பெண்கள் முடி காணிக்கை செலுத்தலாமா?

பெண்கள் முடி காணிக்கை செலுத்தலாமா?



பெண்களின் கேசத்துக்கு ஓர் அபூர்வ சக்தியுண்டு. கணவனின் ஆயுளை நீட்டிக்கச் செய்து, பூவுடனும் பொட்டுடனும் மங்கலகரமான, நீண்ட மண வாழ்க்கையை பெண்களுக்கு அமைத்துத் தரும் ஓர் சக்தி பெண்களின் கேசத்துக்கு இயற்கையாகவே உண்டு.
ஆகவேதான், கூந்தலுக்கு எண்ணெய்த் தடவி, புஷ்பம் சூடி, வாசனைப் பொருட்களால் அலங்கரித்து, அழகுபடுத்தப்படுகின்றன. ஆகவே, பெண்கள் தங்கள் தலைமுடியை முறையாகப் பராமரித்து பாதுகாக்க வேண்டும். இதனால் அந்தப் பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும், குடும்பத்தினருக்கும் நன்மை ஏற்படும். இதனால்தான் பெண்கள் தங்கள் தலை முடியை நீண்டதாகப் பராமரித்துப் பாதுகாக்கிறார்கள்.
பெண்கள் தலைமுடியை (நுனிப்பகுதியை) கத்திரித்துக் கொள்ளுதல் அல்லது முழுவதுமாக தலை முடியை நீக்குதல் போன்றவற்றை கூடியவரை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். சாஸ்திரங்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. திருப்பதி போன்ற க்ஷேத்ரங்களில் பெண்களும்கூட தலைமுடியை காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இது பக்தர்களின் உணர்ச்சிபூர்வமான விஷயம். இதில் சாஸ்திரம் தலையிடாது.

ஏகாதசி நாளில் துளசி பறிக்கக் கூடாது என்பது ஏன்?


மற்ற செடிகளைப்போல் நாம் துளசிச் செடியை பார்க்கக் கூடாது. மஹா விஷ்ணுவின் பக்தைகளுக்குள் முதன்மையானவள் துளசி தேவி. மஹாவிஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானவளும்கூட. ஆகவேதான், நாம் துளசியை வளர்த்து தினசரி பூஜை செய்து நமஸ்கரிக்கிறோம். இப்படி பூஜைக்கு உகந்த துளசியை ஸ்ரீ மஹா விஷ்ணுவுக்கு மாலையாகச் சூட அல்லது அர்ச்சனை செய்ய செடியிலிருந்து நாம் பறிக்கிறோம். தவிர்க்க இயலாமல் நாம் செய்யும் இந்தச் செயலை சில வழிமுறைகளோடு செய்ய வேண்டும்.
‘ஹே... துளசி தேவியே! ஸ்ரீவிஷ்ணுவிடம் உன்னைச் சேர்ப்பதற்காக - அர்ச்சிப்பதற்காக உன்னை நான் பறிக்கிறேன். நான் செய்யும் இந்த ஹிம்ஸையை மன்னித்து விடு’ என்ற சுலோகம் சொல்லி, கைகூப்பி பிரார்த்தித்து அதன் பின்னரே துளசியை செடியிலிருந்து கிள்ள வேண்டும்.
மேலும், மதியம் 12 மணிக்குப் பிறகும், தூய்மையற்ற சமயத்திலும் துளசியை பறிக்கக் கூடாது போன்ற நியமங்களும் இதற்கு உண்டு. இவற்றில் ஏகாதசியன்று பறிக்கக் கூடாது என்பதும் ஒன்று. விஷ்ணு பக்தர்களான அனைவரும், விஷ்ணுவுக்குப் பிரியமான ஏகாதசி திதியன்று சாப்பிடாமல் உபவாஸம் இருந்து விஷ்ணுவை தியானித்து பூஜிக்கிறார்கள் அல்லவா! அதைப்போலவே விஷ்ணு பக்தையான துளசியும் ஏகாதசியன்று விஷ்ணுவை தியானித்துக்கொண்டு இருக்கிறாள். ஆகவே, அன்று துளசியைப் பறித்தல் விஷ்ணு தியானத்துக்கு இடையூறாக அமையும். ஆகவே, ஏகாதசி, துவாதசி, அமாவாசை போன்ற நாட்களில் துளசி பறிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

கோயில் பலிபீடத்தின் தத்துவம் என்ன?

