கண் புருவப் பூட்டு

தான் பெற்ற சுகத்தை, ஆன்ம பலத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் வேண்டுதலுமாகும். சிறு வயதிலிருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று நமக்காக அவர் அருளிய பாடல்களே திருவருட்பா" என்றார் ‘கண் புருவப் பூட்டு’ என்ற தம் சொற்பொழிவில் மு.பாலசுப்பிரமணியம்.
வள்ளலார் இறக்கவில்லை. அவர் இன்றும், என்றும் நம்மோடு இருந்து கொண்டே தான் இருக்கிறார்; இருக்கப் போகிறார். அவர் இறக்கவில்லை எனச் சொல்ல நாம்தான் தவறிவிட்டோம். அனைத்தும் அடங்கிய அருட்களஞ்சியமான ‘திருவருட் பாவை’ ஆழமான கருணையோடு நமக்கு அருளிய பெருமான் இல்லையா அவர்? உண்மையை உரைக்க வந்த இறை நூல் அது.
சாதி, மதம், சமயம், குலம், கோத்ரம், மொழி, தேசம் என எந்த பேதமும் இல்லாமல் எல்லோரும் சமமாக வாழணும்; நமக்குள் இருக்கும் பிளவுகளை ஒழிக்கணும் என நினைத்தவர் அவர். ‘மரணம் எப்படி வருகிறது? அஜாக் கிரதையால்தான் மனிதனுக்கு மரணம் என்பதே வருகிறது’ என்கிறார் வள்ளல் பெருமான். இருட்டுலகில் மடிந்து கொண்டிருக்கும் மனிதர்களை ஒளி நெறிக்கு அழைத்து வர அவர் உருவாக்கியதே ‘சுத்த சன்மார்க்கம்.’ மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவ காருண்ய வழி நடத்தி அவனை தெய்வ நிலையை அடையச் செய்விப்பதே இந்த சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்கம். அதென்ன?
சூரியோதயத்துக்கு முன் எழுந்து, விபூதி தரித்து, சிறிது நேரம் உட்கார்ந்து இறைவனை தியானம் செய்ய வேண்டும். பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் உட்கொள்ள வேண்டும். கிழங்கு வகைகளை தவிர்த்திட வேண்டும். அதில் கருணைக் கிழங்கை மட்டும் உட்கொள்ளலாம். பழ வகைகளில் பேயன் வாழைப் பழத்தையும், ரஸ்தாளி வாழைப் பழத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையில்லாத எண்ணங்களைக் கொண்டு மனதை வருத்தக் கூடாது. அதைப் போலவே கடும் வெயில், இளவெயில், மழை, குளிர் காற்று, பனி என இவை நம் உடம்பை வருத்தாமல் காத்துக் கொள்ள வேண் டும் என்கிறார் வள்ளலார் பெருமான். கத்திப் பேசுவது, வேகமாக நடப்பது, வழக்கிடுவது, சண்டையிடுவது கூடவே கூடாது. எந்த விதத்திலும் பிராண வாயு அதிகம் செலவாகாதபடி நடந்துகொள்ள வேண்டும் என, தனி அக்கறையைக் காட்டியவர் வள்ளலார்.
‘கண் புருவப்பூட்டு’ என வள்ளலார் எதை எடுத்துரைக்கிறார் தெரியுமா? தியானம் செய்யும் முறையை, தவம் செய்யும் முறையை.
இந்த தேகத்தில் புருவமத்தியில், நமது ஆன்ம அறிவு என்கிற கற்பூரத்தில், கடவுள் அருள் என்கிற தீபம் விளங்குவதாகப் பாவித்துப் பார்த்து, அதில் பழகிப் பழகிக் கடவுளிடத்தில் உண்மையாகிய அன்பையும், ஜீவர்களிடத்தில் உண்மையாகிய காருணியத்தையும் இடைவிடாமல் வைத்து, ஓங்காரபஞ்சாக்ஷர ஞாபகஞ் செய்தல் வேண்டும்; சிவபஞ் சாக்ஷர ஞாபகஞ் செய்தல் அவசியம்.
கண் வழியாகத்தான் நம் உயிர் போகும். இந்த கண் வழியாக நாம் யாரைப் பார்க்கிறோமோ அவர்களிடத்தில் எல்லாம் நாம் குறைகளைத்தான் பார்க்கிறோம். அவர்களிடத்தில் இருக்கும் நல்ல குணங்களை நாம் பார்ப்பதே இல்லையே. யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். நமக்கு நல்ல குணங்கள் வந்து, இறையருளுக்குப் பாத்திரமானால்தான் வள்ளலார் நம்மிடம் வருவார்.
இரவு - பகல் என்பதே இல்லாத இந்த கண் புருவங்களுக்கு மத்தியில் பார்த்தோமானால் அதுவே மாடம் மாதிரி தெரியும். அந்த இடத்தில் மனதை நிறுத்தி தியானம் செய்தால் மாடத்துக்கு நடுவில் எரியற விளக்கு மாதிரி நம் உள்ளுக்குள்ளும் ஒரு விளக்கு எரியும். அருள் ஒளி கிடைக்கும் என்பதே வள்ளலார் வாக்கு. அப்படி தவம் செய்து தன் கண்களிலே அருட்பெருஞ்சோதியைக் கண்டவர் வள்ளலார். அங்கே அவர் கற்றதையே ‘சிற்றம்பலக் கல்வி, சாகாக் கல்வி’ என்றார். அதனாலேயே எக்காலமும் சாகாமல் ஓங்கி ஒளிரும் ஒளியின் வடிவம் பெற்றார் அவர்.
அந்நிலையில் அவர் மேனியிலே கற்பூரவாசம் வீசியது. இது இறைவன் அவரோடு கலந்து வெளிப்பட்டு நின்ற தன்மையை நமக்கு உணர்த்துகிறது.
நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே

வள்ளலாரின் வாக்குபடி அனைத்துயிர்களிடத் திலும் கருணை கொள்வோம்.

 

Comments