அட்டபுயகரப்பெருமாள்

காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பிகள் வீதியில் உள்ளது அட்டபுயக்கரப்பெருமாள் கோயில். திருமால் எட்டு கைகளுடன் ஒவ்வொன்றிலும் ஆயுத மேந்தி அருள்புரியும் தலமிது. பிரம்மாவின் யாகத்தை அழிக்கும் நோக்குடன் காளியைதேவியை ஏவினாள் சரஸ்வதிதேவி. காளியை அடக்க, தமது எட்டு திருக்கரங்களிலும் எட்டு விதமான ஆயுதங்களை ஏந்தி, ஆதிகேசவன் எனும் பெயரில் திருமால் நின்ற தலம் இது.
பெருமாள் வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவையும், இடது நான்கு திருக்கரங்களில் சங்கு, வில், கேடயம், கதை ஆகியவையும் கொண்டு அருள்பாலிக்கிறார். பொதுவாக, பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவு வாயில் ஒரு திசை நோக்கியும், சொர்க்கவாசல் வேறொரு திசை நோக்கியும் இருக்கும். ஆனால், இங்கு சொர்க்கவாசலும், கோயிலின் நுழைவு வாசலும் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பம்சம். வீடு கட்ட, விளை நிலங்களை வாங்க நினைப்பவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இத்தல பெருமாளை வழிபட்டு பலனடைகிறார்கள்.

மூவர் ஒரே சன்னிதியில்
பெரியகாஞ்சிபுரம் அன்னதானக்கூடம் சாலைத் தெருவுக்குப் பின்புறம் உள்ள மகா காளேஸ்வர் அனந்தபத்மநாபர் திருக்கோயிலில், பெருமாள், லட்சுமி, சிவபெருமான் மூவரும் ஒரே சன்னிதியில் அருள்புரிகின்றனர். ஒருசமயம், கைலாயத்தில் சிவனும், பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்த போது, மகாவிஷ்ணு அங்கு வந்தார். நடுவர் பொறுப்பு அவரிடம் விடப்பட்டது. விளையாட்டில் பார்வதி வென்றாள். ஆனால், சிவனே வென்றதாகப் பொய் கூறிவிட்டார் மகாவிஷ்ணு. அதனால் கோபமுற்ற பார்வதி, தவறான தீர்ப்பு வழங்கிய திருமால், பிளவுபட்ட நாக்குடன் பாம்பாக மாறும்படி சபித்தாள்.
சாப விமோசனமாக பூலோகம் சென்று, காஞ்சி நகரில் அருள்பாலிக்கும் சிவனை பூஜித்தால் சாபம் நீங்கும் என்றாள். அதன்படி, திருமாலும் காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். அவரே, இத்தலத்தில் அனந்தபத்மநாபர் என்னும் திருநாமத்துடன் சயனக்கோலத்தில் லட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். சிவன் லிங்க வடிவில் மகாகாளேஸ்வர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். மூவரும் ஒரே சன்னிதியில் காட்சி தருவது சிறப்பு. வாய், நாக்கு, தொண்டை தொடர்பான நோயுள்ளவர்கள் அனந்த பத்மநாபரை பிரார்த் தனை செய்ய நலம் பெறலாம்.
 

Comments