கொம்பும், கொடியும்போல வாழுங்கள்!

வாழ்க்கை என்பது தம்பதிகளாக வாழ்வதுதான். ஆண்கள் இந்தக் காலத்தில் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே பந்தமில்லாமல், பொறுப்பில்லாமல் சுதந்திரமாக வாழலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். அதே போல் பெண்களும் கல்யாணம் செய்துகொள்ளாமலேயே ஏதோ உத்யோகம் செய்துகொண்டு, சம்பாதித்து சுதந்திரமாக ஒரு பந்தத்திலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையாகப் பார்க்கும்போது கல்யாணம் செய்து கொள்ளாத ஆணோ, பெண்ணோ வாழ்க்கையில் பல பொறுப்புகளையும், பல பந்தங்களையும், பல கஷ்டங்களையும் எற்றுக் கொண்டிருப்பதானது கண்கூடாகத் தெரிகிறது.
கல்யாணமான தம்பதிகளுக்கு வரக்கூடிய இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தம்பதிகளே, பரஸ்பரம் பேசி பலவித பிரச்னைகள், கஷ்டங்களை தீர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. கணவனும், மனைவியும் சொல்லும் அதன் விளக்கமும் போல, இரு உடல் ஒரு மனதாக இருக்க வேண்டும். எப்படி ஒரு கொம்பை ஆதாரமாகக் கொண்டு கொடிபடருகிறதோ, அதுபோல் கொம்பில்லாமல் கொடியில்லை, கொடியில்லாமல் கொம்பில்லை என்பது போல் ஒன்றுக்கொன்று ஆதூரமாக இருந்து கொள்ள வேண்டும். ஒரு கொடியைப் படரவிட்டால்தான் கொம்பிற்குப் பெருமை. அதன்மேல் (கொம்பின் மேல்) கொடி படர்ந்தால்தான் கொடிக்குப் பெருமை. கொடி வேறு, கொம்பு வேறாக இருந்தாலும் எப்படி ஒன்றுக்கொன்று ஆச்ரயித்துக் கொண்டிருக்கிறதோ அதுபோல் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஆச்ரயித்து வாழ வேண்டும்.
கல்யாணத்திற்காக பெண் பார்ப்பதற்கு முன்பு வரை பெண்ணிற்கோ, ஆணிற்கோ பரஸ்பரம் எந்தவித நம்பிக்கையோ, ஆதாரமோ ஏற்படுவதில்லை. பரஸ்பரம் பார்த்துக் கொண்டபிறகே நம்பிக்கை ஏற்படுகிறது. தற்காலத்தில் பல நாட்கள் பழகிய பிறகு, நம்பிக்கை ஏற்படுகிறது. எப்படியிருந்தாலும் பிறந்தது முதல் கல்யாணம் முன்புவரை தாய் தந்தையரை நம்பியிருந்தவர்கள், கல்யாணம் என்று எற்பட்ட பிறகு தாய் தந்தையர்களையும் அரவணைத்து வாழ வேண்டியவர்கள், இல்லறம் நடத்துபவர்கள்.
அப்படியிருந்தும் கூட தற்கால நிலையிலே புதியதாகக் கல்யாணம் செய்து கொள்ளக் கூடியவர்கள் பரஸ்பரம் ஆணும், பெண்ணும் பார்த்து, பேசி நம்பிக்கை ஏற்பட்டு, இரண்டு பக்கங்களிலும் உள்ள தாய் தந்தையர்களை விட்டு விட்டு, வாழ்க்கை நடத்தக்கூடிய அளவுக்கு புதிய தம்பதிகளிடையே இன்றைக்கு அன்பையும், பாசத்தையும், நம்பிக்கையையும் பார்க்க முடிகிறது. இப்படி வாழ்பவர்களிடம் கூட சில சில மனோ வேற்றுமைகள் அவ்வப்போது ஏற்படுவது சகஜம். அவைகளை பெரிதாக்கிக் கொள்ளாமல் கல்யாணத்திற்கு முன்பு எந்த நம்பிக்கையும், பாசமும் இருந்ததோ - அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், சிறு அபிப்ராய பேதங்கள் கூட மாறி வாழ்க்கையில் அமைதியும், சாந்தியும் கிட்டும். அந்த அன்பிலும், நம்பிக்கை யிலும் விரிசல் கண்டுவிட்டால் அப்போது குடும்பம் அமைதியற்ற நிலைமையை அடைந்து விடுகிறது. இப்படி ஏற்படாமல் இருப்பதற்குத் தம்பதிகள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், தியாகம் செய்தும் வாழ்க்கையை நடத்தப் பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும்.
