காயத்ரீ பிரபாவம்

“அந்தக் காலத்து பெரியவர்கள் சொல்லிச் சென்ற எல்லா விஷயங்களுக்குமே அர்த்தங்கள் இருக்கிறது. ‘இந்த சமயத்தில்தான் சாப்பிட வேண்டும்; இந்த சமயத்தில் சாப்பிடக் கூடாது. இந்த இடத்தில் தான் சாப்பிட வேண்டும்; இந்த இடத்தில் சாப்பிடக் கூடாது’ என, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு விதிமுறைக்குப் பின்னாலும் ஒரு தர்மம் இருக்கிறது. உபநயனம் செய்யப் பெற்று காயத்ரீ மந்திரத்தை குரு மூலமாக உபதேசம் பெற்றவர்கள், கட்டாயம் காயத்ரீ ஜபம் பண்ணணும்னு அவர்கள் சொல்லிச் சென்றதற்கு பின்னாலும் ஏகப்பட்ட விசேஷ விஷயங்கள் இருக்கிறது. ஜபங்களிலேயே மிக உயர்வான ஜபம், மந்திரம் - காயத்ரீ ஜபம், மந்திரம்தான்” என்றார் ‘காயத்ரீ பிரபாவம்’ என்ற தம் சொற்பொழிவில் வி.ராஜகோபால கனபாடிகள்.
“ஒவ்வொரு தேவதைக்குமே காயத்ரீ மந்திரம் உண்டு. விச்வாமித்ரர்தான் காயத்ரீயை கண்டுபிடித்தார். மூன்று வேதங்களின் சாரம் காயத்ரீ ஜபம்தான். இந்த காயத்ரீ மந்திரத்தை ஜபம் பண்ணினால் போதும், வேதம் முழுவதையும் பாராயணம் செய்வதால் கிடைக்கக் கூடிய பலன் கிடைத்துவிடும். பாவம் எல்லாம் போயிடும். ப்ருஹ்மா உலகத்தை சிருஷ்டி பண்றதுக்கு காரணமாக இருந்தவளே காயத்ரீ தேவிதான். ஆயிரம் ஆவர்த்திகள் காயத்ரீயை ஜபம் பண்ணினால், அதுவரை செய்த அத்தனை பாபங்களும் போய் விடும்னுமனு சொல்கிறார். பாம்பின் தோலானது எப்படி அது அறியாமலேயே அதன் சரீரத்திலிருந்து வெளியேறுமோ, அதேமாதிரிதான் இந்த காயத்ரீ மந்திரத்தை பக்தி சிரத்தையோடு சொன்னால் அத்தனை பாவங்களும் நீங்கி விடும்.
காயத்ரீ மந்திரம் வேதங்களின் சாராம்சமே தான். சந்தேகமே கிடையாது. காயத்ரீ மந்திரத்தின் முதல் பாகமான பிரணவம் மூன்று எழுத்துக்களால் ஆனது. அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்றும் மூன்று வேதங்களிலிருந்து எடுத்து ஒன்றாக்கியது. இதேபோல காயத்ரீயின் இரண்டாம் பாகமான வ்யாஹ்ருதிகள் மூன்றும், மூன்று வேதங்களிலிருந்து எடுத்து ஒன்றாக்கியது. இதேபோல, மந்திரத்தின் முதல் பாதமான ‘தத்ஸவிதுர் வரேண்யம்’ என்பது ரிக் வேதத்திலிருந்தும், ‘பர்க்கோ தேவஸ்ய தீமஹி’ என்பது யஜுர் வேதத்தில் இருந்தும், ‘தியோ யோந: ப்ரஜோதயாத்’ என்பது ஸாம வேதத்திலிருந்தும் எடுத்து ஒரே மந்திரமாக அருளப்பட்டிருக்கிறது. ஆகவே, ஒருவன் செய்யும் காயத்ரீ ஜபமானது மூன்று வேதத்தையும் அத்யயனம் செய்த பலன் தருவதாக மனு கூறுகிறார்.
