இரு சக்திகளின் அருள்சேரும் வண்டியூர் மாரியம்மன்!

மதுரை மாநகருக்கு மாபெரும் காவல் தெய்வங்களாக விளங்கி வரும் இறை சக்திகளுள் வண்டியூர் மாரியம்மன் மிகவும் குறிப்பிடத் தகுந்தவள்.
மதுரையின் மையத்தில் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வண்டியூர்.
கூன்பாண்டியன் என்கிற சுந்தரபாண்டியன் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில், வைகை நதியில் கிடைத்த விக்கிரகத்தை இங்கு (வண்டியூர்) கொண்டு வந்து பிரதிஷ்டைசெய்தான்... அதுவே வண்டியூர் மாரியம்மன் என்று சொல்லப்படுவதுண்டு.
அந்த நாளில் மதுரையை ஆண்ட மன்னர்கள் போரில் தங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக வண்டியூர் மாரியம்மனை வழிபட்ட பின்தான் படைகளுடன் ஆர்ப்பரித்துப் புறப்படுவார்களாம்.
வண்டியூர் மாரியம்மன், இரண்டு சக்திகளின் அருளையும் சேர்த்துத் தன்னிடம் கொண்டவள். அதனால், இவளை ஆத்மார்த்தமாக வழிபடும் பக்தர்கள் பெறும் பலன் அளவிடற்கரியது என்கிறார்கள் மதுரைக்காரர்கள்.
அப்படி என்ன இரண்டு சக்திகள் இவளிடம்?
அந்தக் காலத்திய மன்னர்கள் போரில் வெற்றி வேண்டி, போர்க்களம் புறப்படும் முன் துர்கையை வழிபட்டுச் சென்றார்கள் என்றுதானே படித்திருக்கிறோம். ராஜராஜசோழன் அப்படித்தானே பட்டீஸ் வரம் துர்கையைத் தொழுது பல வெற்றிகளைப் பெற்றான்?!
அதுபோல் வண்டியூரில் அருளும் மாரியம்மன், துர்கையின் அம்சமும் இணைந்த வளாக இருக்கிறாள் என்பதுதான் சிறப்பம்சம்.
இந்தப் பிரபஞ்சமே பராசக்தியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவள்தான் அனைத்துக்கும் ஆதாரம். இந்தப் பராசக்தியின் ஆற்றலாக துர்கை வெளிப்பட்டு அசுரனான மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தாள் என்று புராணத்தில் படித்திருக்கிறோம். அதனால்தான் பல ஆலயங்களில் துர்கை சந்நிதியில் அவளது திருப்பாதங்களின் கீழே இந்த மகிஷாசுரனாகப்பட்டவன் ஒரு எருமையாக (மகிஷம் என்றால் எருமை) காணப்படுவான். பராசக்தியின் கால் தூசுக்கு சமம் என்பதை இது உணர்த்துகிறது.
மகிஷாசுரனை வென்றதால், அன்னையும் மகிஷாசுரமர்த்தினி ஆனாள்.
சாதாரணமாக எந்த ஒரு ஆலயத்திலும் மாரியம்மனை நாம் தரிசித்தால் அன்னையின் காலடியில் எருமை வாகனத்தைப் பார்ப்பது அரிது. ஆனால், வண்டியூர் மாரியம்மனை தரிசிக்கும்போது அன்னையின் திருப்பாதங்களின் கீழே எருமை வாகனத்தைக் காண முடியும். ஆக, வண்டியூர் மாரியம்மனை நாம் வணங்கும்போது ஒரே நேரத்தில் மாரியின் அருளையும் பெறுகிறோம். துர்கையின் ஆசியையும் பெறுகிறோம். இது இந்த ஆலயத்தின் சிறப்பு.
போர் ஆகட்டும்... எந்த ஒரு நல்ல நிகழ்வாகட்டும்... வண்டியூர் மாரியம்மனுக்கு ஒரு வழி பாட்டைச் செய்துவிட்டுத் துவக்குவது பாண்டிய மன்னர்கள் வழக்கம். இதையே மதுரை மக்களும் விடாமல் செய்து வருகிறார்கள்.
திருமலை நாயக்க மன்னர் தன் காலத்தில் புதிய அரண்மனை கட்ட வேண்டும் என்பதற்காக மதுரையில் ‘நாயக்கர் மஹால்’ என்கிற பிரமாண்ட மாளிகையை எழுப்பினார். இன்றைக்கும் மதுரையின் ஓர் அடையாளமாக இது இருந்து வருகிறது.
இந்த அரண்மனை கட்டுவதற்கு வண்டியூர் மாரியம்மன் ஆலயத்துக்குப் பக்கத்தில் இருந்து மண் எடுத்து வரச் செய்தார். அப்படி அங்கே ஏராளமான மண் அள்ளப்பட்டதால், அந்தப் பகுதியில் பிரமாண்டமான பள்ளம் ஏற்பட்டது (இந்த இடத்தைத் தோண்டும் போது கிடைத்த பிரமாண்ட பிள்ளையார்தான் இன்றைக்கு மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்தில் முக்குறுணிப் பிள்ளையாராக அருள்பாலித்து வருகிறார்).
