வந்தியம்மை தரிசனம்!

மாணிக்கவாசகப் பெருமானுக்காக சிவனருளால் வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட, வீட்டுக்கு ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தும் பணியில் ஈடுபடவேண்டும் என்று அரிமர்த்தன பாண்டியன் ஆணைப் பிறப்பித்ததும், அப்போது மூதாட்டி வந்தியின் பொருட்டு கூலியாளாக வந்து, பிட்டுக்கு மண் சுமந்து, மன்னனிடம் சிவனார் பிரம்படிபட்டதும் நாமறிந்த திருக்கதை!
பரமனின் முதுகில் விழுந்த அந்த பிரம்படியை உலகின் சகல உயிர்களும் உணர்ந்தன. மன்னனும் உணர்ந்தான்... பிரம்படியின் வலியை மட்டுமல்ல; அன்புக்கு அடிபணிந்து அடியார்தம் நலம் போற்றும் அடிமுடி காண இயலாத அண்ணலின் அருட் கருணையையும்தான்!
அதை, இந்த கலியுகத்தில் நாமும் உணர்ந்து உய்வடைய வேண்டும் என்பதற்கோர் அடையாளமாகத் திகழ்கிறது, அருள்மிகு பிட்டு சொக்கநாதர் திருக்கோயில். மதுரை ஆரப்பாளையம், பிட்டு தோப்பு பகுதியில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். இந்த பழைமையான திருக்கோயிலில் வருடம்தோறும் ஆவணி மாதம், பூராட நட்சத்திரத்தில் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது பிட்டுத் திருவிழா. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின்  கீழ் நடைபெற்று வந்த  இந்தத் திருவிழாவை, 1875ம் ஆண்டுக்கு பிறகு வாணிய வைசிய செட்டியார் சமூகத்தினர் எடுத்து சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்தத் திருவிழாவும், விழாவின் பிட்டுப் பிரசாதமும் இந்தப் பகுதியில் வெகுப் பிரசித்தம்.
இந்தக் கோயிலின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பது இங்கு அமைந்துள்ள வந்தியம்மை சந்நிதி. ஆலவாய் அண்ணலுக்கு அன்புடன் பிட்டமுது அளித்த இந்த அம்மையை வழிபடுவது அவ்வளவு விசேஷம் என்கிறார்கள் பக்தர்கள். கையில் ஊன்றுகோலுடன் காட்சி தரும் வந்தியம்மைக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால், திருமணம் மற்றும் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மீனாட்சியம்மையைத் தரிசிக்க மதுரைக்குச் செல்லும் அன்பர்கள், இந்தத் திருக்கோயிலுக்கும் சென்று, பிட்டு சொக்கநாதரையும் அம்பாளையும் தரிசிப்பதோடு, வந்தியம்மையையும் வழிபட்டு வாருங்கள்; அம்மையின் ஆசியுடன் ஆண்டவனின் அருளையும் ஒருசேரப் பெற்றுச் சிறக்கலாம்.

Comments