நம்முடைய ஆழ்வார்!

இந்த உலகில், துன்பங்களில் இருந்து நம்மை விடுவிக்க எண்ணற்ற மகான்கள் அவதரித்துள்ளனர்; உபதேசங்களின் மூலம் நமக்கு நல்லறிவைப் புகட்டியுள்ளனர். இவர்கள் இல்லையெனில், மெய்ஞ்ஞானத்தின் பெருமைகளை நாம் உணர்ந்திருக்கவே இயலாது!
பரமாத்மநி யோ ரக்த விரக்த அபரமாத்மநி.'
அதாவது, பரமாத்மாவிடம் அன்பு கொண்டவன், இறைவனைத் தவிர மற்ற அனைத்திலும் ஆசையை விட்டிருப்பான். இந்தக் கோட்பாட்டினை நமக்கு உணர்த்தியதோடு மட்டுமின்றி, வாழ்ந்தும் காட்டிய மகான்கள் ஏராளம். இவர்களில், வைணவத்தின் முக்கிய நாயகரான நம்மாழ்வாருக்குத் தனி இடம் உண்டு!
ஆழ்வார்கள் என்றால், இறைவனின் மங்கள குணங்களில் ஆழ்ந்தவர்கள் என்று அர்த்தம். அப்பேர்ப்பட்ட ஆழ்வார்களில், திருவரங்கத்தில் குடிகொண்டிருக்கும் அரங்கனாலேயே 'நம்முடைய ஆழ்வார்' எனக் கொண்டாடப்பட்டதால், அவரை நம்மாழ்வார் என்று போற்றுகின்றோம்.
'திருக்குறுங்குடி வாழ் நம்பியே பிறந்தானோ?!' என்று வைணவ உலகமே வியக்கும்படி, திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரியில் (தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது), காரி - உடையநங்கை தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் நம்மாழ்வார். இவர் அவதரித்த திருநாள் - வைகாசி விசாக நன்னாள்!
அழுதுகொண்டே பிறப்பதும், அடுத்தடுத்த தருணங்களில் சிரிப்பதும்தானே மனிதப் பிறப்பின் இயல்பு! ஆனால், பிறந்த குழந்தை அழவும் இல்லை; சிரிக்கவும் செய்யவில்லை; இது இயல்புக்கு முரணாக இருந்ததால், குழந்தைக்கு மாறன் எனப் பெயர் சூட்டினர் பெற்றோர்.
மிகக் கொடூரமானது கலியுகம். இறைவனை ஒதுக்குபவர்களும், அவனை வெறுப்பவர்களும் மலிந்திருக்கிற இந்தக் கால கட்டத்தில் வேத- வேதாந்தங்களை அறிந்தவராக, தமிழ்மொழியை வளப்படுத்தப் பிறந்தவராக, உலக நன்மையின்பொருட்டு ஆழ்வார் தோன்றிவிட்டார் எனப் பெரியவர்கள் பலரும் கொண்டாடினர்.
மாறன் வளர்ந்து வரும் வேளையில், அவனுடைய பெற்றோருக்கு வருத்தமும் துக்கமும் அதிகரித்து வந்தது. காரணம்... எந்தக் கட்டத்திலும், குழந்தையின் இயல்புக்குத் தக்கபடி இல்லை மாறன். தவிப்பும் ஏக்கமுமாக ஒருநாள், திருக்குருகூர் ஸ்ரீஆதிநாதன் சந்நிதிக்கு மகனை அழைத்து வந்தனர் பெற்றோர்.
அங்கே... ஆலயத்தில் உள்ள புளியமரத்தடியில், மாறனை எவரும் அறியாதபடி விட்டுச் சென்றனர். பெருமாளின் சேனைத் தளபதியான ஸ்ரீவிஸ்வக்சேனர் மாறனைச் சந்தித்தார். அவனது திருத்தோளில் சங்கு மற்றும் சக்கரத்தைப் பொறித்து, மெய்ஞ்ஞானத்தை உபதேசித்துச் சென்றார்.
அதையடுத்து மாறன் என்ன செய்தார் தெரியுமா?
உண்ணாமல், உறங்காமல், அந்தப் புளியமரத்தடியில் அமர்ந்து, சுமார் 16 வருடங்கள் வரை கடும் தவத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது ஒருநாள்... வடக்கே யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி ஆழ்வாருக்கு, தென்திசையில் இருந்து வந்த ஒளியன்று கண்ணில்பட்டது. அதில் பரவசமானவர், அந்த ஒளிப்பிழம்பு தோன்றிய திசையிலேயே பயணித்து, ஆழ்வார்திருநகரிக்கு வந்து சேர்ந்தார்.
