தித்திக்கும் திவ்விய பிரபந்தம்!

க்தி இலக்கியத்தை வளர்த்ததில், ஆழ்வார்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. தலங்கள் பலவற்றுக்கும் சென்று, ஸ்ரீபெருமாளை உருகி உருகிப் பாடினர்; இதனை மங்களாசாசனம் என்பார்கள். ஆனால் காலப்போக்கில் இந்தப் பாடல்கள், அடுத்தடுத்த தலைமுறைக்குக் கிடைக்கவில்லை. தேனினும் இனிய இந்தப் பாடல்களைத் தேடித் தேடி அலைந்து, சேகரித்து, நமக்குத் தந்தருளியவர் ஸ்ரீநாதமுனிகள்! நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என அவற்றை, இன்றைக்கும் போற்றிக் கொண்டாடுகிறோம்.

ஸ்ரீநாதமுனிகளால், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் நமக்குக் கிடைத்தது போல், ஸ்ரீஅரங்கனுக்கு, அவனை மகிழ்விப்பதற்கான காரியம் ஒன்றையும் செய்தார் நாதமுனிகள். அதுதான், அரையர் சேவை! அரையர் என்றால் அரசர் என்று பொருளாம். நாலாயிர திவ்விய பிரபந்த பாடல்களை இயல்-இசை- நாட்டியம் எனத் தந்தார். அவர்கள், இதில் ராஜாவாகத் திகழ்ந்ததால் இந்தப் பெயர் அமைந்ததாம்! இவற்றுக்கு வித்திட்டவர், ஸ்ரீநாதமுனிகள்!
காட்டுமன்னார்கோவிலில், சாதாரண பட்டாச்சார்யரின் குடும்பத்தில் அவதரித்த ஸ்ரீநாதமுனிகள், கும்பகோணம் ஸ்ரீஆராவமுதப் பெருமாளின் சந்நிதியில் மனமுருகி பிரார்த்தித்தபோது, அங்கே பக்தர் ஒருவர், 'ஆரா அமுதே! அடியேன் உடலம் அன்பால் அன்பாயே...’ எனத் துவங்கும் பாடலை மெய்யுருகப் பாடினார். இந்தப் பாடலில், 'ஆயிரத்தில் பத்து...’ எனும் வரிகளைக் கேட்டதும், உள்ளேயரு ஒளி பரவியதை உணர்ந்து சிலிர்த்தார் ஸ்ரீநாதமுனிகள். 'இன்னும் ஆயிரம் பாடல்களா?’ என ஆச்சரியமும் ஆர்வமும் மேலிட்டது அவருக்கு! அந்தப் பாடல்களைத் தேடச் சொல்லி மனம் கட்டளையிட்டது. அப்போது அங்கிருந்த ஒருவர், ஸ்ரீமதுரகவியாழ்வாரைப் பற்றிச் சொல்ல, அவரைத் தேடி தெற்கு நோக்கிச் சென்றார் நாதமுனிகள். அங்கே, ஸ்ரீமதுரகவியாழ்வாரின் வம்சாவளியினரைச் சந்தித்து விவரம் கேட்க, ''நம்மாழ்வாரின் திருவிக்கிரகத்துக்கு முன்னே, தாமிரபரணிக்கரையில் இருந்தபடி, 'கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாடலை 12,000 முறை பாடினால், நம்மாழ்வார் திருக்காட்சி தருவார்'' என அருளினர்.
அதன்படி, தாமிரபரணிக் கரையில், நம்மாழ்வாரின் திருவிக்கிரகத்தை வைத்துக்கொண்டு, யோக சக்தி மற்றும் ஆழ்ந்த பக்தியால், இடைவெளியின்றி 12,000 முறை, 'கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாடலை நெக்குருகப் பாடினார் ஸ்ரீநாதமுனிகள். அப்போது அங்கே காட்சி தந்த ஸ்ரீநம்மாழ்வார், 4000 பாடல்களையும் வைணவக் கோட்பாடுகளையும் ஸ்ரீநாதமுனிகளுக்குத் தந்தருளினார். 

