வழக்குகளைத் தீர்த்து வைக்கும் தெய்வங்கள்!

நமது பக்கம் நியாயம் இருந்தும் நீதிமன்றத்தில் வழக்கு இழுத்துக்கொண்டே செல்கிறதே’ என்று கலங்கி நிற்பவர்கள், அவர்களுக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைக்க, விழுப்புரம் பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய, வழக்கு விரைவில் முடிவதோடு சாதகமான தீர்ப்பும் கிடைக்கும். அது முடியாதவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வெற்றிலை மாலை, வடை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட, நல்ல பலன் கிடைக்கும். மேலும் அஷ்டமி தினங்களில் பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் செய்து அனைவருக்கும் பிரசாதமாகத் தர, வழக்கு சம்பந்தமான பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்புக் கிடைக்கும்.
காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ளது பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோயில். நீண்ட காலமாகத் தீராத வழக்குகளைத் தீர்த்து வைக்கும் மிகச் சிறந்த வரப்ரசாதியாகத் திகழ்கிறார் இத்தல ஈசன். சட்ட ரீதியான, நியாயமான வழக்குகளில் இருந்து தீர்வு கிடைப்பதற்கு, பக்தர்கள் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இக்கோயிலில் 16 வாரங்கள் திங்கள்கிழமைகளில் நெய் தீபமேற்றி, சிவபெருமானை வலம் வந்து வழிபட்டால் தீராத வழக்குகளும் தீர்ந்து, அதில் வெற்றியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விருத்தாசலம், மணவளநல்லூரில் உள்ளது கொளஞ்சியப்பர் கோயில். இங்கு ‘பிராது கட்டுதல்’ எனும் வழிபாடு நடைமுறையில் உள்ளது. ஒரு வெள்ளைத்தாளில், ‘மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு...’ என ஆரம்பித்து, தாம் எந்த ஊரில் இருந்து வருகிறோம், தமது கோரிக்கை என்ன என்பதை தெளிவாக எழுதி, அதை கோயிலில் உள்ள சிவாச்சாரியாரிடம் கொடுத்தால், அவர், இறைவன் காலடியில் வைத்து பூஜித்து பொட்டலமாக்கி நம்மிடம் தருவார். அதை முனியப்பர் சன்னிதியில் இருக்கும் வேலில் சிறு நூலில் கட்டிவிட்டு வந்து விடவேண்டும். இந்த வேண்டுதல் நியாயமாக இருக்கும்பட்சத்தில் 90 நாட்களில் அது நிறைவேறி விடுவது உறுதி.

Comments