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், கடுந்தவத்தில் லயித்திருந்தார்கள் அந்த நால்வரும்!
 மகரிஷி காசியபர், தேவரிஷி நாரதர், மழைக் கடவுள் வருணன் மற்றும் சுகோஷன் ஆகியோர்! புலனடக்கி மெய்தவத்தில் ஆழ்ந்துபோன இந்த நால்வரது மனதிலும் ஸ்ரீமந் நாராயணனே நிறைந்திருந்தார்.
 ஒருமுறை சொல்ல பலகோடி புண்ணியம் தரும் எட்டெழுத்து மந்திரத்தைப் பிசிறின்றி அவர்களின் உதடுகள் உச்சரிக்க... பொதிகை மலைச் சாரலெங்கும் எதிரொலித்த அந்த மந்திர ஒலி, வைகுண்டத்தின் கதவுகளையும் தாண்டி பரந்தாமக் கடவுளின் திருச்செவி களை எட்டியது!
 நால்வரது தவத்தைக் கண்டு மனமிரங்கிய மாலவன், மண்ணில் இறங்கினார்...  ஸ்ரீநரசிம்மமாக!
ஆமாம்... பிரகலாதவரதனாய் பெருமா ளைத் தரிசிக்க வேண்டும் என்பதுதானே அவர்களது ஆசையும் விருப்பமும்! அதற் காகத்தானே இந்தக் கடுந்தவம்!
 முன்பொருமுறை இதே வேண்டுதலை மனதில் கொண்டு தவமியற்றிய நால்வருக்கும் காட்சி தந்த பெருமாள், ''பொதிகை மலைக்கு அருகில் சித்ரா நதிக்கரைக்குச் சென்று தவத்தைத் தொடருங்கள்; உங்கள் விருப்பம் நிறைவேறும்'' என்று அருளியிருந்தார்.
 அதன்படியே, இந்தத் திருவிடத்துக்கு வந்து காசியபர் முதலானோர் தவமிருக்க... இதோ, அவர்களது விருப்பம் நிறைவேறி விட்டது!
 விண்ணும் மண்ணும் அதிரும்படியான சிம்ம கர்ஜனை கேட்டுக் கண்விழித்த நால் வரும், மண் தோய வீழ்ந்தனர்; நெடுஞ்சாண் கிடையாக நெடுமாலை வணங்கி எழுந்த வர்கள், மீண்டும் ஒரு வரம் கேட்டனர்.
 ''பரம்பொருளே! எங்களுக்குக் கிடைத்த இந்த பாக்கியம், உலக மாந்தர்களுக்கும் கிடைக்கவேண்டும். இந்தத் திருவுருவத்துடன் இங்கேயே கோயில் கொள்ள வேண்டும்.''
   இப்போது பகவானின் விருப்பம் நிறை வேறியது. அடியவர்களது வேண்டுதல்படி... இல்லை இல்லை... தனது ஆசைப்படி அந்தத் தலத்திலேயே திருக்கோயில் கொண்டார் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி.
 அந்தத் திருத்தலம், கீழப்பாவூர்.
 திருநெல்வேலி தென்காசி சாலையில், சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் பாவூர்சத்திரம். இங்கிருந்து சுரண்டை எனும் ஊருக்குச் செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கீழப்பாவூர். இந்தத் தலத்தை பாண்டிநாட்டு அகோபிலம் எனப் போற்றுகிறார்கள் பக்தர்கள்!
 சிறியதுதான் என்றாலும், மிக அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். சோழர் காலத்துக் கோயில் என்றும், பாண்டிய மன்னர்களால் அமைக்கப்பட்ட ஆலயம் என்றும் வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஸ்ரீநரசிம்மர் ஆலயம் என்றே வழங்கப்பட்டாலும், ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதியையும் இங்கே தரிசிக்கலாம். கருவறையில், பத்மாவதித் தாயாருடன் அருள்பாலிக்கிறார் இந்தப் பெருமாள்.
 ஆதிகாலத்தில் அலர்மேலுமங்கைத் தாயார் மற்றும் பத்மாவதித் தாயாருடன் இவர் அருள்பாலித்தவராம். தற்போது, அருகில் பத்மாவதித் தாயாரை மட்டுமே தரிசிக்கமுடிகிறது. கோயில் கும்பாபிஷேகத்தையட்டி  அலர்மேலுமங்கைத் தாயாரின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யவும் முயற்சிகள் நடைபெறுகின்றனவாம்.
 ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி பெருமாளுக்கு திருவோண நட்சத்திரத் திருநாள் விசேஷம். இந்த தினத்தில் இங்கு வந்து பெருமாளைத் தரிசிக்க, எண்ணிய காரியம் ஈடேறும் என்பது நம்பிக்கை.