ஒரு நாள் வண்டியூர் வந்த திருமலை நாயக்க மன்னர், மண் எடுக்கப்பட்டதால், உருவாகி இருக்கும் பிரமாண்ட பள்ளத்தைப் பார்த்தார். ‘இந்த பள்ளத்தை எப்படி சரி செய்வது? இதை மூட வேண்டும் என்றால், வேறு ஓரிடத்தில் இருந்து மண் எடுக்க வேண்டுமே?’ என்று யோசித்தார். அந்த வேளையில் அவனது பார்வை வண்டியூர் மாரியம்மன் ஆலயத்தில் போய் நின்றது. முகம் பிரகாசமானார்.
‘ஆஹா... அருகில் இருப்பது காவல் தெய்வமான வண்டியூர் மாரியம்மன் அருள் பாலித்துக் கொண்டி ருக்கும் ஆலயம் ஆயிற்றே! இந்த ஆலயத்துக்கென்று ஒரு திருக்குளம் இதுவரை இல்லையே... திருக்குளம் இருந்தால், பல திருவிழாக்களை நன்றாக நடத்த முடியும். பெரிய பள்ளம் விழுந்த இந்த இடத்தில் பிரமாண்டமான தெப்பத்தை (திருக்குளத்தை) நிறுவி விடலாம்’ என்று தீர்மானித்து, அந்தப் பள்ளத்தை இன்னும் ஆழப்படுத்தி - அகலப்படுத்தி சதுர வடிவில் ஒரு குளம் அமைத்தார் நாயக்க மன்னர்.
திருக்குளத்தின் மையத்தில் நந்தவனம் அமைத்து காண்போர் கண்களைக் கவரும் வகையில் ஒரு வசந்த மண்டபம் கட்டினார். விநாயகரை பிரதிஷ்டை செய்தார். ஊர்மக்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
தற்போது தைப்பூசத்தன்று மீனாட்சி அம்மைக்கும் சுந்தரேஸ்வரருக்கும் இங்கே பிரமாண்டமான தெப்பத் திருவிழா எடுக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் பிரமோத்ஸவமும் விமரிசையாக நடந்து வருகிறது.
இப்போது வண்டியூர் மாரியம்மனை தரிசிப்போமா?
பொதுவாக மாரியம்மனை நாம் பல ஆலயத்தில் தரிசித்திருப்போம். எப்படி? பாசம், டமருகம், கத்தி, கபாலம் என்பனவற்றை ஏந்தி நான்கு திருக்கரங்கள் அமைந்திருக்கும். கால்களைத் தொங்கப்போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பாள்.
ஆனால் இங்கே வலக்காலை மடக்கி, இடக்காலைத் தொங்க விட்டபடி அன்னை அருட்காட்சி தருகிறாள். இடக்காலுக்குக் கீழே மகிஷாசுரன். புன்னகைத்த கோலத்தில் கைகளில் பாசம் மற்றும் அங்குசம் ஏந்திய வண்ணம் காணப்படுகிறாள். பிரதான நாயகி இவள்தான். பரிவார தேவதைகள் கிடையாது.
வண்டியூர் மாரியம்மனுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை சேகரித்துக் கருவறை அருகே வைத்திருப்பார்கள். சக்தி வாய்ந்த இந்த தெய்வத்துக்கு அபிஷேகிக்கப்படும் இந்தத் தீர்த்தம் நம் மேல் பட்டால், நம் மன அழுக்குகள் அகல்வதோடு பல வியாதிகளும் நம்மை விட்டு நீங்கும். எனவே, தீர்த்தம் வேண்டி ஆலயத்துக்கு வருபவர்களுக்குப் புனித தீர்த்தம் தரப்படும்.
கண் நோய், அம்மை போன்ற வெப்பு தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆலயம் வந்து அம்பிகையைத் தரிசித்து இந்த தீர்த்தத்தை உட்கொண்டால், எத்தகைய நோயாக இருந்தாலும் அகன்று விடும் என்ற நம்பிக்கை பன்னெடுங்காலமாக உள்ளது.
தோல் தொடர்பான வியாதிகள், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், மருத்துவர்களால் கைவிடப் பட்டவர்கள் என்று பலரும் இந்த மதுரை மாநகரின் காவல் தெய்வத்தின் சன்னிதிக்கு வந்து மனமுருகி வேண்டுகிறார்கள். பக்தர்களின் நெகிழ்வான பக்தியில் மனம் கசியும் அன்னை, அவர்களுக்கு அருள்புரிந்து ஆட்கொள்கிறாள்.
தங்களுக்கு அருள்புரிந்த அன்னைக்கு அபிஷேகம் செய்து, மாவிளக்கு ஏற்றி நன்றிக்கடன் தெரிவிக்கிறார்கள்.
திருவிழாக் காலங்களில் தீச்சட்டி, பால்குடம் போன்ற பிரார்த்தனைகளை நேர்ந்துகொண்டு பக்தியுடன் செலுத்துகிறார்கள்.
வண்டியூர் வழியாகச் செல்லும் எந்த ஒரு அன்பரின் பார்வையில் இருந்தும் இந்த ஆலயமும், திருக்குளமும் தப்பாது. சந்தர்ப்பம் அமையும்போது, அன்னையைத் தரிசித்து அவள் அருளைப் பெறுவோம்!

Comments