ஜெயம் தரும் ஐஸ்வர்ய லட்சுமி

திருச்சி மாவட்டம் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் ஐஸ்வர்ய லட்சுமியை தரிசிக்கலாம். சிவபெருமானின் தரிசனம் வேண்டி, மகாலக்ஷ்மி இத்தலத்துக்கு வந்து ஈசனை நினைத்து தவம் செய்தார். இறைவன் அவளுக்கு காட்சி தரவில்லை. எனவே தன்னை ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ இலை மழை பொழிந்து பூஜை செய்தாள். அதன் பின் ஈசன் அவளுக்கு காட்சி தந்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால், ஸ்ரீ வத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமி தேவிக்கு அளித்து, சகல செல்வத்துக்கும் அதிபதி ஆக்கினார்.
இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு அவரவர், பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை அருளும் படி கூறினார். இங்குள்ள தேவி, அபய வரத திருக்கரங்களோடு, மேலிரு கரங்களில் தாமரை மலருடன் காட்சி தருகிறாள். இங்குள்ள தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் எனப்படுகிறது. ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்யும் முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள். இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்தாள். எனவே நகை செய்பவர்கள் தங்கள் தொழில் அபிவிருத்திக்காக இங்கு வருகிறார்கள். 16 வகையான அபிஷேகம் செய்து, 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களையும் நீக்கி, ஐஸ்வர்யத்தை அள்ளித்தருவாள் இந்த ஐஸ்வர்யா.
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் சாலையில் 32 கி.மீ. தூரப் (முசிறியிலிருந்து 8 கி.மீ.) பயணத்தில் இக்கோயிலை அடையலாம்.
-பொன்னம்மாள், அம்பத்தூர்.
எண்ணியது தரும் எல்லையம்மன்
தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் படப்பை வாலாஜாபாத் சாலையில் ஒரக்கடத்தை அடுத்து உள்ளது எல்லையம்மன் திருக்கோயில்.
கிருஷ்ண தேவராயர் ஊத்துக்காடிற்கு வேட்டையாட வந்தபோது களைப்பாகி ஒரு வேப்ப மரத்தடியில் ஓய்வெடுத்தார். அவருடன் வந்திருந்த பைரவர் எனும் நாய்க்குட்டி தண்ணீரைத் தேடி அலைந்து கண்டுபிடித்தது. அவரை எழுப்பி நீர் நிலைக்குக் கொண்டுசென்றது.
நீரை அருந்தும்போது அரசர் ஓர் எலுமிச்சம்பழம் ஏரியில் மிதப்பதைக் கண்டார். அதைத் தொடர்ந்து இரண்டரை அடி உயரமுள்ள அம்மன் சிலையும் மிதந்து வந்தது. ஒரு சிறிய கோயிலை அமைத்து சிலையை பிரதிஷ்டை செய்தார். அப்படித் தேடி வந்து அருளைத் தந்து கொண்டிருப்பவள்தான் ஊத்துக்காடு எல்லையம்மன்.
இன்றும் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாய் விளங்குபவள். எதை மனதில் எண்ணி வேண்டினாலும் வேண்டிய வரம் கிட்டும். அவளுக்கு நன்றிக் கடனாய் மக்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். சித்திரை மாதம் பிரம்மோத்சவம் வெகு விமரிசையாக நடக்கும். சுற்று வட்டாரக் கிராமமக்கள் மாட்டுவண்டி கட்டிச் செல்வதைக் கண்டு ரசிக்கலாம். பக்தர்கள் மஞ்சள் உடை அணிந்து விரதமிருந்து தீ மிதிப்பார்கள். ஆடி மாதமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சில வருடங்களுக்கு முன்பு கோயிலை விரிவுபடுத்தி ராஜகோபுரம் கட்டப்பட்டது. கோயிலின் வெளிப் பிராகாரத்தில் விநாயகர், துர்க்கை, ஏழு அண்ணன் மார்கள், நவக்கிரஹம், எல்லையம்மன் மற்றும் காலபைரவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மனதை உருக்கும் எல்லையம்மன் கோயிலுக்குச் சென்று வேண்டி, வேண்டிய வரம் பெறலாம்.

Comments