 கருடாழ்வார், ஸ்ரீவிஷ்ணுதுர்கை ஆகிய தெய்வத் திருவுருவங்களையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம். ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதிக்குப் பின்புறம் அதாவது மேற்குத் திசை நோக்கி அருள்புரிகிறார் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி. புடைப்புச் சிற்பமாக, பதினாறு திருக்கரங்களுடன் திகழும் ஸ்ரீநரசிம்மரைத் தரிசிக்கும்போதே, உடலும் உள்ளமும் சிலிர்க்கிறது.
 இந்த நரசிம்ம மூர்த்தி, ஆக்ரோஷத்துடன் இரண்யனை தன் மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலத்தில் அருள் பாலிக்கிறார். ஸ்வாமியின் தலைக்கு மேல் வெண்குடை மற்றும் சாமரம். ஸ்ரீநரசிம்மருக்கு அருகில் பிரகலாதன், அவனுடைய தாயார், காசியப முனிவர் மற்றும் காசி மன்னன் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
 ஆதிகாலத்தில், இவர் மிகுந்த ஆக்ரோஷத்துடன் திகழ்ந்த தாகவும், அந்திசாயும் நேரத்தில் இந்த ஆலயப் பகுதியில் சிம்மம் கர்ஜிக்கும் ஓசையை தங்களின் முன்னோர்கள் பலர் கேட்டிருக்கிறார்கள் என்றும் பயபக்தியுடன் விவரிக்கிறார் கள் உள்ளூர் பக்தர்கள்.
 நாளடைவில் ஸ்ரீமகாலட்சுமித் தாயாரை ஸ்வாமியின் மார்பில் ஆவாஹனம் செய்து, தினமும் அபிஷேகம் ஆரா தனைகள் எனச் செய்துவர, சீற்றம் குறைந்து, கருணா மூர்த்தியாக அருள்பாலிக்கிறாராம் இந்த ஸ்வாமி.
 சுவாதி நட்சத்திரத்தன்று, மாலை நாலரை மணி முதல் ஆறு மணி வரை விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று சிறப்புத் திருமஞ்சனமும் உண்டாம்.  ஸ்ரீநரசிம்மரை சாந்தப்படுத்த பால் மற்றும் இளநீரை அபிஷேகத்துக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். பானகமும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த நாட்களில் இங்கு வந்து வழிபட, இழுபறியான வழக்குகள், திருமணத் தடை, வயிறு தொடர்பான நோய், பில்லி சூனியம் போன்ற தீவினைகள் ஆகிய அனைத்துக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்குமாம். ஆலயத்தின் அருகிலேயே உள்ள நரசிம்ம தீர்த்தமும் மகத்துவம் வாய்ந்தது!
 புண்ணியங்கள் பல அருளும் கீழப்பாவூருக்கு நாமும் சென்று, ஸ்ரீநரசிம்மரைத் தரிசித்து வருவோம்; கோயிலின் திருப்பணிகளிலும் பங்கேற்போம். அன்பான மனைவி, குணம் நிறைந்த புதல்வர்கள், வீடு மனை... எனப் பதினாறு செல்வங்களையும் தனது பதினாறு கரங்களாலும் வாரி வழங்குவார் அந்தப் பிரகலாதவரதன்!

டன் தொல்லை அகற்றும் நீராஞ்சன தீப வழிபாடு!
தினாறு கரங்களுடன் கூடிய கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சிறந்த வரப்பிரசாதி  இவருக்கு

செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியை தரிசிப்பதுடன்,  தாம்பூலத் தட்டில் பச்சரிசி பரப்பி வைத்துஅதன் மீது... உடைக்கப்பட்ட தேங்காயின் இரு மூடி களிலும் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வைத்து, 16 முறை வலம் வந்து வழிபட கடன் பிரச்னைகள் நீங்கும் என்கிறார்கள்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகள்நரசிம்ம ஜயந்திசுவாதி நட்சத்திர தினம்,பிரதோஷ தினம் உள்ளிட்ட நாட்களில் விசேஷ வழிபாடுகள் உண்டுகுறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து நீராஞ்சன தீபம் ஏற்றி வழிபடுவதால் கடன் தொல்லை நீங்குமாம்.

Comments