புனித பூமியில் மனித தெய்வங்கள்

அந்த தம்பதி, பண்டரிபுரத்து பாண்டுரங்கனின் பரம பக்தர்கள். தினமும் விடிந்ததும் உணவு சமைத்து, ஆலயத்துக்கு எடுத்துச் சென்று, இறைவனின் திருவடியில் நைவேத்தியம் செய்துவிட்டு, அதனைப் பிரசாதமாக உட்கொள்வது வழக்கம்!
ஒருநாள்... கணவன் வெளியே எங்கேயோ சென்றுவிட, நேரமாகிவிட்டதே என்று பதைபதைத்த மனைவி, தன் னுடைய ஐந்து வயது மகனிடம் உணவைக் கொடுத்து, இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வரச் சொல்லிக் கோயிலுக்கு அனுப்பி வைத்தாள். அதன்படி, கோயிலுக்குள் வந்த சிறுவன், பாண்டுரங்கனின் முன் உணவை வைத்தான். 'இந்த உணவைக் கடவுள் சாப்பிடப் போகிறார்' என்று சந்தோஷப்பட்டான். ஆனால், பாண்டுரங்கன் வரவில்லை. அந்த உணவு அப்படியே இருந்தது. ஒருகட்டத்தில், அழுதேவிட்டான். 'நான் கொடுத்தால் சாப்பிட மாட்டாயா?' எனக் கதறினான். ம்ஹூம்... பாண்டுரங்கன் வரவே இல்லை.
'என் அப்பா கொடுத்தால் சாப்பிடு வாய்; நான் தந்தால் சாப்பிட மாட்டாயா?' என்று கேட்டுக்கொண்டே, சந்நிதி மேடையில் உள்ள கல்லில் தலையை முட்டிக்கொண்டான். அப்போது, பாண்டுரங்கனின் ஆடையும் ஆபரணங்களும் மெள்ள அசைந்தன. தலை நிமிர்த்திப் பார்த்த சிறுவன், மகிழ்ந்து போனான். அங்கே... பாண்டுரங்கன் நின்றிருந்தான். சிறுவன், தான் கொண்டு வந்த உணவை எடுத்து ஊட்ட, அதனைக் கனிவுடன் ஏற்றான் பாண்டுரங்கன். அது மட்டுமா?! சிறுவனுக்கு உணவூட்டி மகிழ்ந்தான்; மகிழ்வித்தான்!
உற்சாகமும் குதியலுமாக வெறும் பாத்திரத்துடன் வீடு திரும்பிய மகனிடம், ''உணவு எங்கே?'' என்று கேட்டனர் பெற்றோர். ''பாண்டுரங்கனும் நானும் சாப்பிட்டுட்டோம்'' என்று சிரித்தபடி பதில் சொன்னான் பிள்ளை. இதை அவனின் பெற்றோர் நம்பவில்லை.
மறுநாள்... அந்தச் சிறுவன் உணவை எடுத்துக்கொண்டு பாண்டுரங்கனிடம் செல்ல, அவனைப் பின்தொடர்ந்தனர் பெற்றோர். பிள்ளை கொஞ்சலும் கெஞ்சலுமாக உணவருந்த அழைத்ததையடுத்து, பாண்டுரங்கன் அங்கே காட்சி தர... அதிர்ந்து நின்றனர் அந்தத் தம்பதி! இறைவனுக்கு அவனும், அவனுக்கு இறைவனுமாக உணவூட்டுவதைக் கண்டு, மனம் பூரித்தனர்; குழந்தையை வாரி, ஆனந்தக் கூத்தாடினர்.
பிஞ்சு வயதிலேயே இறையருள் பெற்ற அந்தக் குழந்தை யார் தெரியுமா?
து கி.பி.1270-ஆம் வருடம். மகாராஷ்டிர மாநிலம், நரஸ்வமனி எனும் கிராமத்தில், தையல் தொழில் செய்து வந்த தாமாஷேட்டியும் அவரின் மனைவி குணாபாயும் பண்பும் பக்தியும் நிறைந்தவர்கள். நீண்டகாலமாகப் பிள்ளை பாக்கியம் இல்லாததுதான் குறை! பாண்டுரங்கனைத் துதித்து, குழந்தை வரம் கேட்டுக் குமுறிய தாமாஷேட்டியின் கனவில் தோன்றிய இறைவன், 'நாளைக் காலையில் ஒரு மகனைப் பெறுவாய்' என அருளினார். மறுநாள் காலை... நதியில் நீராடிய தாமாஷேட்டியின் அருகில், பெரிய சிப்பி ஒன்று மிதந்து வந்தது. அதில் அழகிய முத்தெனத் தவழ்ந்தது ஆண் குழந்தை! முகமும் மனமும் பிரகாசம் அடைய, குழந்தையை தூக்கிக் கொண்டு, வீட்டுக்கு ஓடிவந்தார். அந்தக் குழந்தைக்கு 'நாமா' எனப் பெயரிட்டு வளர்த்தனர். பின்னர், பண்டரிபுரத்துக்கு வந்து குடியேறினர்.
சிறு வயதிலிருந்தே பாண்டுரங்கன் மீது பக்தியுடன் இருந்தான் நாமா. ஒழுக்கமான வாழ்க்கை, கொடைத்தன்மை ஆகிய உயர்ந்த குணங்களும் அவனுக்குள் வளர்ந்தன! ஒருமுறை, தன் கையிலிருந்த ரொட்டித் துண்டைப் பறித்துக்கொண்டு ஓடிய நாயை விரட்டிச் சென்று, அதற்கு நெய் தடவிய ரொட்டியை ஊட்டி மகிழ்ந்தான் நாமா. அவனது பேதமற்ற இந்த உயர்ந்த உள்ளத்தை அறிந்துதான், நாமா அளித்த உணவை பாண்டுரங்கன் சாப்பிட்டான் போலும்! அதையடுத்து, நாமா.. அனைவராலும் நாமதேவர் எனப் புகழப்பட்டார்.
