பாடலாத்ரி நரசிம்மர்

ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் சிவபெருமான் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவதைக் கண்டிருப்போம். ஆனால், ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் மூலவருக்குத் திருமஞ்சனம் நடைபெறும் பெருமாள் கோயில் வியப்பானதுதானே! அப்படி சிறப்புப் பெற்ற பெருமாள் பாடலாத்ரி நரசிம்மர்; தலம் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள சிங்கப்பெருமாள்கோவில்.
‘பாடலம்’ என்ற சொல்லுக்கு சிவப்பு; ‘அத்ரி’ என்றால் மலை எனப் பொருள்படும். நரசிம்மப் பெருமாளின் சிவப்பேறிய கண்களில் கோபம் கனலாக வீச, இங்குள்ள மலையில் தரிசனம் தந்ததால் ‘பாடலாத்ரி’ என இவ்வூருக்குப் பெயர். இது பல்லவர் கால குடைவரைக் கோயில்.
பொதுவாக, நரசிம்மர் கோயில்களில், பெருமாள் இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்ட கோலத்திலேயே தரிசனம் தருவார். ஆனால், இத்தலத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மர், வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்ட கோலத்தில் மிகப் பெரிய மூர்த்தமாக அருள்பாலிக்கின்றார். பின்னிரு கரம் சங்கு, சக்கரத்தைத் தாங்க, முன் வலது கரம் அபயம் நல்க, இடது கரத்தைத் தொடை மீது வைத்து, மூன்று கண்களுடன் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். தீபாராதனை நிகழும்போது, திருமண்ணை சற்றே நகர்த்தி, ‘நேத்திர தரிசனம்’ செய்விப்பார்கள். அதைப் பார்க்கும்போது உடலில் சிலிர்ப்பு ஊறும். தாயார் அஹோபிலவல்லி.
தாயார், ஆண்டாள் ஆகியோரின் சன்னிதிகள் கிழக்கு நோக்கியும், விஷ்வக்ஸேனர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. கருடன், ஆஞ்சநேயருக்கு தனித்தனி சன்னிதிகளும் உள்ளன. கோயிலின் முகப்பில், சுதை வடிவில் உள்ள தசாவதாரக் காட்சிகள் மனதைக் கவர்கின்றன.
உற்சவர் பிரகலாதவரதன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பிரணவகோடி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். மூலவர் நரசிம்மரை வலம் வர நினைத்தால், சிறிய மலைக்குன்றினையும் சேர்த்தே வலம் வரவேண்டும்.
ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் பக்தர்கள் இங்கு கிரிவலம் வருகின்றனர். இது மட்டுமின்றி, மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரதசப்தமி நாட்களில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுவது இக்கோயிலின் சிறப்பம்சம். பன்னிரு ஆழ்வார்களும் இக்கோயிலில் மூலவராகவும், உற்சவராகவும் அருள்பாலிக்கின்றனர்.
ஜாபாலி எனும் மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டி, இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு பிரதோஷ வேளையில் அவருக்குத் தரிசனம் தந்தார். அதனாலேயே இத்தல நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
கோயிலின் பின்புறம் உள்ள அழிஞ்சல் மரம் மிகவும் விசேஷமானது. திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க நினைப்போர் இம்மரத்துக்கு சந்தனம், குங்குமம் பூசி, நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர். திருவாதிரை, சுவாதி நட்சத்திரக்காரர்கள், ராகு திசை நடப்பவர்கள், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலில் வழிபாடு செய்தால் நன்மை ஏற்படும் என்பதும் நம்பிக்கை.
தவிர, கடன் தொல்லை நீங்க, வழக்குகளில் வெற்றி பெற, செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்ட திருமணத்தடை விலகவும் இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள், பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி, நரசிம்மர் ஜயந்தி, ராமானுஜர் ஜயந்தி, வைகாசியில் சுவாதிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் துவங்கி பத்து நாட்கள் பிரமோற்ஸவம், ஆடிப்பூரம், ஆவணியில் பவித்ரோற்சவம், கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி, ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக் கார்த்திகை, தை சங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மாசியில் ஐந்து நாட்கள் தெப்போற்சவம், பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
செல்லும் வழி
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் தாம்பரத்திலிருந்து 20 கி.மீ., சிங்கப்பெருமாள்கோவில். பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் கோயில்.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 12 வரை. மாலை 4.30 மணி முதல் 8.30 வரை.
தொடர்புக்கு : +91- 44-2746 4325 / 2746 4441.

Comments