தன்னுடைய கணவனின் நன்மைக்காகவே அவருடைய சுகதுக்கத்தில் முழுமையில் பங்கு கொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்களின் வரலாற்றை நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல் தன் மனைவியின் சந்தோஷத்திற்காகவே எவ்வளவு பெரிய கஷ்டங்களையும், தியாகங்களையும் கணவன் செய்கிறான் என்பதையும் அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அரிச்சந்திரன் தன் வாழ்நாள் முழுவதும் பொய் சொல்லாமல் இருப்பதற்காக, தன்னுடைய ராஜ்யம் அனைத்தையும் இழந்து கஷ்டப்பட்டபோது, அந்தக் கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்வதில் அரிச்சந்திரனுடன் உறுதுணையாக சந்திரமதி இருந்தாள். மேலும் அந்தக் கணவனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு வேறொரு வீட்டில் வேலைக்காரியாகவும் இருந்தாள். அது மாத்திரமல்லாமல் ராஜா அரிச்சந்திரனின் குழந்தை இறந்தபோது, குழந்தையை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றபோது, கடமையே பெரிதென அப்போதும் சந்திரமதியிடம் கடமைக்கேற்றவாறுதான் நடந்து கொள்கிறான். அரிச்சந்திரன் சரித்திரத்திலிருந்து சாமானிய ஜனங்கள் அறிந்து கொள்வது எந்த சமயத்திலும் அரிச் சந்திரன் பொய் சொல்லமாட்டான் என்பதுதான். ஆனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியதோ கணவனுக்காக சந்திரமதி அத்தனை சுகதுக்கங்களையும் ஏற்றுக்கொண்டு, அவனுடைய எண்ணத்திற்காக, மனது சந்தோஷத்திற்காக வாழ்ந்தவள் என்பதையே.
பீமனிடம் ஒரு முறை திரௌபதி எங்கிருந்தோ புஷ்பத்தின் வாசனை வருகிறது. அந்த புஷ்பம் தனக்குத் தேவை என்று கேட்டாள். இதற்காகப் பல காடுகளைக் கடந்து, பல துன்பங்களை அடைந்து வழியிலே ஆஞ்சநேயர் படுத்திருந்த நிலையில் அவர் வாலைக் கூட அசைக்க முடியாமல், அவருடன் நட்பு கொண்டு, அவர் மூலமாக புஷ்பம் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அந்த புஷ்பத்தை பீமன் கொண்டு கொடுக்கிறான்.
ராமாயணத்திலேயும் ராமன் காட்டிற்குச் செல்லும்போது, பதினான்கு ஆண்டுகாலம் சீதையும் கூடவே ராமனோடு சென்று, அத்தனை இன்ப துன்பங்களையும் அனுபவிக்கிறாள். இலங்கைக்குச் சீதை ராவணனால் எடுத்துச் செல்லப்பட்ட பிறகும், ராமபிரான் சீதையினிடம் வைத்திருந்த அன்பு போல, தன் மனைவியிடத்தில் வேறு யாரும் வைத்திருக்கமாட்டார்கள் என்று ராமாயணம் கூறுகிறது. சீதையைக் காணவில்லை என்பதை அறிந்த போது மேகம், சூரியன், செடி, கொடி, மரம் போன்ற ஒவ்வொன்றையும் பார்த்து ‘பிராண நாயகி எங்கே? எங்கே?’ என்று ராமன் கதறுகிறான். இதே போலத்தான் சீதை மீது ராமனுக்குச் சந்தேகம் வந்தபோது கூட ராமனின் எண்ணத்தையும், சந்தேகத்தையும் நிவர்த்தி செய்வதே தன் கடமை என்று எண்ணி நெருப்பில் விழவும் தயாராகிறாள் சீதை.
வாழ்க்கை என்றால் சந்தேகங்கள் அபிப்ராய பேதங்கள் இருப்பது சகஜம்.
அவைகளைப் பெரிதுபடுத்தாமல் இறைவன் கொடுத்த புத்தியை நன்றாக உபயோகித்து, ஒரு தடவைக்குப் பலதடவை நன்றாக செய்து, பொறுமையுடன், பொறுப்புடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன், ‘நான் எவ்வளவு நாள் விட்டுக் கொடுப்பது? நீங்கள் விட்டுக்கொடுத்தால் என்ன?’ என்று சொல்லிக் கொள்ளாமல் இரு உடல் ஒரு மனதுடன், சொல் லும் பொருளும் போலும், சமுத்திரத்தில் வரும் அலை எப்படி வந்து போய் ஒன்றாகிறதோ அது போல், நம்மிடையே ஒருவருக்கொருவர் மன ஒற்றுமையுடன் வாழ்வதே வாழ்க்கை.
- ‘தெய்வத்தின் குரல்’ நூலிலிருந்து...

Comments