கங்கா தசரா

நதிகள் என்று சொன்னாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கங்காதான். நதிகளிலெல்லாம் மிகவும் உயர்ந்ததாகவும், புண்ணியமிக்கதாகவும் கருதப்படுவது கங்கா. அதில் நீராடினால் எல்லா பாபங்களும் விலகிவிடும் என்கின்றன புராணங்கள்.
மிகுந்த பிரயத்தனத்துக்குப் பின் சூர்ய வம்சத்து அரசன் பகீரதனால் தேவலோகத்திலிருந்து பூமிக்கு கங்கை வந்த நாளையே ‘கங்கா தசரா’ பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். இப்பண்டிகை வைகாசி மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து பத்து நாட்களுக்கு நடைபெறும். தசரா என்பதை தஸ் + ஹரா என்று பிரித்து உணர வேண்டும். அதாவது, ஹிந்தியில் ‘தஸ்’ என்பது பத்தையும், ‘ஹரா’ என்பது தீமையையும் குறிக்கும். இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதன் மூலம் நாம் செய்த பத்து வகையான பாபங்களை கங்கா தேவியின் அருளால் போக்கிக் கொள்கிறோம். அதென்ன?
வேதாந்த ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பத்து வித பெருமைகள் உண்டு இந்த நாளுக்கு. அதாவது, வைகாசி மாதம், சுக்ல பட்சம், பத்தாம் நாள், புதன் கிழமை, ஹஸ்த நட்சத்திரம், வியதீபாத யோகம், கர் ஆனந்த் யோகம், சந்திரன் கன்னி ராசியில் இருக்க, சூரியன் ரிஷபத்தில் இந்த பத்துவித அமைப்பும் இருக்கும் வேளையில் தேவலோகத்திலிருந்து கங்கை இந்த பாரத புண்ணிய பூமியில் பிரவாகித்தாள். ஆதலால்தான் கங்கையில் குளிக்கும்போது நாம் செய்யும் பத்து வகை பாபங்களும் விலகுகின்றன. அந்த பத்து வகை பாபங்களும் மனோ, வாக்கு, காயம் என்ற மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மனதால் செய்யக்கூடிய பாபங்கள் மூன்று. அவை:
* பிறர் சொத்தை அபகரிக்க நினைப்பது.

* மற்றவர்களுக்குக் கெடுதல் நினைப்பது.

* சம்பந்த மில்லாத விஷயங்களைப் பேசி பிறர் மனம் புண்பட வைத்தல்.
உடலால் செய்யக்கூடிய பாபங்கள் மூன்று. அவை:
* பிறர் பொருளை பலத்தை பிரயோகித்து அபகரித்தல்.
* வன்முறை.
* பிற பெண்களை நினைப்பது ஆகியவை.
வாயால் செய்யும் பாவங்கள் நான்கு. அவை:
* தகாத, கொடுமையான வார்த்தைகளைப் பேசுதல்.
* பொய் சொல்லுதல்.
* பிறரை தூஷித்தல்.
* தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுதல்.
நம்மால் முடிந்தவரையில் இந்த பத்துவித பாபங்களையும் செய்யாதிருத்தல் நல்லது. நம்மையும் மீறி இந்த பாபங்களைச் செய்து விட்டால், அதைப் போக்கிக்கொள்ள கங்கையில் நீராடி, மனதளவில் தாம் செய்த பாபங்களை நினைத்து வருந்தினால் அந்தப் பாபங்கள் நீங்கும். தவிர, மீண்டும் இத்தகைய பாவங்களைச் செய்யக் கூடாது. இது மிக முக்கியம். ‘கங்கா தசரா’வின் முக்கிய அம்சம் இது.
இந்த திருவிழா சமயத்தில் கங்கா நதியில் நீராடுவது மிகவும் சிறந்தது. இயலாதவர்கள் கங்கா ஜலத்தினால் தன்னை புரோட்சித்துக் கொண்டோ, அதுவும் முடியவில்லை என்றால் நாம் குளிக்கும் தண்ணீரில் கங்கை வந்திருப்பதாக எண்ணி ‘கங்கா கங்கா’ என்று சொல்லிக் கொண்டே நீராட வேண்டும். பிறகு கங்கா தேவியின் சிலைக்கு (கங்கா தேவி வெள்ளை வஸ்திரம் தரித்து, வெள்ளைத் தாமரை மலரில் மூன்று கண்களும், பல கைகளும் உடையவளாக) பூஜைகள் செய்ய வேண்டும். பூஜையின்போது கட்டாயம் இமவான், பகீரதன் ஆகிய அரசர்களை நினைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பல நதிகள் உள்ளன. எல்லாமே சிறந்தவை என்றுதான் சொல்லப்படுகின்றன. ஆனால், எல்லாவற்றிலும் சிறந்தது கங்கைதான். அப்படி தனிச்சிறப்புப் பெறக் காரணம் என்ன?
புராணங்களின் கூற்றுப்படி மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டபோது, அவன் அவ்வாறே கொடுக்க இசைந்தான். பகவான், திரிவிக்கிரமனாக மாறி, ஒரு காலடியால் பூலோகத்தையும், மற்றொரு காலடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் அல்லவா? அப்படி அவர் பாதம் பிரம்ம லோகத்தில் பட்டபோது, பிரம்மா அப்பாதம் யாருடையது என்று தெரிந்து, தன்னிடமுள்ள தீர்த்தத்தினால் அப்பாதங்களைக் கழுவி, அதைத் தன் கையிலுள்ள கமண்டலத்தில் வைத்துக் கொண்டாராம். அதுவே கங்கையாகும். பகவான் காலடி ஸ்பரிசம் பட்டதால் அந்த கங்கா நீருக்கு இவ்வளவு மகிமைகள்.
இன்னொரு முக்கிய விஷயம். கங்கா தசரா வேறு; கங்கா சப்தமி வேறு. கங்கா சப்தமி அல்லது கங்கா ஜயந்தி என்பது, கங்கை ஜஹ்னு முனிவரால் உள்ளிழுக்கப்பட்டு அவரின் காது வழியே ‘ஜாஹ்னவி’ என்ற பெயரில் வெளிப்பட்ட நாள். கங்கா தசரா என்பது கங்கை பூமியில் தடம் பதித்த நாள். இரண்டும் வெவ்வேறு. இந்த கங்கா தசரா பண்டிகையில் எல்லோரும் புனித நீராட்டத்துடன் நிற்காமல், கங்கையில் தீபங்களை மிதக்க விடுவது, தினமும் கங்கைக்கு இரவில் ஆரத்தி காட்டுவது, உபவாசம் இருப்பது போன்றவற்றையும் கடைபிடிக்க வேண்டும். இந்த தினங்களில் எள் தானம் செய்வது மிகுந்த புண்ணியத்தை அளிக்கும்.
கங்கை பாயும் பகுதிகளான ஹரித்வார், காசி, ரிஷிகேஷ் உட்பட பல்வேறு இடங்களில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது ‘கங்கா தசரா’. மற்றவர் பிணி போக்க ஓயாது பெருகும் கங்கையின் உன்னதத்தை நினைத்து கசிந்தால், நம் பாவங்கள் நசியும் என்பதில் வியப்பில்லைதானே?!

Comments