நாமதேவர் அளித்த உணவை இறைவன் ஏற்றுக்கொண்ட இடம் 'நாம தேவ் பாயரி'. (நாம தேவரின் படிக்கட்டு) எனப்படுகிறது. பாண்டுரங்கன் ஆலயத்தில், இன்றைக்கும் பக்தியுணர்வுடன் வணங்கப்படும் இடம் இது!
11 வயதில், நாமதேவருக்கும் ராஜாபாய்க்கும் திருமணம் நடந்தேறியது. இவர்களுக்கு, நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். இல்லறமும் பக்தியும் ஒருசேர செழிக்க... தான-தருமங்களிலும் ஈடுபட்டனர். நாமதேவரின் பக்தி, கொடைத் தன்மை ஆகியவற்றால் தேசமெங்கும் அவரின் புகழ் ஓங்கியது.
ராட்டிய தேசத்தில் வாழ்ந்த மற்றொரு மகான், ஞானதேவர். இவர், நாமதேவரின் புகழால் ஈர்க்கப்பட்டு, பண்டரி புரம் வந்தார்; அவரின் திருவடியைப் பணிந்தார். பக்தி யும் ஞானமும் கொண்ட கூட்டணி அங்கே உருவானது! இருவரும் இணைந்து பல தலங்களுக்குச் சென்றனர்; ஆன்மிகத்தை மக்களிடம் பரப்பினர். உயரிய பக்தியையும் அரிதான ஞானத்தையும் எளிய முறையில் கவிதைகளாகப் புனைந்து, பஜனைப் பாடல் களாகப் பாடினர். வழியில்... ஜோதிர்லிங்கத் தலமான ஸ்ரீநாக நாதர் ஆலயத்தில், சிவனாரை வழிபட்ட பிறகு, பாண்டுரங்கன் குறித்த பஜனைப் பாடல்களைப் பாடினார் நாமதேவர். இதில் கரைந்து உருகியது கூட்டம். அப்போது அர்ச்ச கர்கள், 'சிவன் கோயில் வாசலில் இருந்துகொண்டு ஹரிபஜனை செய்வதா?' என ஆவேசத்துடன் நாமதேவரை அடித்துத் துரத்தினர். துக்கத்துடன் கோயிலின் பின்புறத்துக்கு வந்த நாமதேவர், கண்ணீர் வழிய, மேலும் உருக்கமாகப் பாடத் தொடங்கினார்.
அப்போது... கிழக்கு நோக்கிய அந்த ஆலயம், மெள்ள நாமதேவரை நோக்கித் திரும்பியது. அதைக் கண்டு நெகிழ்ந்தார் நாமதேவர். 'பரம்பொருளின் அருளுக்குப் பாத்திரமாகிவிட்டேன்' என எண்ணிப் பூரித்தார். இன்றைக்கும்... திசை திரும்பிய நிலையில் ஆலயம் இருப்பதைக் காணலாம்!
பஞ்சாப் தேசத்தில் நாமதேவர் யாத்திரை மேற்கொண்டபோது, குர்தாஸ்பூரின் மன்னன் இவரிடம், 'ஏதேனும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டு' என்றான். 'இறைவனின் விருப்பத்துக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டேன்' என்று மறுத்தார் நாமதேவர். ஆத்திரமுற்ற மன்னன், அவரைக் கொல்வதற்காக மதம் பிடித்த யானையை ஏவினான். ஆனால், நாமதேவர் ஓடவில்லை; ஒளியவில்லை. இருந்த இடத்தில் நின்றபடியே, கண்களை மூடி, பாண்டுரங்க நாமத்தை உச்சரித்தார். படுவேகத்துடன் ஓடிவந்த யானை, நாமதேவர் அருகில் வந்ததும், சட்டென அவரின் பாதத்தில் பணிந்தது. அதைக் கண்டு நெகிழ்ந்த மன்னன், 'இதை விடவா அதிசயம் வேண்டும்' என அவரிடம் மன்னிப்புக் கேட்டான். பிறகு, பஞ்சாபில், சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து, மக்களுக்குப் போதனைகள் பலவும் வழங்கினார் நாமதேவர்.
'அபங்கம்' எனப்படும், கவிநயம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை மராட்டிய மொழியில் இயற்றி, பாண்டுரங்கனின் மகிமையை எடுத்துரைத்தார். ஹிந்தி மற்றும் பஞ்சாபியிலும் பாடல்கள் இயற்றினார். இவரின் 61 துதிப்பாடல்கள், சீக்கியர்களின் புனித நூலான 'குரு கிரந்த சாஹிப்' எனும் நூலிலும் நாமதேவரின் அபங்கப் பாடல்கள் 'நாமதேவ் காதா' எனும் நூலிலும் ஞான தேவருடன் சேர்ந்து பாடிய பாடல்கள் 'தீர்த்தாவளீ ' எனும் நூலிலும் இடம்பெற்றன.
எளிமை, ஆழ்ந்த பக்தி, இறை நாம மகிமை ஆகியவற்றுடன் தான-தருமங்கள் என வாழ்ந்த நாமதேவர், 1350-ஆம் வருடம் முக்தி அடைந்தார்.
இறை நாமத்தை உச்சரிப்பதால் கிடைக்கும் பேரின்பத்தை உணர்ந்தவர்கள், நாம தேவரையும் உணர்ந்திருப்பார்கள்!

Comments