அங்கே... புளியமரத்தடியில் அமர்ந்திருந்த நம்மாழ்வாரைக் காட்டிவிட்டு, அவருக்குள் புகுந்துகொண்டது அந்த ஒளி. உடனே மதுரகவி ஆழ்வார், தவநிலையில் மூழ்கியிருந்த நம்மாழ்வாரின் மீது சிறிய கல் ஒன்றை எறிய... கண் விழித்தார் நம்மாழ்வார். பிறகு, மதுரகவி ஆழ்வார் கேட்ட கேள்விகளுக்குத் தகுந்த பதில் அளித்தார். அதில் நெகிழ்ந்த மதுரகவி, நம்மாழ்வாரையே தன்னுடைய குருநாதராக ஏற்றுக்கொண்டார். அவருக்குத் தொண்டுகள் செய்வதையே தன் கடமையாகக் கொண்டு செயல்பட்டார்.
இறைவனை நினைத்து உருகி உருகி, தேமதுரத் தமிழால் நம்மாழ்வார் தொடுத்த பாமாலைகளையெல்லாம் ஓலையில் எழுதி, அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்த்த பெருமை மதுரகவி ஆழ்வாரையே சாரும்.
நான்கு வேதங்களின் சாரமாக திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி எனும் நான்கு திவ்விய பிரபந்தங்களை அருளிச் செய்தார். அது மட்டுமின்றி, 'இறைவன், நம்மால் அடைவதற்கு அரியவன்' என எண்ணி ஏங்கியிருந்த மக்களின் மனங்களை, இறைவன்பால் சேர்த்து வைத்த பெருந்தகையாளர் நம்மாழ்வார்!
தெய்வம், வேதத்தின் முன்னே செல்லக்கூடும். பிரம்மன் முதலான தேவர்களுக்கும், அவர்களின் ஞானத்துக்கும் எட்டாதபடி பெருமானால் முன்னே செல்ல முடியும். ஆனால், 'நம்மாழ்வாரது ஒரு பாடல், ஒரு அடி, ஒரு வரி, ஒரேயரு எழுத்து... இதன் முன்னே செல்ல பகவான் சக்தியுடையவன் அல்லன்' என்று வியந்து போற்றுகிறார் கம்பர். 'பிறவி எனும் நோய் போம் மருந்து திருவாய்மொழி' எனப் போற்றுகிறார் கம்பர்.
'வேதங்களுக்குப் பொருள் சொல்கிறேன் என்று கூறி, தன் மனம் போன போக்கில், பலரும் பொருள் உரைத்ததால், இளைத்துப்போனது வேதம். எவருடைய நாவில், தாம் சென்று அமர்ந்தால் தீம்பொருளாக வெளிப்படாமல், நற்பொருளாக வெளிப்படுவோம் என ஆராய்ந்ததாம் நான்கு வேதங்களும்! தங்களின் உண்மைப் பொருளை, உலகத்தார் அறியவேண்டும் எனில், ஆழ்வாரின் நாவில் அமருவதே நல்லது எனத் தீர்மானித்து, வேதங்கள் நான்கும் ஆழ்வாரின் நாவில் குடியேறின. இதனாலேயே, என்னால் வேதத்தின் பொருளை உணரமுடிந்தது' என்று நம்மாழ்வாரை சிலாகிக்கிறார் வேதாந்த தேசிகர்.
'உண்டோ, வைகாசி விசாகத்துக்கொப்பொரு நாள் உண்டோ? சடகோபர்க்கொப்பொருவர் உண்டோ? திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ? ஒரு பார் தன்னில் ஒக்குமூர்' என்று நம்மாழ்வார் அவதரித்த திருநட்சத்திர நாளான வைகாசி விசாகத்தின் பெருமை, நம்மாழ்வாரின் ஏற்றம், திருவாய்மொழியின் தன்னிகரற்ற சிறப்பு, அவரின் அவதார ஸ்தலமான திருக்குருகூரின் உயர்வு... ஆகியவற்றுக்கு இணையேதும் உண்டா எனக் கொண்டாடுகிறார் மணவாள மாமுனிகள்.
'உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்' என்று 'வாஸூதேவஸ் ஸர்வம்' என வாழ்ந்தவர் நம்மாழ்வார்.
இந்த வைகாசி விசாகத் திருநாளில், நம்மாழ்வாரை வணங்குவோம்; வாழ்வில் வளம் பெறுவோம்!
 
 

Comments