இந்தப் பாடல்களை ஓலை நறுக்குகளில் எழுதி எடுத்துக் கொண்டு, வைணவர்களின் தலைமையிடமான ஸ்ரீரங்கத்துக்கு வந்தார். அரங்கனை சேவித்துவிட்டு, 4,000 பாடல்களை இயல், இசை, நாட்டியம் என முறையே பிரித்தார். பிறகு கடும் எதிர்ப்புகளையும் கடந்து, இந்தப் பாடல்களை ஸ்ரீஅரங்கனின் திருவடிகளில் சமர்ப்பித்தார். அன்று முதல், அந்தப் பாடல்கள் 'திவ்விய பிரபந்தம்’ என வைணவப் பெருமக்களா லும் பண்டிதர்களாலும் போற்றப்பட்டன; 'நாலாயிர திவ்விய பிரபந்தம்’ எனக் கொண்டாடப்பட்டன!
''இன்னொன்றையும் செய்தார் ஸ்ரீநாதமுனிகள். தனது மருமகன்களான மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் ஆகியோருக்கு இயல்- இசை, நாட்டியம் என திவ்விய பிரபந்தப் பாடல்களை உபதேசித்தார். இவரால்தான், அரையர் இசை எனும் தெய்விக இசை மற்றும் நாட்டிய வழிமுறை வந்தது. அதன்படி, அவர்கள் அரங்கனுக்கு முன்னே ஆடினர்; பாடினர்; ஆடிப்பாடி அரங்கனது மனம் குளிரச் செய்து சேவை செய்தனர்! இன்றளவும் சேவை செய்து வருகிறோம்'' என்று பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் பரத்வாஜ அரையர்.
ஸ்ரீராமானுஜரின் காலத்தில், ஸ்ரீரங்கம் கீழ உத்திர வீதி முழுவதும், சுமார் 700-க்கும் மேற்பட்ட அரையர்கள் இருந்தார்களாம்! இந்த வீதியை 'செந்தமிழ் பாடுவான் வீதி’ என்றே அழைத்தார்களாம். தற்போது, இரண்டு குடும்பத்தார் மட்டுமே உள்ளனராம்.
ஸ்ரீரங்கம் தலத்தில், இன்றைக்கும் அரையர் சேவை சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. திவ்விய பிரபந்த பாடல்களுக்கு அபிநயம் பிடித்து, அரங்கனுக்கு முன்னே அரையர்கள் ஆடும் ஆட்ட-பாட்டத்தைக் காண, நம் துக்கமெல்லாம் பறந்தோடிவிடும்! 
''தனக்காகவும் தமிழுக்காகவும் பாடுபட்ட ஸ்ரீநாதமுனிகளின் பக்தியில் மகிழ்ந்த அரங்கன்,  அவருக்குத் திருக்காட்சி தந்தான்; அப்போது தனது கிரீடத்தையும் கைத்தாளம் ஒன்றையும் வழங்கினான் அரங்கன். அதுமட்டுமின்றி, தனக்கு அளிக்கப்படும் சகல மரியாதைகளையும் இவர்களுக்கு வழங்க வேண்டும்’ என அருளினான் அரங்கன்!'' எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார் மதுசூதனன். இவர், 'அரையர் சேவை’ குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 
''அரங்கன் அன்றைக்கு வழங்கிய கைத்தாளத்தைக் கொண்டே அரையர் சேவை செய்து வருகிறோம். இந்தக் கைத்தாளத்தின் சத்தம், சுமார் 13 நிமிடங்களுக்கு நீடிக்கும். ஸ்ரீரங்கத்தில் திருவிழா எனில், அங்கே அரையராகிய எங்களின் சேவைக்கும் முக்கியமான இடம் உண்டு'' எனப் பெருமிதம் பொங்கச் சொல்கிறார் பரத்வாஜ அரையர். 
இன்னொரு விஷயம்... நாலாயிர திவ்விய பிரபந்தங்களை ஆடிப்பாடுகின்ற அதேவேளையில், பெருமாளின் தசாவதாரங்களையும் அவற்றின் அற்புதங்களையும் அபிநயம் பிடித்து அழகுற விளக்குகின்றனர், அரையர்கள். இதனைக் கண்டு சிலிர்த்துப் போகின்றனர், பக்தர்கள்!
ஸ்ரீரங்கம் திருத்தலத்தின் மிகமுக்கிய விழா... வைகுண்ட ஏகாதசி நன்னாள். ஏகாதசிக்கு முந்தைய பத்து நாளும் (பகல் பத்து), பிந்தைய பத்து நாளும் (இராப்பத்து) என விமரிசையாக நடைபெறும் இந்த நாட்களில், ஸ்ரீரங்கநாத பெருமாளுக்கு முன்னே, அரையர்கள் ஆடிப்பாடும் வைபவம் சிறப்புற நடைபெறும்.
நிறைவு நாளில், ஆழ்வார் மோட்சம் எனப்படும், பெருமாளின் திருவடியில் ஆழ்வார் இரண்டறக் கலக்கின்ற வைபவம் விமரிசையாக நடைபெறும்! 
 
