அன்னைக்கு ஆராட்டு

கன்யாகுமரி - சுகந்தமான சுற்றுலாத் தலமாக இருந்தாலும், சூட்சும ஞானத்தை சிதறடிக்கின்ற அலைமன்றம் இது. ஓயா அலைகளால் ஒலித்துக் கொண்டிருக்கும் முக்கடல் சங்கமத்தில், சலன அலைகளை ஒடுக்கிய தவக்கோலக் குமரி. இது நுட்பமான வாழ்வியல் செய்தி.
‘ஒன்று முடிந்து அடுத்தது அல்ல; ஒன்றைத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக ஏதாவது ஒன்று வந்துகொண்டே இருக்கும். அதையெண்ணிக் கலங்க ஆரம்பித்தால் இயங்க முடியாது. மனத்தை சமனப்படுத்தி இயங்கிக் கொண்டேயிரு. அதுதான் உன்னை நிலைநிறுத்தும்’ என்கிற உபதேசத்தை மறைமுகமாக உணர்த்துகிறாள் குமரியன்னை.
அவளுடைய சிறப்பை உணர்ந்தவர்களாகவே, ‘குமரித் தாயே வாழ்க...’ என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள். அலையொலியை மிஞ்சிய ஆரவாரம். என்ன விசேஷம்? கன்யாகுமரி அன்னை பகவதியின் திருக்கோயிலில் வைகாசித் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேரில் ஆரோகணிக்க வந்து கொண்டிருக்கிறாள் அம்பிகை. அதற்காகத்தான் இந்த வாழ்த்துக் கோஷம்.
வெறும் தேரோட்டத்துக்கு மட்டுமா? இல்லை, உலகனைத்தும் வாடும்படி கொடுமைப்படுத்திய பாணாசுரனை வீழ்த்தியவள் இவளல்லவா? ‘கன்னிப் பெண்ணால் மரணம்’ என்கிற வரம் பெற்ற அசுரனை வீழ்த்தும் பொருட்டு, மணம் விலக்கிய தவக்கோலம் எவ்வளவு உன்னதம். உலக நலம் பொருட்டு தன்னை தவத்தில் ஆழ்த்திக் கொண்ட அம்பிகைக்கு ஆராட்டு வைபவம் இந்த வைகாசி மாதத்தில்தான் நடக்கிறது. இந்த வைகாசி விழாவின் தனிச்சிறப்பு இது.
பத்து நாட்களுக்கு நடைபெறும் இந்தத் திருவிழாவின் ஒன்பதாம் நாள்தான் தேரோட்டம். துணிகளாலான தொம்பைகளும், மலர் மாலைகளும் அசைய, கம்பீரமாகத் தென்படுகிறது திருத்தேர். கொடிகளும், தோரணங்களும் அமர்க்களப்படுகின்றன. வாத்தியங்கள் இன்னிசை முழக்கம் செய்கின்றன. அலைச் சங்கமத்தை மீறிய கலைச் சங்கமம்! பக்தி என்கிற ஒரே தளத்தில், அனைத்தையும் இணைத்து, அனைத்தையும் மேம்படச் செய்த பாவம் மிக அற்புதம்.
அம்பிகை தேரில் எழுந்தருளிவிட்டாள். நீண்ட கனமான வடக்கயிற்றைப் பற்றி இழுக்கிறார்கள் பக்தர்கள். மனித வாழ்க்கையை விதிக் கயிறு இழுத்துச் செல்வதாகச் சொல்வார்கள். ஆனால், பக்தர்கள் இழுக்க தெய்வமே பின் தொடர்கிறது. அப்படியானால், விதிக் கயிறு என்னாகும் என்றொரு கேள்வி எழுகிறதில்லையா? விதிக்கயிறு, அறுந்து போகும். வினைச் சேர்க்கையால் உண்டான விதிக்கயிறை அறுக்க எளியவழி, இந்த வடக்கயிறைப் பற்றுவதுதான் என்கிற நுட்பத்தை உணர்த்துகிறார்கள் பக்தர்கள்.
ஒன்பதாம் நாள் தேரோட்டம் என்றால், பத்தாம் நாள் தெப்பத் திருவிழா, அடுத்த கோலாகலம். தெப்பத்தில் உலா வரும் அன்னையைக் காணும் போதே, தலவரலாறும் நினைவுக்கு வருகிறது.
பாணாசுரனை வீழ்த்த, இளம் பெண்ணாக குமரிக்கு வந்து தவமிருந்தாள் அம்பிகை. அத்தவத்தை ஏற்று, மணம் கொள்ள இசைந்தான் சுசீந்திரத்தின் தாணுமாலயன். தேவியின் தவத்தின் நோக்கம் நிறைவேறுவது சிறப்புதான். ஆனால், அப்படி நடந்தால் ‘கன்னிப்பெண்ணால் மரணம்’ என்ற பாணா சுரனின் வரம் பலிக்காதே? என்ன செய்ய?
நாரதர் தன் வேலையைச் செய்தார். முகூர்த்த நேரத்துக்கு முன்பே சேவலாகக் கூவினார். தாமத மானதாக எண்ணி, மணமகனான தாணுமாலயன், குமரிக்குப் போகாமல் திரும்பினார். பெருமான் வராததால் தன்னுடைய தவத்தில் மேலும் ஆழ்ந்தாள் குமரி; தீயநோக்குடன் வந்த அசுரனை வீழ்த்தினாள்; ஆலயம் கொண்டாள் என்பது தலவரலாறு.
அதனாலேயே ஆயுதமின்றி ஜபமாலை தாங்கிய அழகான திருக்கோல தரிசனம். பல்வேறு விழாக்கள் இங்கு சிறப்புடன் நடந்தாலும், வைகாசி விழா மிகச்சிறப்புடையது. அதன் பத்தாம் நாள்தான் தெப்பம். சலனம் ததும்பும் மனம் என்று எண்ணாமல், தங்களுக்குள் அன்னை இப்படி எழுந்தருள வேண்டும் என பிரார்த்திக்கிறார்கள் பக்தர்கள். இந்த நாளில்தான் ஆராட்டு வைபவமும்.
அசுர மர்த்தனம் புரிந்த ஆவேசம் தணியவா? தவத்தால் தகிக்கும் திருமேனி குளிரவா? அன்பர்க்கு அருள் நல்க தவத்திலேயே இருக்கும் அன்னை, குளிர்ந்தே இருக்க வேண்டும் என்கிற காரணமா? எதுவாய் இருந்தால் என்ன? பக்த மனங்களின் விருப்பம் கைகூட தவத்தில் ஆழ்ந்திருக்கும் தயாபரிக்கு நடக்கும் ஆராட்டு வைபவம் அற்புதமான ஒன்று!
பகவதியம்மனை கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை செய்து வணங்கினால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்யம் கிட்டும். மனமொன்றி வணங்கும் பக்தர்களின் துயரங்கள் நீங்கும், கல்விச் செல்வம், தொழில்விருத்தி என வேண்டும் வரம் கிட்டும்.
முக்கடல்களின் சங்கமத்துறையான குமரியில், மும்மலங்களில் ஆட்பட்டுத் திகைக்கின்ற நம்மை ஆட்கொண்டு அருளவே தவமிருக்கிறாள் குமரியன்னை. அவளுக்கு நடக்கின்ற இந்த ஆராட்டு வைபவத்தை தரிசிக்கும்போது, வரப் போகும் நாட்களெல்லாம் நம்மை சீராட்டப் போகின்றன என்கிற எண்ணம்தான் மேலோங்குகிறது.

Comments