ஒவ்வொரு ஆலய நுழைவாயிலின் அருகே கொடிமரத்துக்கு அருகே அமைந்திருக்கும் ஓர் மேடையே பலிபீடம் எனப்படுகிறது. இது பொதுவாக கிழக்கு வாசலுக்கு அருகே அமைந்திருக்கும். தினசரி, ஒவ்வொரு வேளையும், ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்திலும் (கருவறைக்குள்ளும்) மற்றும் சுற்றுப்பகுதியிலும் இருக்கும் தெய்வங்களுக்கு பூஜைகள், நிவேதனங்கள் செய்து முடித்த பின்னர், கொடிமரத்தின் அருகிலுள்ள பலிபீடத்தில் (கிழக்கு திசையில்) துவங்கி, ஆலயங்களைச் சுற்றி எட்டு திசைகளிலும், தெய்வத்துக்கு நிவேதனம் செய்த அன்னம் முதலான பொருட்களால் பலிகள் போடப்பட வேண்டும்.
இவ்வாறு போடப்படும் பலியானது ஆலயங்களுக்குள் நடமாடும் பக்தர்களுக்கு இடையூறின்றியும், கால்களிலும் மிதிபடாதவாறும் இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டே கொடிமரத்தின் அருகே பலிபீடம் என்னும் ஓர் மேடை (கருங்கல்லால்) அமைக்கப்பட்டு அதன் நடுவில் ஓர் கருங்கல் பதிக்கப்படுகிறது. இதில் தினசரி கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் சில சக்திகளுக்கு பலிகள் போடப்படுவதால் இது பலிபீடம் எனப்படுகிறது.
இந்த பலிபீடத்தை (அர்ச்சகரைத் தவிர) யாரும், எப்போதும் கைகளால் தொடக் கூடாது. அறியாமல் தொட்டு விட்டால் உடனேயே குளியல், கை அலம்புதல் முதலியவற்றால் சுத்திப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் இந்த பலிபீடத்தின் அருகே கால்கள், கைகள் பூமியில் படுமாறு விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இவ்வாறு நமஸ்காரம் செய்யும் போது தங்களிடமுள்ள தீய குணங்களை இறைவனுக்கு பலியாகப் போட்டு விடுவதாக மனதில் எண்ண வேண்டும்.
அசுத்தம் என்பது இருவகைப்படும். ஒன்று, நமது கண்ணுக்குப் புலப்படும் குப்பைகள், தூசிகள் போன்ற அசுத்தப் பொருட்கள். மற்றொன்று, நமது கண்களுக்குத் தெரியாமல் நமது உடலுக்குள்ளேயே உணர்ச்சி வடிவாக அமைந்திருக்கும் காமம் (ஆசை), குரோதம்(வெறுப்பு), லோபம், மோகம், மதம் (அகங்காரம்), மாத்சர்யம்(பொறாமை), பயம் போன்றவை. இவை நமது உடலையும் மனதையும் அசுத்தப் படுத்தி நம்மை தீய வழியில் செலுத்தி, தீமையை விளைவிக்கச் செய்பவை. ஆகவே, இப்படிப்பட்ட தீய உனர்வுகளை நம்மிடமிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
கண்களுக்குப் புலப்படும் அசுத்தங்களைப் பெருக்கி வெளியேற்றி நாம் வசிக்கும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறோம். உடல் மீது படர்ந்துள்ள அழுக்கு போன்றவற்றையும் குளிப்பதன் மூலம் விலக்கிக் கொள்கிறோம். ஆனால், மனதில் உள்ள அசுத்தங்கள் அப்படியே இருக்கின்றனவே. ஆகவே, நமது உடலுக்குள்ளேயே எப்போதும் இருந்து கொண்டிருக்கும் ‘நான்’ என்னும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற தீய உணர்ச்சிகளாகிய குப்பைகளையும், அசுத்தங்களையும் நமது சக்தியால் விலக்க முடியாது. தெய்வ அருளால் மட்டுமே இவற்றை விலக்கி வைக்க முடியும்.
ஆகவே, மனதில் காணப்படும் அசுத்தங்களை ஆலயம் சென்று இறைவன் சன்னிதியின் முன் இருக்கும் பலிபீடத்தில் பலியாகப் போட்டுவிட வேண்டும். இந்த மனோபாவத்துடன் பக்தர்கள் பலி பீடத்தின் அருகில் இரு கால்களையும் நீட்டி, உடலை இறைவன் முன் சமர்ப்பித்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.(ஆலய கொடிமரத்தின் - பலிபீடத்தின் முன் பகுதியைத் தவிர மற்ற எந்தப் பகுதியிலும் நமஸ்காரம் செய்யக் கூடாது.)
பக்தர்கள் தரும் இந்த பலியை பெற்றுக் கொள்வதற்காகவே ஆலயத்தின் கருவறைக்குள் இருக்கும் இறைவன், தனக்கு நேர்எதிரே பலிபீடத்தை வைத்துக் காத்திருக்கிறார். பக்தன் தனக்கு முன்பாக, அன்னம் (சாதம்), எலுமிச்சம்பழம், பூசணிக்காய் போன்ற பொருட்களை பலியாகத் தருவதைக் காட்டிலும், மனதிலுள்ள போட்டி, பொறாமை, ஆணவம் போன்ற தீய உணர்ச்சிகளை பலியாக சமர்ப்பிப்பதையே இறைவன் மிகவும் விரும்புகிறார்.

 

Comments