அரையர்களுக்கு அருளிய தலங்கள்
✦ திருக்கண்ணபுரத்தில்..!
அந்தக் காலத்தில், ஸ்ரீரங்கத்துக்கு நிகரானதாகத் திகழ்ந்ததாம் திருவாரூர் - திருக்கண்ணபுரம் திருத்தலம். இந்தத் தலத்தை, சைவத்தில் பற்றுக்கொண்டிருந்த சோழ மன்னன் ஒருவன் இடிக்கத் திட்டமிட்டான். இதையறிந்த அரையர் ஒருவர், கதறிக் கண்ணீர் விட்டபடி, ஆவேசமும் கோபமும் பொங்க, பெருமாளை நோக்கி தனது கைத்தாளத்தை வீசினாராம். பிறகு ஆலயம் காக்கப்பட்டதாம்! இன்றைக்கும் திருக்கண்ணபுரத்துப் பெருமாளின் திருமுகத்தில், அந்த வடுவைக் காணலாம்!
✦ தொட்டியத்தில்..!  
நாமக்கல் அருகேயுள்ளது தொட்டியம். இங்கேயுள்ள திருநாராயணபுரம் பெருமாள் கோயிலுக்குச் சிலர் தீ வைத்தனர். அப்போது ஸ்ரீவேதநாராயண பெருமாளைக் கட்டி அணைத்தபடி தீயிலிருந்து விக்கிரகத்தைக் காப்பாற்றிய அரையர் இறந்துவிட்டாராம்! அந்த அரையருக்கு முக்தி அளித்து அருளினார் திருமால் என்பர்.
✦ திருக்குறுங்குடியில்..!
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி தலத்தில், சேவை சாதித்து வந்த அரையர், தன்னுடைய குழந்தைகளுக்கு தினமும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தை அட்சர சுத்தமாக கற்றுக் கொடுத்து வந்தார். இதை ரசிப்பதற்காகவே பெருமாள், அவரின் வீட்டுக்கு வந்தாராம்! இதில் பொறாமை கொண்ட சிலர், அரையரின் வீட்டுக்குத் தீ வைக்க... அந்த ஊரைவிட்டே சென்றது அரையர் குடும்பம். பிறகு பெருமாள், ஊர் மக்களின் கனவில் வந்து, அரையரின் பெருமையைச் சொல்ல... அவரைத் தேடிச் சென்று மீண்டும் ஊருக்கு அழைத்து வந்தனராம் ஊர்மக்கள்!

Comments