மூன்று வருடங்கள் தொடர்ந்து இந்த காயத்ரீ ஜபத்தை பண்ணினால், காற்று மாதிரி எல்லா இடத்திலும் சஞ்சாரம் பண்ணும் சக்தி தானாகவே கிடைத்துவிடும். எந்த தோஷமும் இருக்காது. பரமார்த்த ஸ்வரூபம் கிடைச்சிடும். தபஸ்லேயே பெரிய தபஸ் பிராணாயாமம். மந்திரங்களிலேயே மிக பெரிய மந்திரம் காயத்ரீதான்.
காயத்ரீ மந்திரத்தின் பொருள் என்ன? ‘எவர் நமது புத்தியை தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதி மயமான இறைவனை பூஜிக்கிறேன்’ என்று அர்த்தம். யார் நம் புத்தியை தூண்டி விட்டு பிரகாசிக்க கூடிய தேவரா இருக்கார்ன்னு பார்த்தா அது சந்தேகமே இல்லாம சூரியன்தான். அப்பய தீக்‌ஷிதர் என்ன சொல்கிறார்? இந்த மந்திரம் சாட்சாத் பரமேஸ்வரனை தியானம் பண்ற மந்திரம்ன்னு சொல்லிட்டார். ‘பர்க்க:’ அப்படீன்னா தேஜஸ்ன்னு ஒரு அர்த்தம், பரமேஸ்வரன் அப்படீங்கறது இன்னொரு அர்த்தம். அவரும் பிரகாசிக்கிறார், ஜோதி மயமாகத்தான் இருக்கிறார், ஞான மார்க்கத்தில் பிரவேசம் பண்ணவர் அவர்தான் அப்படீங்கறார்.
இன்னொருத்தர் வந்தார், இது விஷ்ணுவை போற்றும் மந்திரம் தான் அப்படீன்னார். விவாதமே வேண்டாமே. காயத்ரீ பரப்ருஹ்ம ஸ்வரூபம். அந்த கால ரிஷிகள் எல்லாருமே நிறைய நாள், நிறைய நேரம் இந்த காயத்ரீயை ஜபம் பண்ணினா. அதனால, தீர்க்க ஆயுள், தேஜஸ் எல்லாம் கிடைத்தது.
எங்கெல்லாம் தேஜஸ் இருக்கோ அதெல்லாமே என்னோட தேஜஸ்தான்ங்கறார் கிருஷ்ண பரமாத்மா. வேதங்களுக்கே தாயாராம் காயத்ரீ. ‘தாயே நான் உன்னை ரொம்ப ஸ்தோத்திரம் பண்ணினேன். எனக்கு தேவையானதை கொடு’னு காயத்ரீ ஜபத்தின் வழியாகவே கேட்கலாம்.
காயத்ரீங்கற பெயருக்கு அர்த்தமே பிராணனை காப்பாற்றகூடிய மந்திரம்னுதான் பொருள். குரு சிஷ்யனுக்கு காயத்ரீ மந்திரத்தை உபதேசம் பண்றதால, அவனின் பிராணனை காப்பாற்றுகிறார். சூரியனை தியானம் பண்ணிட்டு, இந்த மந்திரத்தைச் சொன்னால் சகல விதமான மங்களங்களும் கிடைக்கும்னு வேதமே சொல்றது.
வேதங்களில் சொல்லப்பட்ட கர்மாக்களை பண்ணலேன்னாலே அது தோஷம்தான். ஒரே நாளில்தான் இத்தனையும் செய்யணும்னு இல்ல. ஒவ்வொரு நாளும் அதற்காக நேரத்தை ஒதுக்கி ஸ்ரத்தையாக காயத்ரீ ஜபத்தை செஞ்சுண்டு வந்தாலே போதும்; சகலவிதமான தோஷங்களும் விலகி, சந்தோஷம் தாண்டவமாடும்.”

Comments