அட்சய திருதியை திருத்தலங்கள் - கோவில்பட்டி

அழகு முருகனின் அற்புத ஆயுதம், வேல்! கருவறையில்... கையில் வேலுடன் காட்சி தரும் கந்தக்கடவுளைத் தரிசித்திருப்போம். ஆனால், மூலவர் சந்நிதியில், கந்தப் பெருமானின் வேல் மட்டுமே உள்ளதைத் தரிசித்தது உண்டா? சொர்ணமலையில் உள்ள ஆலயத்தில், வேல் வடிவில் அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது சொர்ணமலை. இங்கே அழகுற அமைந்துள்ளது ஸ்ரீகதிர்வேல் முருகன் திருக்கோயில். சுந்தரபாண்டிய மன்னனது ஆட்சியின்போது, கடும் பஞ்சத்தில் வாடிய இந்தப் பகுதி மக்கள், 'கந்தா... முருகா' என வேலவனை மனமுருகி வேண்டினராம். அப்போது, சூரியக் கதிர்களுக்கு நடுவில் வேல் வடிவில் காட்சி தந்தார் கந்தக் கடவுள் என்கிறது ஸ்தல புராணம். மலையடிவாரத்தில், சித்தர்களும் ரிஷிகளும் தவம் மேற்கொண்ட குகை ஒன்றும் உள்ளது.
பிறகு, இலங்கையில் உள்ள கதிர்காமத்தில் இருந்து பிடிமண் எடுத்து வந்து, இங்கே ஆலயம் அமைத்து, மூல சந்நிதியில் அழகிய வேலைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினராம் மக்கள். எனவே, இந்த ஆலயத்துக்குக் கதிர்வேல் முருகன் கோயில் என்றே பெயர் அமைந்ததாம்.
சுமார் ஆறடி உயரத்தில், ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேல் வடிவில் இருந்தபடி, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் ஸ்ரீகதிர்வேல் முருகன். ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேதராக... உற்ஸவ மூர்த்தமாகவும் அழகு ததும்பக் காட்சி தருகிறார் முருகப்பெருமான்.
தொழில் பிரச்னை மற்றும் சரிவு என அவதிப்படுவோர், இங்கு செவ்வாய்க் கிழமைகளில் வந்து, மஞ்சள் பட்டு சார்த்தி, செவ்வரளி மாலை அணிவித்து, ஆறு நெய்த் தீபமேற்றி வணங்கினால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்; லாபம் அதிகரிக்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை! மாதந்தோறும் கிருத்திகையில் வேலுக்கு அன்னாபிஷேகம் சிறப்புற நடை பெறுகிறது. அபிஷேகித்த அன்னத்தைப் பிரசாத மாகத் தருவர். பிள்ளைப் பாக்கியம் இல்லாத பெண்கள் இதனைச் சாப்பிட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.
வைகாசி விசாக நாளில்... வேலுக்கு 21 வகையான அபிஷேகம் மற்றும் மல்லிகை, பிச்சிப்பூ, செவ்வரளி, வெள்ளரளி, செவ்வந்தி, முல்லை ஆகிய ஆறு மலர்களால் அர்ச்சனை ஆகியவை விமரிசையாக நடந்தேறும்.
வேலுக்கு 101 எலுமிச்சை பழ மாலை சார்த்துவர், பக்தர்கள். மாலையில், உற்ஸவர் மயில்வாகனத்தில் வீதியுலா வரும் அழகே அழகு! பௌர்ணமியில் இங்கே கிரிவலம் வந்து பிரார்த்திப்பதும் சிறப்பான ஒன்று.
இந்த முறை விசாகமும் பௌர்ணமியும் ஒரேநாளில் வருவது, விசேஷம். இந்த நாளில், மூன்று முறை கிரிவலம் வந்து, வேல் ரூபமாக நிற்கும் வேலவனை வணங்கினால், நினைத்தது நிறைவேறும்; தொழிலில் விருத்தி ஏற்படும்; குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர் என்கின்றனர் பக்தர்கள்.

Comments