யந்திரவாசினி

லக்ஷ்மி சகஸ்ரநாமத்தில், ‘யந்திரபுர வாசினியே நம’ என்று ஒரு வரி வரும். அந்த வரிக்கான பொருளை மெய்ப்பிக்கும் விதமாக, மகாலட்சுமி பச்சை வண்ணப்பெருமாள் கோயில் பிராகாரத்தில் ‘மரகத வல்லி தாயார்’ எனும் திருநாமம் கொண்டு தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சீதாலட்சுமி, கஜலட் சுமி, மரகதவல்லி என்ற மூன்று ரூபங்களும் ஒன்றிணைந்த திருக்கோலம் இது.
பெரும்பாலும் தாயார் சன்னிதிக்கு முன்புறம் அல்லது அருகில்தான் ஸ்ரீசக்கர பீடம் அமைக்கப்படும். ஆனால், இங்கு தாயாரின் பீடத்திலேயே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது சிறப்பு. ஸ்ரீ சூக்த மந்திரத்தில் இடம்பெறும் ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஓர் யந்திரம் உண்டு. இங்கு கருங்கல் பீடத்தில் யந்திரங்கள் ஸ்தாபிக்கப்பட்டு மரகதவல்லியை மூலவராகப் பிரதிஷ்டை செய்திருப்பது விசேஷம்.
மகாவிஷ்ணு இத்தலத்தில் ராமர் போல் காட்சி தந்ததால், தாயார் சீதா பிராட்டியாகக் கருதப்படுகிறாள். உற்சவர் கஜலட்சுமி தாமரையில் அமர்ந்து காட்சியளிக்கிறாள். தாயார் சன்னிதியில், லட்சுமணன் ஒளி தரும் விளக்கை தம் சிரசில் தாங்கி, பாம்பு வடிவில் காவல் புரிவதாக ஐதீகம். அந்த விளக்கில்தான் பக்தர்கள் நெய்விட்டு தீபத்தை பிரகாசிக்கச் செய்கின்றனர்.
மகாலட்சுமி தாயார், சீதாதேவியாகவும் மகாவிஷ்ணு ஸ்ரீராமராகவும் இத்தலத்தில் அருள்பாலிப்பதற்கு ஒரு புராணக்கதை சொல்லப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான மரீஷி மகரிஷிக்கு ஒருசமயம் ராமாவதாரத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. ‘மகாவிஷ்ணு எதற்காக மனித அவதாரம் எடுக்க வேண்டும்? இறை அவதார மென்றால் தமது மனைவியை ராவணன் கவர்ந்து செல்ல ஏன் விடவேண்டும்?’ என பல கேள்விகள் ஏழுந்தன. இதை மகாவிஷ்ணுவிடமே கேட்க எண்ணி, அவரை நோக்கி இத்தலத்தில் தவமிருந்தார். தவத்தை மெச்சி காட்சி தந்த மகாவிஷ்ணுவிடம் தமது ஐயத்தை எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மகாவிஷ்ணு, “ராமா வதாரம் என் மீது அன்பு கொண்டவர்களுக்கு அருள் புரிவதற்காகவே எடுக்கப்பட்டது. ‘பிள்ளைகள் பெற்றோரின் சொல்லை மதித்து நடக்க வேண்டும், சகோ தரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மருமகள் தனது புகுந்த வீட்டில் அனுசரணையாக நடக்க வேண்டும். கணவனது சொல்லை எந்த சூழ்நிலையிலும் மீறக்கூடாது, மைத்துனர்கள் தமது அண்ணியிடம் எந்த முறையில் பழக வேண்டும்’ என, சராசரி குடும்ப வாழ்க்கையின் நன்னடத்தைகளை உணர்த்து வதற்காகவும் இந்த அவதாரம் நிகழ்ந்தது” எனக் கூறி பச்சைநிற மேனியராக ராமரைப் போலவே மகரிஷிக்குக் காட்சி தந்தார். தமக்கு அருள்புரிந்தது போல அனைவருக்கும் அருள்புரிய வேண்டினார் மகரிஷி. அதன்படி இத்தலத்தில் மகாவிஷ்ணு அருள்புரிந்து வருகிறார் என்பது தலவரலாறு.
பாற்கடலில் மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷன் அப்போது லட்சுமணனாக அவதரித்திருந்ததால், அவரும் அப்போது தமது சுயரூபமான நாக வடிவிலேயே காட்சி தந்தார். அப்போது மகாவிஷ்ணுவிடம், இப்பிறவியிலும் பெருமாளைத் தாங்கும் பாக்கியத்தைத் தமக்குத் தந்தருளும்படி ஆதிசேஷன் வேண்ட, நாகத்தின் தலைமீது பெருமாள் ஜோதி வடிவில் காட்சி தந்தார். இதன் அடிப்படையில் தான் தாயார் சன்னிதியில் நாகதீபம் வைக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷன் நாகமாக இருக்க, அதன் தலைக்குமேல் ஒரு விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண, புத்திர, நாக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு, தை வெள்ளிக் கிழமைகளில் தாயாருக்கு நடைபெறும் திருமஞ்சனத் தையும், ஊஞ்சல் சேவையையும் தரிசித்தால் வறுமை, பிணி ஒழியும்.
பிராகாரத்தில் தனியாக நாக சன்னிதியும் இருக்கிறது. ஒருமுறை பிரம்மா, சரஸ்வதியை அழைக்காமல் யாகம் செய்தபோது, அவள் அசுரர்களை அனுப்பி யாகத்தை தடை செய்தாள். விஷ்ணு, ஜோதியாக நின்று பிரம்மாவின் யாகம் பூர்த்தியடைய உதவினார். அப்போது ஜோதி வடிவில் காட்சி தந்த மகாவிஷ்ணு, இத்தலத்திலும் ஜோதி வடிவில் காட்சி தருகிறார் என்பது ஐதீகம்.
மகாவிஷ்ணு இத்தலத்தில் மரகதப் பச்சை மேனியராக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். புதன் கிரகத்தின் நிறம் பச்சை. அவருக்குரிய அதிதேவதை மகாவிஷ்ணு. எனவே, பச்சை வண்ணனாகக் காட்சி தரும் இவருக்கு, பச்சை நிற வஸ்திரம் சாத்தி, துளசி அர்ச்சனை செய்து வழிபட்டால் புதன் கிரகத்தால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை.
செல்லும் வழி
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கம்மாளத் தெருவில் உள்ளது கோயில்.
தரிசன நேரம்: காலை 8 மணி முதல் 11 வரை. மாலை 4 மணி முதல் 7 வரை.
தொடர்புக்கு : +91- 44 - 2722 9540.

 

Comments