ஷண்முக சுவாமி

முருகப்பெருமானுக்கு அறுபடை ஆலயங்களைத் தவிர, ஏராளமான ஆலயங்கள். தமிழகத்தில் மட்டுமின்றி; இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும்கூட அமைந்துள்ளன. அவ்வகையில், கர்நாடக மாநிலம், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில், சிறிய மலைக்குன்றின் மீது அமைந்துள்ளது ஸ்ரீசிருங்ககிரி சண்முக சுவாமி ஆலயம். இக்கோயிலில் ஆறு முகங்களோடு ஸ்ரீ சண்முகப்பெருமான் வள்ளி - தேவசேனா சமேதராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கருவறையின் மீது விமானத்துக்குப்பதில் மிகப் பிரம்மாண்டமான ஆறு முகங்களும், அதற்கு மேல் சூரிய ஒளியில் வண்ணங்களை வாரியிறைக்கும் கிறிஸ்டல்களால் அமைக்கப்பட்ட கோபுரமும் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் அமைந்துள்ள சிறிய குன்று சிருங் கேரியை நினைவூட்டும் வகையில் சிருங்ககிரி என்றும், சண்முககிரி என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலைக்குன்றின் உயரம் சுமார் 240 அடி. கோயிலுக்குச் செல்ல 150 படிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
குன்றின் கீழ் உள்ள நுழைவாயிலின் இருபுறங்களில் இரண்டு பிரம்மாண்டமான மயில்கள் உள்ளன. படிகள் ஏறி மேலே செல்லும்போது ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் ஆலயத்தைக் காணலாம். பத்து கரங்கள், ஐந்து முகங்களோடு சிம்மத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகிறார் விநாயகப் பெருமான். இச்சன்னிதியில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான பல்வேறு உருவங்களில் சிறிதும் பெரிதுமான விநாயகப்பெருமானின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.
முக மண்டபம், மகா மண்டபம், கருவறையோடு, தற்கால அறிவியல் அம்சங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அற்புத ஆலயம் இது. ஆறுமுகனுக்குரிய ஷடாக்ஷர மூல மந்திரத்தை நினைவூட்டும் வகையில் அறுங்கோண வடிவில் கருவறை உட்பட, அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருவறையில் ஸ்ரீ சண்முகப்பெருமான் ஆறு முகங்கள், பன்னிரு கரங்களோடு மயிலின் மீது அமர்ந்த கோலத்தில், இரு புறங்களிலும் நின்ற நிலையில் வள்ளி - தேவசேனா சமேதராகக் காட்சி தருகிறார். ஸ்ரீ சண்முகரின் திருவுருவம் மிகவும் நுணுக்கமாகவும் அற்புதமாகவும் வடிக்கப்பட்டுள்ளது. மூலவரின் மீது எப்போதும் சூரியக் கதிர்கள் விழுமாறு அமைக்கப்பட்டுள்ள கருவறையில் பகல் பொழுது முழுவதும் சூரியக் கிரணங்களால் முழுக்காட்டப்படும் ஸ்ரீ சண்முகரை தரிசிப்பது மெய்சிலிர்க்கும் காட்சி.
கருவறையின் மீது அமைக்கப்பட்டுள்ள விமான அமைப்பு இந்தியாவில் வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாத ஒன்றாகும். சுமார் 62 அடி உயரம் கொண்ட முருகப்பெருமானின் முகங்கள், கண்களுக்கு இதமாக, வண்ணம் தீட்டப்பட்டு, சாந்த சொரூபமாகத் திகழ்கின்றன. 105 அடி சுற்றளவு கொண்ட இந்த விமானத்தில் சண்முகரின் முகங்கள் 6 அங்குல கனம் கொண்ட கான்கிரீட் கலவையால் அமைக்கப்பட்டுள்ளன. பகல்பொழுதிலும், இரவில் ஒளிரும் விளக்குகளாலும் இந்தப் பிரத்தியேக விமானம் சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு ஒளிப்பிழம்பாகக் காட்சி தருகிறது.
பிரம்மாண்டமான ஆறு முகங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள 42 அடி உயரமான கிறிஸ்டல் கோபுரத்தில் 2,500 கிறிஸ்டல்கள் (கண்ணாடி போன்ற பளிங்குக் கற்கள்) பொருத்தப்பட்டுள்ளன. கிறிஸ்டல்கள் மீது விழும் சூரிய ஒளி, ஒளிச் சிதறல்களாக பிரதி பலிக்கப்பட்டு வானவில்லின் வண்ணக் கலவையை அள்ளித் தெளிக்கின்றன.
இந்த கோபுரத்தின் உச்சியில் உள்ள நான்கு சென்சார்கள் சூரிய ஒளியை உள்வாங்கி கருவறையை எப்போதும் பிரகாசப்படுத்துகின்றன. வான் வெளியில் சூரியனின் பயணத்துக்கேற்ப இந்த சென்சார்கள் சூரியனை நோக்கி எப்போதும் திரும்பிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கருவறையில் எப்போதும் சூரிய வெளிச்சம் விழுந்து கொண்டேயிருக்கின்றன. பக்தர்கள் பகல் நேரத்தில் ஸ்ரீ சண்முகப் பெருமானை சூரிய ஒளியில் கண்டு தரிசித்து மகிழலாம்.
கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள எண்ணற்ற எல்.ஈ.டி. விளக்குகளின் ஒளியில் கிறிஸ்டல் கோபுரமும் அதன் கீழ் உள்ள ஆறு முகங்களும் ஒளி வெள்ளத்தில் காண்பவர்களை பரவசமடையச் செய்கின்றன. மேலும், மாலை வேளைகளில் நடைபெறும் லேசர் காட்சியையும் பக்தர்கள் கண்டுகளிக்கின்றனர்.
செல்லும் வழி
பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்திலிருந்து, 5 கி.மீ.
பெங்களூரு மெஜஸ்டிக்கிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.
தரிசனநேரம்: காலை 6.30 மணி முதல் 12.30 வரை. மாலை 4.30 மணி முதல் 9 வரை.
தொடர்புக்கு: 080 2860 5099 / 0 98457 95796.

Comments