சிவம் பேணிய செல்வர்

நமிநந்தியடிகள்

வைகாசி பூசம் (23.5.2015)
சோழ நாட்டு ஏமப்பேறூரில் தோன்றிய நமிநந்தியடிகள் சிறந்த சிவபக்தர். தினமும் திருவாரூர் புற்றிடங்கொண்ட பெருமானை வழிபடுவது வழக்கம். ஒரு நாள் அருகேயிருந்த அரனெறி ஈசனை தரிசிக்கச் சென்றார். சன்னிதியில் விளக்கேற்ற எண்ணி, அருகிலிருந்த வீட்டுக்குச் சென்று நெய் வேண்டினார். அந்த வீட்டிலிருந்த சமணர்கள், “கையிலே தீயினை ஏந்திய உங்கள் இறைவனுக்கு விளக்கு வேண்டாமே. விளக்கு எரிக்க விருப்பம் இருந்தால் தண்ணீரை விட்டு எரியும்” என்று பரிகசித்தனர்.
மனம் வருந்தி இறைவனை வணங்கியபோது, “நமிநந்தியே! அருகேயுள்ள குளத்தில் நீரை முகந்து வந்து விளக்கேற்றுக” என்று அசரீரி வாக்கு கேட்டது. ‘இது இறை குரலே’ என்றெண்ணி, திருவைந்தெழுத்தை ஓதி நீரை முகர்ந்து வந்து விளக்கேற்றினார். அவ்விளக்கு சுடர் விட்டொளிர்வது கண்டு கோயில் முழுவதும் விளக்கேற்றினார் நமிநந்தியடிகள். இது தினமும் தொடர, கலக்கமடைந்த சமணர்கள் அவ்வூரை விட்டு அகன்றனர்.
சிவத்தொண்டுகளில் திருவிளக்குத் தொண்டே ஞானசாதனமாகக் கருதப்படுகிறது. ஒளியை வழங்குவதாலேயே சூரியனை இறைவனாக வணங்குகிறோம். சிவபெருமான் தமது கையில் அக்னியை தாங்கியிருப்பதன் பொருள், தாம் ஒளியின் சொரூபம் என்பதை விளக்கவே. அதனால்தான் பூஜை அறைகளில் விளக்கேற்றி, அதை தெய்வமாகக் கருதி கண்களில் ஒற்றிக்கொள்கிறோம்.
அதனால்தான் திருமூலர் சொல்கிறார்:
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது,
சொல் அக விளக்கு அது, சோதி உள்ளது,
பல் அக விளக்கு அது, பலரும் காண்பது,
நல் அக விளக்கு அது, நமச்சிவாயவே!

அதையே தம் திருத்தொண்டாகக் கருதினார் நமிநந்தியடிகள். இவரது குரு பூஜை நாளில் கோயிலில் விளக்கேற்றி நாமும் முக்திக்கு வழி தேடலாமே.

