ராமனும் நரஸிம்மனும்!

ராமாவதாரமும், நரஸிம்மாவதாரமும் வெவ்வேறு காலங்களில் ஏற்பட்டவை. ஆனால், ராமனும் நரஸிம்மனும் ஒன்றே என்று பெரியாழ்வார் ஈடுபடுகிறார்.

கதிராயிரம் இரவி கலந்தெறித்தால் ஒத்த நீள்முடியன்

எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்

அதிரும் கழற்பொருதோள் இரணியனாகம் பிளந்து, அரியாய்

உதிரம் அளைந்த கையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர்

என்பது பெரியாழ்வார் வாக்கு.

பெண்ணுக்கு ‘இடம்’ (அதாவது, இடப்பக்கம்) தரலாகாது என்பது உலக நியதி. அதற்கு மாறாக ராமனும், நரஸிம்மனும் ஸ்ரீயை, லக்ஷ்மியை இடதுபுறம் கொண்டுள்ளனர். ஏன்? சீதையைவிட பிரியமான லட்சுமணனுக்கும், லக்ஷ்மியை விட இனிய ப்ரஹ்லாதனுக்கும் வலம் தருவதற்காகவே. (வலம் - நன்மை, வலப்பக்கம்.)

ஜனஸ்தானத்தில் கர, தூஷணரை வென்று, பலாஸமரம் பூத்தாற்போல, உதிரம் பெருகும் உடலோடு நின்றவனைக் கண்டபிறகே, சீதைக்கு அவனுடைய வீரம் மனத்தில் பட்டது என்கிறார்கள் பெரியவர்கள். வீரபத்தினி ரத்தத்தையும், நிணத்தையும் பாராது அவனைத் தழுவினாள் என்கிறார் வால்மீகி.

ஹிரண்ய வதம் ஆனபின், உதிரம் அளைந்த கையோடு, ‘வேறு எதிரி ப்ரஹ் லாதனுக்கு உண்டோ’ என்று குறையாக் கோபத்தோடு இருந்தானாம் நரஹரி. மஹாலக்ஷ்மி அன்புடன் அணைத்து பெருமானை சாந்தப்படுத்துகிறாள். பிரம்மா கொடுத்த வரத்தைக் காப்பதற்காக வந்தவை, இந்த இரு அவதாரங்களும்.

முதல்நாள் போரில் ராவணனுக்கு ஓய்வு கொடுத்து, அவன் உள்ளத்தைத் தொடுகிறான். நாராயணன் என்று உள்ளம் உணர்த்தியும் விதியின் வலிமையால் மடிகிறான் ராவணன். ஹிரண்யனைப் பிடித்தவுடன் விட்டு விடுகிறான் பகவான். தேவர்கள் அஞ்சினர். ப்ரஹ்லாதன் கூறியபடி தூணிலிருந்து வெளிப்பட்ட தன் ப்ரபாவம் அறிந்து சரணடைவானோ என்று நரசிம்மன் எண்ணினானாம். உள்ளம் தொட்டு இரணியனை ஒண்மார்பகலம் பிளந்திட்ட கைகள் - என்கிறார் பெரியாழ்வார்.


விபீஷணைனைச் சேர்த்துக் கொள்வதை அனைவரும் எதிர்க்கும்போது, ராமன் “எல்லா அரக்கரும் வந்தாலும் நம் நகத்துக்குப் பற்றுமோ? இரணியனை அழித்தது நகங்களால் அன்றோ?” என்று தன் சர்வசக்தித்வத்தை வெளியிடுவதாகவும் ஸ்வாமி தேசிகன் ‘அபயப்ரதான ஸார’த்தில் கூறுகிறார்.

காலங்கள் வேறு எனினும் இருவருமே அபயப்ரதான மூர்த்திகள். உள்ளம் தொட்ட மூர்த்திகள். நரஸிம்மனை மட்டுமல்ல; ராமனையும் பிரதோஷ காலத்தில் சேவிக்கலாம்.

Comments