கல்யாணம் கைகூட ‘கல்யாண அர்ச்சனை’!

எத்தனையோ கோயில், குளம்னு பாத்தாச்சு, வேண்டாத தெவமில்ல, பாக்காத ஜோசியர் இல்ல. ஆனா, கல்யாணமே கை கூட மாட்டேங்குது"னு அலுத்துக் கொள்பவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம், திருமணஞ்சேரியில் அருள்பாலிக்கும் உத்வாகநாதர் கோயிலில் குடிகொண்டிருக்கும் கல்யாணசுந்தரரை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்பது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை.
திருமணப் பிரார்த்தனைக்காக இத்தலத்தில் நடைபெறும் ‘கல்யாண அர்ச்சனை’ இங்கு மிகப் பிரசித்தம். இந்த கல்யாண அர்ச்சனைக்கு இரண்டு மாலை, இரண்டு தேங்காய், மஞ்சள், குங்குமம், கற்பூரம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், கற்கண்டு போன்றவற்றை வாங்கிச் சென்று சுவாமிக்கு சமர்பித்து அர்ச்சனை செய்யவேண்டும். இரண்டில் ஒரு மாலையை திருமண வரம் வேண்டி அமர்ந்திருப் போருக்கு அர்ச்சகர் அணிவித்துத் தருவார்.
இங்கு அர்ச்சித்துத் தரப்படும் எலுமிச்சம் பழம் ஆரோக்யத்தையும், மாலை சந்தோஷத்தையும், விபூதி இஷ்ட பூர்த்தியையும், குங்குமம் லட்சுமி கடாட்சத்தையும், மஞ்சள் சுப காரிய அனுகிரகத்தையும் அளிக்கும். எலுமிச்சம் பழத்தை மறுநாள் காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு சாறு பிழிந்து அருந்த வேண்டும். பிறகு, கீழ்காணும் சுலோகத்தை காலை, மாலை இருவேளையும் 18 முறை வீதம் 45 நாட்கள் பக்தியோடு சொல்லிவர விரைவில் திருமணம் நடை பெறும் என்பது நிச்சயம்.
தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் பிரியபாமினி
விவாக பாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம் ச தேஹி மே
பதிம் தேஹி சுகம் தேஹி
சௌபாக்யம் தேஹி மே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே சிவ சுந்தரி
காத்யாயனி மகாமாயே
மகா யோக நிதீஸ்வரி
நந்தகோப சுதம் தேவம்
பதிம்மே குருதே நம:

திருமணம் முடிந்தபின் தம்பதி சமேதராக அர்ச்சகர் அணிவித்த மாலையை எடுத்துச் சென்று சன்னிதியில் சமர்ப்பித்து, கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.
செல்லும் வழி: கும்பகோணத்திலிருந்து 29 கி.மீ., மயிலாடு துறையிலிருந்து 15 கி.மீ. தொலைபேசி:+914364 235 002.

Comments