சோமாசிமாற நாயனார்
வைகாசி ஆயில்யம் (24.5.2015)
சோமாசிமாற நாயனார் சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரில் தோன்றினார். சிறந்த சிவபக்தர். சிவபெருமானை, வேள்விகளில் சிறந்ததான சோம வேள்வியால் வழிபட்டமையால் இவரை சோமாசி மாறர் எனப் போற்றுவர்.
இவருக்கு வெகு நாட்களாக ஓர் ஆசை. தாம் யாகத்தில் சமர்ப்பிக்கும் பழம், வஸ்திரம், பொன் முதலான நிவேதனப் பொருட்களை, சிவனாரே நேரில் வந்து பெற வேண்டுமென்று. அதனால் சிவபெருமானின் அன்புக்குப் பாத்திரமான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தூதுவளைக் கீரை பறித்து வந்து அளித்து, அவரது அன்புக்குப் பாத்திரமானார்.
ஒரு நாள், அவரிடம் தமது விருப்பத்தைக் கூறினார் மாற நாயனார். சுந்தரர், அதுகுறித்து இறைவனிடம் விண்ணப்பித்தார். சுந்தரரது விண்ணப்பத்தை ஏற்ற ஸ்ரீதியாகேசபெருமான் ஒரு நிபந்தனை விதித்தார். ‘வேள்வியில் எனது பாகத்தைப் பெற எந்த ரூபத்திலும் வருவேன்’ என்றார். வேத விற்பன்னர்கள் சூழ வேள்வி நடத்திக் கொண்டிருந்தார் சோமாசிமாற நாயனார். ‘வேள்வியில் இன்று இறைவனும் கலந்து கொள்ளப்போகிறார்’ என்ற செய்தி அறிந்து, பொது மக்களும் அங்குக் கூடியிருந்தனர். அப்போது, நான்கு நாய்களைக் கையில் பிடித்தபடி, மகன்கள் இருவர் உடன் வர, கள் குடத்தை மனைவி சுமந்து வர, புலையன் ஒருவன் வேள்விச் சாலைக்குள் நுழைந்தான். அவனைக் கண்ட வேதியர்கள் சிதறி ஓடினர்.
‘யாகம் தடைபடுமோ’ எனக் கலங்கிய சோமாசி மாற நாயனார், விநாயகரை எண்ணி கண் மூடி பிரார்த்திக்க, வந்திருப்பது இறைவனே என்பதை அறிந்து, வணங்கி வரவேற்றதுடன், அவிர்பாகத்தையும் அளித்தார். மறுகணம் புலையன் பிடித்திருந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்களாக மாற, சிவனாரும் பார்வதிதேவியும் இடப வாகனத்தில் அமர்ந்து சோமாசிமாற நாயனாருக்குக் காட்சி தந்தனர்.
திருமாகாளம், அம்பர் ஆகிய தலங்களுக்கு நடுவே சோமாசிமாற நாயனார் யாகம் நடத்திய யாகசாலையும், அவருக்கு, ‘வந்திருப்பது இறைவனே’ என்பதை உணர்த்திய விநாயகர் குடிகொண்டிருக்கும் கோயிலும் உள்ளன. திருமாகாளம் தலத்தில், சோமாசிமாற நாயனாரது திருநட்சத்திரமான வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திர திருநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி, புலையன் கோலத்தில் வேள்விச் சாலைக்கு வரும் தியாகேசபெருமான் அவிர்பாகம் பெறுதல் ஆகிய வைபவங்கள் நடைபெறும். அன்றிரவு, சோமாசிமாறநாயனார் தன் மனைவியுடன் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருள வீதியுலா நடைபெறும்.
மறுநாள் மக நட்சத்திரத்தன்று வேள்விச்சாலையில் இருந்து சிதறி ஓடிய வேத விற்பன்னர்களுக்கு இறைவன் காட்சி தரும் வைபவமும், அம்பன், அம்பாசுரன் ஆகியோரை வதைத்த பாவம் தீர, காளிதேவி, சிவனாரை வழிபடும் வைபவமும் நடைபெறும். இந்த விழாவின்போது திருவாரூர் தியாகேசர் இங்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.

திருஞானசம்பந்தர் (4.6.2015)
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவர் திருஞானசம்பந்தர். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழியில் சிவபாதவிருதயர் - பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். மூன்று வயதே நிரம்பிய சம்பந்தர், தந்தையுடன் கோயிலுக்குச் செல்ல, அங்கே பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் குழந்தையை அமர்த்தி விட்டுக் குளிக்கச் சென்றார் தந்தையார்.
சிறிது நேரம் நீரினுள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத சம்பந்தர் ‘அம்மே... அப்பா’ என்று கூவி அழுதார். அப்போது பார்வதிதேவி, சிவபெருமானுடன் காட்சி கொடுத்து இவருக்கு ஞானப் பாலூட்டினார். குளித்துக் கரையேறிய தந்தை, பிள்ளையின் வாயில் பால் வடிவதைக் கண்டு அது குறித்துக் கேட்க, குழந்தை கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டி, ‘தோடுடைய செவியன்’ என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைப் பாடியது. இது தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பெரும்பேறு.
மறுநாள் காலையில் நீராடி திருக்கழுமலத்தீசனை வணங்கி, சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று ‘மடையில் வாளை’ எனத் தொடங்கும் பதிகத்தைத் தம் கைகளால் தாளமிட்டுப் பாடினார். கோலக்கா இறைவன் பிள்ளையின் கைகள் சிவப்பதைக் கண்டு மனம் தாங்காமல், திருவைந்தெழுத்து எழுதப்பெற்ற பொற்றாளத்தை அளித்தருளினார். அத்தாளத்தைத் தலைமேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப் பதிகத்தைப் பாடிப் போற்றினார். திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தல யாத்திரை இது.
உலக உயிர்கள் அனைத்துக்கும் பார்வதி - சிவனாரே அம்மை - அப்பன். குழந்தை எந்த குணத்தவராக இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும், எக்கோலத்தில் இருந்தாலும் தாய், தந்தையர் தம் குழந்தை பசியால் துயருறுவதைத் தாங்க மாட்டார்கள். அதைத்தான் சம்பந்தர் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இந்த உணர்வுடன் சம்பந்தப்பெருமானை அவரது குரு பூஜை நாளில் வணங்கி வழிபடுவோம்.

 

Comments